Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Monday, September 3, 2018

அவரும் அவளும்

(ஜனவரி 1968ல் கலைமகள் பத்திரிகையில் நான் எழுதிய சிறுகதை. எப்போதும் என் ஃபேவரிட் விகடன்தான். எனது இந்தக் கதையை ரிஜக்ட் செய்துவிட்டது. நான் கலைமகள் பத்திரிகைக்கு அனுப்பினேன். சில சொற்களை மட்டும் மாற்றிப் பிரசுரித்தார்கள். )


அவரும் அவளும்…..( கலைமகள் )
                 அனந்தசாய்ராம் ரங்கராஜன்
  கையில் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஜங்க்‌ஷனுக்குக் கிளம்பினார் மாதவன். வழுக்கை விழுந்திருந்த அவருடைய தலை சூரிய ஒளியில் பளபளத்தது. வீட்டு வாசல்வரை வழியனுப்ப வந்த சகுந்தலா கொஞ்ச நேரம் முன்பு அவரிடம்முணுமுணுத்தது நினைவுக்கு வரவே, அவர் தமக்குள் சிரித்துக்கொண்டார்.
    “சீக்கிரம் வந்துவிடுங்கள். அங்கே அதிக நாள் தங்காதீர்கள். என்னையும் குழந்தைகளையும் மறந்துவிடாதீகள்” என்றுதானே அவள் முனகிக்கொண்டாள்? அவர் பெங்களூருக்குப் போனால், தன்னையும் குழந்தைகளையும் மறந்து விடுவாரோ என்று எண்ணிக்கொண்டு அவள் தவிக்கிறாள். முப்பது வருஷமாகத் தாம்பத்தியம் நடத்தியும் அவளுக்கு அத்தகைய சந்தேகம் ஒவ்வொரு முறையும் ஏற்படுவதற்குக் காரணம் அந்த சுசீலா தான்.
   சுசீலா அவருடைய அங்கீகரிக்கப்படாத மனைவியாகத் திகழ்ந்தாள். பெங்களூரில் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள். அவளிடம் மாதத்துக்கு  இரு முறையாவது சென்று மனம்விட்டுப் பேசாவிட்டால் மாதவனுக்கு என்னவோபோல ஆகிவிடும். அவர்கள் இருவருக்கும் உள்ள பழக்கம் நட்பு  என்ற சொல்லில் அடங்குவதா, காதல் என்னும் சொல்லில் அடங்குவதா என்பதைக் கூற முடியாது. அவர்களுக்கே அதைப்பற்றிய நிர்ணயமில்லை.
    சகுந்தலா அவளைப் பார்த்ததில்லை. அவளுடைய பெயரே அவளுக்குப் பிடிக்காதிருக்கும்போது, முகத்தைக் கண்டால் மட்டும் பிடிக்குமா என்ன? ஆனால் மாதவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பிறந்த ஐந்து பெண்களுக்குள் ஒருத்திக்குச் சுசீலா என்றே பெயரிட்டு வாய்நிறைய அழைத்தார். சொல்லப்போனால் அவள்தான் அவருடைய செல்வப் பெண். சகுந்தலா மட்டும் அந்தப் பெயரால் தன் பெண்ணை அழைக்காமல் வேறு பெயரால்தான் அழைத்தாள்.
    எனவேதான் கணவர் பெங்களுருக்குப் புறப்படும்போதெல்லாம் அவள் குடிமுழுகிப் போனதுபோல் தவித்துப் போவாள். இத்தனைக்கும் சுசீலாவினால் அவளுக்கு எந்தவிதக் கஷ்டமும் வந்ததில்லை. ரெயில்வே பார்சல் கிளார்க் உத்தியோகத்தில் தமக்கு வரும் சம்பளத்தில் சிறு பகுதியை அவளுக்கு அவர் அனுப்புவதைக் கண்டுதான் மனத்தாங்கல் சகுந்தலாவுக்கு. ”நீ சும்மா இரு, சகுந்தலா. நல்ல உள்ளம் கொண்ட ஒருத்திக்கு நான் இந்தத் தொகையைக் காணிக்கையாகச் செலுத்துகிறேன். அதை நீ தடுக்காதே” என்று அவர் கூறிவிடுவார்.
    ‘எனக்கு வாழ்நாளெல்லாம் சுசீலாவைப் பிடி்ககும்போல் இருக்கிறது. ஆனால் சகுந்தாவுக்கு வாழ்நாள் முழுவதும் அவளைப் பிடிக்காது. விதிகூட அவள் பக்கந்தான். ஒருவேளை நான் சுசீலாவைப் பார்க்கப்போவது இதுதான் கடைசி முறையோ என்னவோ’ என்று நினைத்துக்கொண்டே செல்கையில், அவர் உள்ளம் இனம் புரியாத கலவரத்துடன் துடித்துக்கொண்டது.
    அவர் எதிரே ஏலகிரி மலை உயர்ந்து கம்பீரமாக நின்றது. வெள்ளிப் பாளங்களான மேகங்கள் மலையைத் தழுவியவாறு மிதந்தன. ஒரு காலத்தில் பெங்களூர் புறப்படும்போதெல்லாம் அவர் நெஞ்சம் அந்த மேகங்களைப்போல் இன்பத்தில் மிதந்திருக்கிறது. ஆனால் இன்று? அதே மேகங்கள் திடீரென்று பாறைகளாக மாறி, கனம் தாங்காமல் பூமியில் விழுந்துவிடுவதைப்போல அனுபவித்த இன்பங்களும் விழுந்துவிட்டன.
    அந்த வீழ்ச்சியின் உருவமாகத்தான் தள்ளாடியவறு ஜங்க்ஷனுக்குச் சென்றார். அங்கே அவர் காத்திருந்த அரைமணி நேரத்தில் ‘பிருந்தாவன்’ வந்துவிட்டது. அதில்  ஏறிப் பெஞ்சி ஒன்றில் அமர்ந்தார்.
     இரண்டு நிமிடத்தில் எக்ஸ்பிரஸ் ஜோலார்ப்பேட்டையை விட்டுக் கிளம்பியது. தம்முடைய சிந்தனைகளை ஒரு கணம் நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளி்யே பார்த்தார். பெங்களூர்ப் பாதையில் எக்ஸ்பிரஸ் அரை வட்டமாக மேற்குப் புறம் திரும்பியவாறு சென்றது. ரெயிலின் முன்புறமும் பின்புறமும் இருபக்கமும் பார்த்தபோது தெரிந்தன.. ‘ வாழ்க்கையில் கூடத் திருப்பங்கள் வந்தால்தான் அதன் முன்னிலையும் பின்னிலையும் தெரியும் போலிருக்கிறது. நேராக எவ்வித மாற்றமும் இல்லாமல் செல்லும் வாழ்க்கையில் முன்னால் இருப்பதுதான் தெரியும்; பின்னால் இருப்பது தெரியாது போலும்’ என்று ரெயிலை நினைத்து வாழ்க்கையை அளந்தார் மாதவன்.
     திடீரென்று பிரயாணிகள் கண்ணாடிக் கதவுகளைச் சாத்தத் தொடங்கினர். ‘பிருந்தாவன்’ புகைக்குப் பதிலாக அதன் வேகத்தில் மண்ணை வாரி அடித்தது.
  ‘ஸார்! உங்களண்டை இருக்கும் ஜன்னலைச் சாத்துங்கள். மண்தூசு விழுகிறது” என்றார் ஒரு பிரயாணி.
    மாதவன் அப்போதுதான் தம் மேல் மண் விழுவதை உணர்ந்தார்.. உடனே ஜன்னலை மூடினார்.
     ஆனால் அவர் உள்ளம் ஊளையிட்டது. ‘ம்..ம்..சுசீலாவின் வாழ்வில் மண்ணையள்ளிப் போட போய்க்கொண்டிருக்கும் என்மேல் எக்ஸ்பிரஸ் மண்ணை வீசுகிறது! அவளால் இன்று நான் தரும் அதிர்ச்சியைக் கட்டாயம் தாங்கிக்கொள்ள முடியாது. நான் போட்ட கடிதம் நேற்றுச் சேர்ந்திருக்கும். என் வருகையை நினைந்து அவள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பாள், பாவம்’
     மலைகள், மரங்கள்,பசும் வயல்கள் எல்லாவற்றையும் சந்திக்கும் அதே வேகத்துடன் விட்டுச் சென்றது ரெயில்.
