Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, September 5, 2018

அலைஓசை ஒர் அகராதி


அலை ஓசை- ஓர் அகராதி
(1979 ல் கல்கி பத்திரிகை “அலை ஓசை கருத்தரங்கு” நடத்தியது. அப்போது அந்தப் பத்திரிகை பிரசுரித்த என் ஆய்வுக் கட்டுரை)

அமரர் கல்கி அவர்களின் “அலை ஓசை” நாவலைப் படித்து முடித்தபோது இலக்கியத்தில் ஒன்பது சுவைகளுக்கும் மேலே ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வே ஏற்பட்டது. அதற்கு “கல்கி சுவை” என்றே பெயரிட்டு விடலாமா என்று கூட ஓர் எண்ணம் உண்டாயிற்று. பின்னே என்ன? காதல், சுதந்திர சரித்திரம், மனவிகாரங்கள், தியாகங்கள். பெருமிதங்கள், பெருமூச்சுகள், மின்னலைப்போல குணமாறுதல்கள், கத்தியோடு திரியும் திகிலூட்டும் பெண்கள்,தேர்தல் அட்டூழியங்கள், ‘மிஸோஜினிஸ்ட்கள்’ ‘ஸாடிஸ்ட்கள்’ இட்(id)களுக்கும், சூபர் ஈகோக்களுக்கும் இடையே போராட்டத்தைத் தூண்டிவிடும் ‘ஈகோ’க்கள் இத்யாதி கலவைகளை ஒரே மனிதரால் ஒரே நாவலில் எழுத முடியும் என்றால், அது ‘கல்கி’ ஒருவரால்தான் முடியும் என்பதை “அலை ஓசை” பறைசாற்றுகிறது.

இப்போது கதாசிரியர்களுக்கு ஒரு தணிந்துபோகும் மனப்பான்மை வந்துவிட்டிருக்கிறது. மேலோட்டமாக வெளிப்பூசல்களை அலசி, மனப்போராட்டங்களைத்தான் அதிகமாகச் சித்தரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கல்கியின் இந்நாவல் இத்தனை பெரியதாக இருப்பதற்குக் காரணம், அவர் வெளிப்பூசல், உட்பூசல் இர்ண்டையும் அலசித் தள்ளியிருக்கிறார். அதிலும் கடைசியில் வரும் அத்தியாயங்கள் உண்மையிலேயே நம்மைப் பிரமிப்புக்கு உள்ளாக்குகின்றன.
துரதிருஷ்டவசமாக இந்து-முஸ்லீம் கலவரங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. நிலச்சுவான் -குடிபடை தகராறுகள் இன்றும் உள்ளன. உண்மையான சுதந்திரம் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சூர்யா ஏங்குவதைப்போல இன்றும் நாம் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ராகவனைப் போல உத்தியோகப் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தாரிணிகள் ‘தெரசா’ க்களாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சரஸ்வதி அம்மாள்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் ‘மார்க்கண்டேயினி’களாக உலவி வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பொதுப்படுத்திப் படைக்கப்பட்ட “அலை ஓசை” ஒரு டிக்‌ஷனரி போல் பல விளக்கங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இதில் வரும் தேர்தல் பற்றிய வருணனைகள் இன்றும்கூட பொருத்தமாக இருக்கின்றன. ’எலெஷன் சனியன்’ என்று ஓர் அத்தியாயத்திற்கு அந்தக் காலத்திலேயே பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார் அமரர் கல்கி. திடீரென்று கள்ள மார்க்கெட்டில் பணக்காரர் ஆகிவிட்ட சீமாச்சுவையரின் லீலைகள் இன்றும் தொடர்கின்றன. 1946 லேயே அப்படியென்றால் இன்று கேட்கவே வேண்டாம். உலகியலை நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார் கல்கி அவர்கள். பட்டாபிராமனின் குடும்பத்தில் நிகழ்பவை போன்ற குழப்பங்கள் ஒவ்வொரு வேட்பாளரின் வீட்டிலும் நிகழலாம். இந்த விஷயத்தில் ‘அலை ஓசை’’ நாவல் ஒரு நல்ல அங்கதமாக (Satire)அமைந்திருக்கிறது.

