#சிங்கை_உலா
சென்ற (2017) கோடையில்
நாங்கள் ஆறுபேர் சிங்கப்பூர் போய் வந்தோம். என் மூத்த மகள் மொபைலில் எனக்கு 70
வயதுக்கு வாழ்த்துச் சொன்னாள். ”Bapa! உனக்கு பிறந்த நாள் கிஃப்ட் தருகிறேன்” என்றாள்.
“எனக்கா? “
“ஆமாம்.உன்னை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறேன். அம்மாவுக்கு தங்கை ஸ்பான்சர் பண்ணட்டும்..நான் குழந்தைகளுடன் வருகிறேன்” என்றாள்.
நான் இந்த கிஃப்டை எதிர்பார்க்கவில்லை. 50 வருடங்களுக்கு
முன் ஒரு ஜோசியர் என் ஜாதகத்தைப் பார்த்து, “உன் வாழ்வில் வெளிநாட்டுப் பயணமே
கிடையாது” என்று ஒரே போடாய்ப் போட்டார். நானும் நம் கதி அவ்வளவுதான் என்று
இருந்துவிட்டேன்.
என் பெண்கள் இருவரும் நல்ல MNC யில் வேலை. ஒருவராவது அமெரிக்கா போய் செட்டில் ஆவார்கள், அந்த சாக்கில் போகலாம் என்றால் அவர்கள் இந்தியாதான் பெஸ்ட் என்ற மனநிலை எடுத்துவிட்டார்கள். மூத்தவள் மட்டும் அமெரிக்கா, சாங்காய் என்று போனாள் கம்பெனி நிதியில். அமெரிக்காவுக்கு 15 தடவை போய் வந்துவிட்டாள். ஒருமுறை ஃபோன் செய்தாள். “நான் ட்வின் டவரில் இருக்கிறேன்” என்று.. பில் லேடன் அதையும் தரை மட்டம் ஆக்கிவிட்டான். அந்த நாட்டின் எல்லா முக்கிய இடங்களையும் வீக் எண்டில் அங்கிருக்கும் தன்னுடன் படித்த தோழிகளுடன் பார்த்துவிட்டாள். இப்போது போனால் தோழிகள் வீட்டில் நம் சாப்பாடு சாப்பிடத்தான்.
இப்போது சிங்கப்பூரைப் பார்க்க அழைத்துப் போகிறேன் என்கிறாள். அந்த ஜோசியர் முகம் மனக்கண்ணில் blurring ஆக வந்தது. பாவி அவன் வாக்கு பலித்துவிட்டால்? பயம் வந்தது.
”எந்த டூர் பேக்கேஜ்? யாருடன் போகிறோம்?” என்றேன் அவளிடம்.
”நோ பேக்கேஜ். அவர்களுடன் நாம் ஓடவேணும். எதையும் ரசிக்கமுடியாது..நாமே போகிறோம்!” என்றாள் மூத்த பெண்.
அவள் கூகுள்
செய்து, சிங்கப்பூரில் காணவேண்டிய இடங்களையும் ஐந்து பக்கங்களில் குறிப்பெடுத்து, என் மெயிலுக்கும் அனுப்பிவிட்டாள்.
ஐந்து நாள் விஜயமாக விமான டிக்கெட், ஓட்டல் புக் செய்து, ஜிமெயிலில் அனுப்பிவிட்டாள். அவள் இருப்பது பெங்களுரில். நாங்கள் சென்னையில். விசாவுக்கு நாங்கள் மூன்று பேர் சென்னையில் வாங்கினோம். அவர்கள் மூன்று பேர் பெங்களூரில் வாங்கினார்கள்.
ஏப்ரல் 12 ல் அனைவரும் சென்னையில் இண்டிகோ விமானம் ஏறினோம்..நான்கு மணி நேரப் பயணம். போய் சேர்ந்தபோது பகல் ஒரு மணி. நம்மை விட அவர்கள் இரண்டரை மணி நேரம் அதிகம்.
முதலில் இறங்கியதும் என் பழைய ஜோசியர் காணாமல் போனார்.
வெளிநாட்டில் கால் பதித்துவிட்டேன்!
விமான நிலையம் முழுதும் கார்ப்பெட் போட்டிருக்கிறார்கள். நம்மை முதலில் கவர்வது அதுதான். ஹைடெக் விமான டெர்மினல்கள். மகள் சொன்னாள்: “ Bapa, நிஜமாகவே இது ஹைடெக் ஏர்போட்தான்!” பல டெர்மினல்களைப் பார்த்தவள் சொல்கிறாள். விமான நிலையத்தில் எல்லா இடத்திலும் தமிழ் ஆட்சி செய்கிறது. மூன்று மொழிகள். அதில் தமிழ் ஒன்று. அதுவும் நல்ல தமிழ்! டாக்சியில் ‘லிட்டில் இந்தியா’ வில் இருக்கும் ஓட்டலுக்கு வந்தோம். மூன்று அறைகள் எடுத்திருந்தோம்.
லிட்டில் இந்தியாவில் எங்கு காணினும் தமிழ் எழுத்துக் கடைகள். மாலை ஐந்து மணியளவில் கோமள விலாஸில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு ஓட்டலுக்கு
வெளியில் வந்தோம்.