     “ஸார்! குப்பம் வந்தால் கொஞ்சம் சொல்கிறீர்களா? அந்கே நடந்த விபத்தில் நொறுங்கிப் போன எஞ்சினையும் பெட்டிகளையும் ஒரு பள்ளத்தில் தள்ளியிருக்கிறார்களாம். அதைப் பார்க்கவேண்டும்!” என்று புதிதாகப் பெங்களூர் செல்லும் ஒருவர் சூள் கொட்டினார்.
     அந்தச் சகப்பிரயாணியின் இரக்கம் கலந்த மொழிகள் மாதவனின் சிந்தனையலைகளை மீண்டும் கிளப்பிவிட்டன.. ‘விபத்தை அநுபவித்தவர்களைப் பார்த்து விபத்தை ரசிப்பவர்கள் சூள்கொட்ட நினைக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையில் எல்லாருக்கும் எப்படியாவது ஒருவிதத்தில். விபத்து வந்துதான் தொலைக்கிறது. நான் சுசீலாவைச் சந்தித்ததே ஒரு விபத்துதான்.. என் மனத்தின் பலவீனந்தான் அந்த விபத்து. சுசீலாவின் அழகிய உள்ளந்தான் விபத்துக்கு உரிய .காரணம்.’.
     ‘அழகிய உள்ளம்’ என்ற தம் வார்த்தைப் பிரயோகத்தை எண்ணி ஒரு கணம் மெய்சிலிர்த்தார் மாதவன். ஆம், அவருக்கு மிகவும் பிடித்தமான சொற்றொடர் அது. எத்தனையோ விதமான பெண்களை அவர் பார்த்திருக்கிறார். அவர்களுடைய உடலழகு அவர் கண்களை உறுத்தியிருக்கிறது. உள்ளத்து அழகை அவர்களுடைய கண்கள் அவருக்குத் தெரியப்படுத்தியதில்லை. பெங்களூர் விசுவேசுவரப் புரத்திலுள்ள ஒரு கோயிலில் சுசீலாவை அவர் சில வருஷங்களுக்கு முன் சந்தித்தார். அவர் தேடிய அழகுள்ளம் கொண்டவள் அப்போதுதான் கிடைத்தாள். அவளும் அவருடைய உள்ளத்தின் போக்கை அறிந்தவளாகக் காணப்பட்டாள்.
     ‘அன்று அவளுடைய அழகுள்ளத்தைக் கண்டு மோகித்துச் சென்றேன். அவள் உடலைவிட உள்ளமே எனக்கு அதிகமாகப் புரிந்திருக்கிறது. அவளை நான் தீண்டியதில்லை. ஆனால், அவள் மனத்தின் தந்திகளை மீட்டியிருக்கிறேன். அந்த ஒலி என் மனத்துக்கு மட்டும் கேட்டிருக்கிறது. அந்தச் சுகாநுபவங்கள் என்னை இப்போது வருத்துகின்றன. நாளுக்குநாள் நான் ஏழையாகிக்கொண்டு வருகிறேன்.என் ஏழைமை அவளுக்குத் தேவையில்லை. அவளிடம் நான் நெருங்க முடியாது. அவள் அழகுள்ளத்துக்கு முன் நான் சிரங்கு பிடித்த உள்ளம் கொண்டவன். என்னை அவள் நல்ல  ரசிகன் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள். நான் அவளை ஆராதனை செய்கிறேன் என்று நம்பியிருக்கிறாள். ஆனால் அதற்கு நான் தகுதியானவனல்ல. குருவியின் தலைமேல் பாறையை வைப்பதைப் போல் அவளுடைய நட்பு எனக்குப் பொருத்தமில்லாதது’.
  எக்ஸ்பிரஸின் ஓயாத இரைச்சல், சந்திக்கும் இயற்கைப் பொருள்களை அதே வேகத்துடன் விட்டுப் போய்க்கொண்டிருந்த அதன் செயலைக் கண்ட மாதவன் சிரித்துக்கொண்டார். ‘போகும் பாதையில் ரெயில் எத்தனையோ பொருள்களைச் சந்தித்துவிட்டு மறந்துவிடுகிறது. மனிதனால் அப்படி இருக்க முடிவதில்லையே. ஒரு முறை சந்தித்த சுசீலாவை அடுத்து அடுத்துச் சந்திக்க ஆசைகொண்டேன் அந்த நாளில். அவள் நல்ல இலக்கியமாகத் திகழ்ந்தாள். அவள் பேச்சுக்கள் முத்துக்களாய்ச் சிதறின. அவள் ஓர் ஆசிரியை; அப்படித்தான் பேசுவாள். நான் அவளிடம் மாணவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் காதலனாக எடுத்த எடுப்பிலேயே ஆகிவிட்டேன். காதலுக்குக் காதலர்களைப் பிரிக்கும் எண்ணமே அதிகம்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார் மாதவன்.
     ‘அவளுடைய காதல் விசித்திரமானது. என்னைக் கல்யாணமனவன் என்று தெரிந்து கொண்டும் அவள் காதலித்தாள். என் மனைவி மக்களுக்கு அதனால் கஷ்டம் வரக்கூடாது என்பதை ஒரு பிரதிக்கினையாக வைத்துக்கொண்டே அவள் சிறிதும் வெறியில்லாமல் பழகினாள். எனக்கு இன்றுகூட ஆச்சரியமாக இருக்கிறது. காதலில் சிறிதும் வெறியில்லாமல் இருப்பது எங்கேயவது உண்டா? அவள் அந்த வெறிக்கு ஆட்படாவிட்டாலும் நான் ஒரு சமயம் ஆளானேன். ஆண் சஞ்சலமானவந்தான். தேன் சுவைக்கும் வண்டு. அவள் உடலை நான் தீண்டிய அடுத்த நிமிடம் அவள் மனம் என்னை மறந்துவிடும் என்று பயமுறுத்திவிட்டாள். அவள் கொள்கை அத்தகையதுதானாம். ஆணுடன் வெறியில்லாமல் பழக முடியும் என்பதை எடுத்துக்காட்டுபவளாம் அவள். என்னுடன் மட்டுமே அவள் பழகினாள். எனினும் அவள் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை. அவளுக்கும் வயதாகிவிட்டது. ஆனல் அவள் நெருப்பு. அவள் மற்றவர்களுக்கு வெப்பம் போன்றவள்.. எனக்கு மட்டும் குளிர்ச்சி. நான் இதுவரை ஏதோ பணவுதவி செய்திருக்கிறேன். அவள் கேட்டதில்லை எதுவும். நான் தந்தால் மறுக்கமாட்டாள். இன்று என்னிடம் பணமில்லை. என் புதல்விகளுக்குக் கல்யாணம் கூட இன்னும் செய்யவில்லை. என் ஏழைமை குறித்து அவள் நகைக்கத்தான் நகைப்பாள். அவளுக்கு ஒரு கனகாம்பரப் பூச்சரத்தைதான் எப்போதும் போல் வாங்கிப்போகிறேன். வேறு எந்தப் பயன் தரும் பொருளும் இல்லை. அவள் நட்பு எனக்குப் பாரமாகத்தான் இருக்கிறது. அவளை ஒரு முறை கடைசியாகச் சந்தித்துப் பேசிவிட மட்டும் ஆவல். அதுவே போதும் போல் இருக்கிறது. என் மனம் ரெயிலல்ல; சந்திக்கும் இயற்கைப் பொருள்களை அதே வேகத்துடன் விட்டுவிட்டுச் செல்ல’.
      பெங்களூரில் இறங்கிய மாதவன் ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொண்டு பஸவன்குடிக்கு விடச் சொன்னார். நேஷனல் ஹைஸ்கூல் அருகில் இறங்கி வாடகையைத் தந்துவிட்டு நடந்தார். சுசீலா பணியாற்றும் பள்ளி அங்கே அருகிலேயே இருந்தது. அந்த நேரத்தில் அங்கேதான் அவள் இருப்பாள் என்று என்ணியவராய்ச் சென்று பார்த்தார்.
      சுசீலா இரண்டு நாளாய் உடல்நலம் சரியில்லை என்று லீவு போட்டிருப்பதாகத் தகவல் கிடைக்கவே அவர் மனம் துடிக்க ஆரம்பித்தது. அங்கேயிருந்து சுசீலாவின் வீடு கால் மைல் தூரத்தில் ‘நெட்கலப்பா சர்க்கிளி’ல் இருந்தது. நடையாகவே கிளம்பிவிட்டார்.
       வீட்டை அடைந்தபோது வீட்டு வேலைக்காரி திண்ணை மேல் உட்கார்ந்திருந்தாள்.
        “சுசீலா உள்ளே படுத்துக்கொண் டிருக்கிறாளா?” என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தார்.
        வீட்டு வேலைக்காரி கூறினாள்: “அந்த அம்மாள் இன்று காலையில்தான் எங்கோ புறப்பட்டுப் போனார். உங்களிடம் இந்தக் கவரை கொடுத்துவிடச் சொன்னார்.”
        “அவளுக்கு ஜுரம் என்று ஸ்கூலில் சொன்னார்களே? என்று கவரை வாங்கிக்கொண்ட அவர் கேட்டார்.
         “அந்த அம்மாளின் முகம் காலையில் வாடியிருந்ததுதான் எனக்குத் தெரியும்.”
        மாதவன் அவசர அவசரமாகக் கவரை உடைத்துப் பார்த்தார். அதில் ஒரு ‘செக்’ வைத்திருந்தது.       

     அதனுடன் ஒரு கடிதம் இணைத்திருந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்தக் கடிதத்தை முதலில் அவர் படிக்கத் தொடங்கினார்:
    “என் உள்ளத்தை மிகவும் போற்றிப் பழகிய உத்தமர் மாதவன் அவர்களுக்கு என் வணக்கம். உங்களை நான் வரவேற்காமல் வேலைக்காரி மூலம் வரவேற்கச் செய்ததற்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன். இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் ஒவ்வொரு விநாடியிலும் நான் அதிக தூரம் விலகிப் போய்க்கொண் டிருப்பேன். அதற்குக் காரணம், இவ்வளவு ஆண்டுகளும் உங்களிடம் என் உள்ளத்தை மறைத்தே பழகியிருக்கிறேன் என்பதுதான். அதை நீங்கள் அழகிய உள்ளம் என்று புகழும்போதெல்லாம் நான் ஏற்றுக்கொண்டது நடிப்பு என்பதை எழுத எனக்குக் கூச்சமாக இருக்கிறது.
     என் உருவம் பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்படக் கூடாத உருவம். நான் பால்யத்திலேயே விதவயாகிவிட்ட அபாக்கியவதி. இந்தக் கசப்பான உண்மையை உங்களிடம் மறைத்தே பழகிவிட்டேன். இதைப் படிக்கும் போது நீங்கள் மிகுந்த அதிர்ச்சியுள் ஆழ்ந்திருப்பீர்கள். இன்றுகூட ஒரு கனகாம்பரப் பூச்சரத்தை எனக்காக வாங்கி வந்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அதை நான் பலமுறை நீங்கள் கொடுத்துச் சூடியிருக்கிறேன். இன்று அதைச் சூட முடியாத தயக்கம் ஏற்பட்டதனாலேயே நான் உண்மையைச் சொல்லிக்கொண்டு விலகிப் போகிறேன்.
       நீங்கள் நினைத்ததுபோல நான் வெறியற்றவள் அல்ல. என் உணர்ச்சிகளை மூடி வைத்தே இருந்தேன். கள்ளம்கபடு அறியாத உங்களுடன் பேசுவதன்மூலம் அந்த வெறியைத் தணித்துக்கொள்ள முயன்றேன். ஒரு முறை நீங்கள் என்னை வெறியுடன் அணுகியபோது நான் தடுத்தது போலித்தனந்தான். அப்போது உள்ளத்தில் ஆசை இருந்தது. ஆனால் அன்று அந்த ஆசைக்குப் பலியாகியிருந்தால் உங்களால் பிறகு நான் ஒரு வேசியாக மதிக்கப்பட்டிருப்பேன். என் மேல் உண்மை அன்பு கொண்டிருக்கமாட்டீர்கள். உங்கள் அன்பைத்தான் தாலியாக மதித்தேன்.. என் வேஷம் என்றாவது ஒரு நாள் வெளியாகிவிடும் என்று நினைத்து அடிக்கடி மனச்சாட்சியின் உறுத்தலுக்கு ஆளானேன்.
          நேற்று உங்கள் கடிதம் கிடைத்ததும் எனக்கு ஓர் உண்மை புலனாயிற்று. ஆமாம், நீங்கள் ஏதோ மறதியாகவோ தவறுதலாகவோ அந்தக் கவரில் வேறு ஒரு கடிதத்தை வைத்துவிட் டிருக்கிறீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்த ஆசாமிக்கு நீங்கள் கெஞ்சியவாறு எழுதியிருக்கிறீர்கள். உங்கள் மகளின் கல்யாணங்கூடப் பணமில்லாமல் தடைப்பட்டிருக்கிறது என்றும் அதில் இருந்தது.. அந்தக் கடிதம் எனக்கு வந்ததனால் முதலில் ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. ஆனால் உங்கள் துன்பம் என்னைக் கலக்கியது. கடிதம் அவ்வாறு மாறிவிட்டாலும் இன்று நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. உங்களிடம் நான் என் மன ஆறுதலுக்காகப் பழகினேன். நீங்களும் என்னால் மன ஆறுதலைப் பெற்றிருப்பீர்கள். அத்துடன் மனத்தால் வள்ளலாயிருக்கும் உங்களை வீட்டு வறுமை வாட்டியிருப்பதை நினைத்து வேதனைப்பட்டேன். இனிமேலும் உங்களிடம் நான் உண்மையை மறைத்துப் பழகுவது தவறு என்று தோன்றியது. இந்தக் கடிதத்தில் ஒரு ‘செக்’கை உங்களுக்காக இணைத்திருக்கிறேன்.அதில் நான் சேர்த்து வைத்துள்ள தொகை இருக்கிறது. அதைத் தயவு செய்து மறுத்துவிடாதீர்கள். இன்று வரை உங்களிடம் உண்மையை மறைத்துப் பழகியதற்கு என் பாவ மன்னிப்பு அது.. என்னைத் தேடாதீர்கள். உங்கள் பெரிய மகளுக்குக் கல்யாணத்தை நன்றாக நடத்துங்கள். என் ஆசி அவளுக்கு. ஒரு விதவையின் ஆசியும் பணமும் தேவையில்லை என்று தயவு செய்து ஒதுக்கிவிடாதீர்கள். என்னை மறக்க முடியாதுதான் உங்களுக்கு. ஆனால் அதுவே என் பாக்கியம்
                                 தங்கள் அன்புள்ள
                                  சுசீலா.
டிதத்தைப் படித்து முடித்தவுடன் சொல்லொணாத உணர்ச்சிகளின் பிழம்பாய் உட்கார்ந்திருந்தார் மாதவன். அவருக்கே தெரியாமல் தவறுதலாக அனுப்பிவிட்ட ஒரு கடிதத்தின் விளைவா இவ்வளவும்? அந்த வீட்டில் அவரும் அவளும் பேசியவாறு அமர்ந்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.
      அந்த வீடு முழுவதும் அவர் சுற்றி வந்தார். வீட்டில் ஒரு சாமான் கூட இல்லை. சுசீலாவின் புகைப்படம் ஒன்று மட்டும் ஒர் அறையில் சுவரில் மாட்டியிருந்தது.. அதை அவர் எடுத்துக்கொண்டார். தமது பையில் இருந்த கனகாம்பரப் பூச்சரத்தை எடுத்தார். அந்தப் படத்துக்கு அணிவித்துவிட்டு, தமது பையில் படத்தையும் வைத்துக்கொண்டார். “சுசீலா! நீ விதவையல்ல. நீ புதுமையான சுமங்கலி. உன் உள்ளம் அழகியதேதான்.. அதில் இவ்வளவு ஏமாற்றங்களும் வேதனைகளும் அடங்கியிருந்தன என்றால் அவை வெளியே தெரியாதவாறு அழகாக நடந்துகொண் டிருக்கிறாய். உன்னிடம் நான் பிரிவு சொல்லிப் போக வந்தேன். நீயே பிரித்துக் கொண்டுவிட்டாய். என் மீது நன்றிச் சுமைகளை ஏற்றிப் போய்விட்டாய். உன்னை நான் மறக்கமாட்டேன்..” அவர் கண்கள் குளமாகிவிட்டன.
       வேலைக்காரி கேட்டாள்: “ அந்த அம்மாள் திரும்பவும் எப்போது வருவார்கள்?”
       மாதவன் அவளை ஏறிட்டுப் பார்த்தார்.. அவருக்குத் தொண்டையை அடைத்தது. பதில் சொல்லாமல் விறுவிறு என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
      “இந்த வீட்டு ராசியோ என்னவோ தெரியவில்லை. வாடகைக்காரர்கள் சந்தோஷமாகப் போவதே இல்லை. அந்த அம்மாள் பத்து வருஷம் இருந்தாள். அவளுக்கும் கடைசியில் சோகமா வந்து தொலைக்கவேண்டும்?” என்று முணுமுணுத்தாள் வேலைக்காரி.
      
      ____________________&&&&&&&&_________________

    

       

     



No comments:

Post a Comment