உலகத்தின் முதல் ஓசை “ஓம்” என்னும் பிரணவநாதம் என்பார்கள். கிரகங்கள் ஒன்றை ஒன்று சுற்றி வருவதில் கூட இனிமையான ஒரு தாளகதி(harmonious rhythm) இருப்பதாக பிதாகரஸ் என்ற கிரேக்க கணக்கியல் அறிஞர் கூறியதை மில்டன் போன்ற ஆங்கிலக் கவிகள் பாடியிருக்கிறார்கள். ஆனால் கல்கியின் ‘அலை ஓசை’ அவலச்சுவை .கொண்டதாக இருக்கிறது. வாழ்க்கையின் அநித்தியங்களை அவ்வப்போது ராஜம்மாளின் காதிலும், சீதாவின் காதிலும் அந்த ஓசை நுழைந்து உணர்த்துகிறது. வாழ்க்கையில் மிகவும் நொடித்துப்போன பெண்கள் இவர்கள் இருவர்தாம். அதனால் அவ்வோசை அவர்கள் இருவருக்கு மட்டுமே கேட்குமாறு கல்கி அவர்கள் அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. ஒரு வகையான மனப்பிராந்தி (Phobia) அவர்களுக்கு இருக்கிறது. சீதா செவிடான பின்னர் கூட vocalization ல் அந்த ஓசை கேட்கிறது.
1948 ஜனவரியில் மகாத்மாவின் கொலை கல்கியை மிகவும் பாதித்துவிட்டிருக்கிறது. அந்தச் சூட்டோடு 1948 மார்ச்சில் ‘அலை ஓசை’யை ஆரம்பித்திருக்கிறார். அவருடைய மனக்கொதிப்பு கதாபாத்திரங்களின் வாயிலாகச் சுடர்விட்டு எரிகிறது.
நாவலில் வரும் ராகவனும், சூர்யாவும, சீதாவும், லலிதாவும் ஆங்கிலத்தில் கூறப்படும் ‘Round characters’ வகையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய குணாதிசயங்களை ஒரே வரியில் அடக்கமுடியாதபடி சிக்கலானவர்கள். இதற்கு நேர்மாறான ‘Flat character’ வகையைச் சேர்ந்தவர்கள், நாவல் முழுதும் ஒரே சீரான குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். பத்மலோசன சாஸ்திரிகள், காமாட்சியம்மாள், கிட்டாவையர், சரஸ்வதியம்மாள் போன்றோர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள்.

தாரிணி ஏறக்குறைய ஒரு ‘Flat character’ வகையைச் சேர்ந்தவள். லட்சியம் மாறாத ஒரு பெண்.
சூர்யாவும், ராகவனும் கதாநாயக ஸ்தானத்துக்கு மிகவும் போட்டியிடுகிறார்கள். இதில் இருவருமே தோல்வியடைகிறார்கள் என்பது என் வாதம். சில சமயங்களில் ஆசைப்படக் கூடாததற்கெல்லாம் இருவரும் ஆசைப்படுகிறார்கள்.
முடிவில் ராகவன் குரூபியான தாரிணியை மணப்பதன் மூலம், அதற்கு முன் அவன் எத்தனை சுயநலவாதியாக இருந்தாலும், படிப்போரின் அநுதாபத்தைப் பெற்றுவிடுகிறான். ஷேக்ஸ்பியராவது ‘ஹாம்லெத்’ நாடகத்தில் ஒரு ஹாம்லெத்தின் பிரச்னைகளைச் சமாளிக்கிறார். அமரர் கல்கி அவர்கள் இந்நாவலில் இரண்டு மூன்று ஹாம்லெத்களைச் சமாளித்திருக்கிறார்.

எல்லா கதாபாத்திரங்களும் கதையில் வரும் நிகழச்சிகளுக்குக் கடவுள் மேல் பழிபோடுகிறார்கள். அதைப் படிக்கையில் எனக்கு King Lear’ ல் வரும் ஒரு வரிதான் நினைவுக்கு வருகிறது. “As flies to the wanton boys, are we to the Gods; they kill us for their sport.”
நாவலைப் புகழ்ந்து இத்தனை நேரம் எழுதிய நான் அதில் உள்ள சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சீதாவுக்குத் திருட்டுப் பட்டம் கட்டும் இடம் அநாவசியமாக வளர்த்தப்பட்டிருக்கிறது. மௌல்வி சாகிப் உதவுவதைப்போல் காட்டப்பட பின்னால் எத்தனையோ சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. வார இதழில் எழுதும்போது அந்த இதழின் ஆசிரியரே வாராவார்ம் தொடர்கதையாக எழுதியிருப்பதில் இப்படி ஒரு சம்பவத் திணிப்பு நடந்திருக்கலாம். ஆனால் கல்கி அவர்கள் புத்தகமாக வெளியிடும்போது, சில நிகழ்ச்சிகள், உரையாடல்கள் முதலியவற்றைக் குறைத்து வெளியிட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
****

No comments:

Post a Comment