“Bapa! நான் முதலில் இந்த ஊர் சிம் ஒன்றை செல்போனில் போட்டுக் கொள்கிறேன்!” என்றாள் மகள். 15 டாலருக்கு ஏழு நாள் சிம் டீலிங்கில் கிடைத்தது. அதற்கு பாஸ்போர்ட்தான் ஐடி.. மெஷின் ஸ்கேன் செய்து உடனடியாக சிம் கிடைத்துவிட்டு ஆக்டிவேட் ஆகிவிட்டது. போனில் டாக்சி ஆப் ஒன்றை போட்டுக் கொண்டாள். டைப்பினாள். கூப்பிட்டாள். ஐந்து நிமிடத்தில் டாக்சி ஹோட்டல் முன்னால் வந்தது. அதன் டேஷ்போர்டு அத்தனை ஹைடெக். திரையில் பின்புறம், பக்கவாட்டுகள் என சாலை தெரிந்தது.
என்ன ஒரு டிசிப்ளின்! சாலையைக் கடக்கும் இடத்தில்தான் மக்கள் கடக்கிறார்கள் அதுவும் பச்சை எரிந்தால். டாக்சிகள் நடு இரவில் கூட ரெட் சிக்னலில் நின்று பச்சை வந்ததும் கிளம்புகிறது--ரோடுகளில் வண்டிகள் இல்லையென்றாலும்.
முதலில் சிங்கப்பூர் ஃப்ளை ஓவர் என்ற இடத்திற்குப் போனோம்.அது ஒரு ராட்சத ராட்டினம். அதன் கேப்ஸ்யூல்கள் பிரமாண்டம். நாலா புறமும் அதில் கண்ணாடிகள். வெளியே ரசிக்கலாம். மெதுவாக இஞ்ச் இஞ்சாக மேலே ஏறுகிறது. இரவில் ஊர் சொர்க்க புரியாகத் தெரிந்தது. கடல் மேல் கட்டியுள்ள ஒரு கால்பந்து மைதானம் புள்ளியாகத் தெரிந்தது. வெளியில் வந்து ஒரு டாக்சி பிடித்து, ஜூவுக்குப் போனோம். அந்த டிக்கெட்டில் இரண்டு நாள் ஜூவில் பார்க்கலாம். இன்று ராத்திரி ஒருமுறை. மூன்றாவது நாளுக்கு பகலில் அதே ஜூ.
இரவு சஃபாரி என்று ஜூவில் ஒரு ட்ராமில் மெதுவாகப் பயணம். மிருகங்களைப் பார்த்துவிட்டு என் பேத்திகள் உற்சாகமாகக் கத்தினார்கள். கிடைத்த ரொட்டி, ஐஸ்க்ரீம் சாப்பிட்டுவிட்டு ஹோட்டலுக்கு ராத்திரி ஒரு மணிக்கு வந்தோம்.
அடுத்த நாளில் காலையிலேயே கோமள விலாஸில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு லிட்டில் இந்தியா MRT க்கு போனோம். அங்கே டிக்கெட் கவுண்டரில் “இந்தியாவா” என்று கேட்டுவிட்டு ஒரு பேக்கேஜ் சொன்னான். ஆறு பேருக்கும். 160 சிங்கப்பூர் டாலர். மெட்ரோவில் போகலாம், பஸ்ஸில் போகலாம். கடைசி நாளில் மாலை 7 மணிக்கு ஸ்மார்ட் கார்டு டிக்கெட்டுகளை சரண்டர் செய்துவிட்டால் 60 டாலர் வாபஸ் என்கிற டீல்.
கடைக்குட்டி பேத்தி கூட தன் ஸ்மார்ட் கார்டை ஸ்வைப்
செய்தாள் எளிதாக.
பஸ்ஸில் பெண் ஓட்டுநர். அவர் பக்கத்தில் மெஷ்னில் ஸ்வைப் செய்யவேண்டும். பச்சை எரிகிறது. நோ கண்டக்டர். இறங்குமுன் ஸ்வைப் செய்தால்தான் கதவே திறக்கிறது. யாரும் ஏமாற்றி வித் அவுட்டில் வந்து தலைவராக முடியாது. சில பேர் பாவம். Expiry smart card வைத்திருந்ததால் அவர்களாகவே இறங்கிவிட்டனர். சார்ஜ் செய்ய ஓடினர். பச்சை ஒளிராமல் சிவப்பு வந்து அவர்களை எச்சரிக்கிறது. பஸ்ஸில் ஆளில்லாவிட்டால்கூட சரியான நேரத்துக்குக் கிளம்பிவிடுகிறது.
பஸ்ஸில் பெண் ஓட்டுநர். அவர் பக்கத்தில் மெஷ்னில் ஸ்வைப் செய்யவேண்டும். பச்சை எரிகிறது. நோ கண்டக்டர். இறங்குமுன் ஸ்வைப் செய்தால்தான் கதவே திறக்கிறது. யாரும் ஏமாற்றி வித் அவுட்டில் வந்து தலைவராக முடியாது. சில பேர் பாவம். Expiry smart card வைத்திருந்ததால் அவர்களாகவே இறங்கிவிட்டனர். சார்ஜ் செய்ய ஓடினர். பச்சை ஒளிராமல் சிவப்பு வந்து அவர்களை எச்சரிக்கிறது. பஸ்ஸில் ஆளில்லாவிட்டால்கூட சரியான நேரத்துக்குக் கிளம்பிவிடுகிறது.
மெட்ரோவில் அனைவர் கையிலும் ஸ்மார்ட் ஃபோன்கள். நோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். யார் ஏறி இறங்கினாலும் கவலையில்லை. ஆனால் தங்கள் இடம் வந்தால் டபக்கென்று இறங்கிவிடுகிறார்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment