Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Sunday, September 9, 2018

நா.பா வின் சமுதாய வீதி நாவல்-திறனாய்வு


நா.பா வின் சமுதாய வீதி—ஒரு திறனாய்வு
(என் கட்டுரையை மே 1972 தீபம் இதழில் பிரசுரித்தார்)

தலைப்பு ஏன்?

‘சமுதாய வீதி’ என்னும் நாவலைத் திறனாய்வு செய்ய முற்படுகையில், அதன் ஆசிரியர் அந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதை முதலில் ஆய்வது நம் கடமையாகிறது. அவருடைய வேறு சில நாவல்களையோ அல்லது வேறு பல எழுத்தாளர்களின் நாவல்களையோ எடுத்து ஆயும்போது அவற்றை எழுதியவர்களின் மனத் திருப்திக்காகத்தான் தலைப்புகள் அமைகின்றனவே தவிர, படிக்கும் வாசகர்கள், சமுதாயத்தில் வாழும் மனிதர்களாகிய அனைவரையும் பாத்திரங்களாகக் கருதிக் கொள்ளும் வாய்ப்பு அவைகளில் இல்லை எனலாம்.. ‘சமுதாய வீதி’ என்னும் தலைப்பு கொடுத்திருக்கும் பட்சத்தில் அவர் தீட்டியுள்ள பாத்திரங்கள் மட்டும் நடமாடவில்லை, வீதியில் செல்லும் அனைவருமே அந்நாவலில் பங்கு கொள்கிறோம். எவ்வாறென்றால், திரையுலகினைச் சேர்ந்தவர்களை அவர் படைத்திருக்கிறார். நாமும் திரைப்படம் பார்க்கிறவர்கள்தானே? கோபாலைப் போன்றவர்கள் தலை கால் தெரியாமல் அட்டகாசம் செய்வதற்கு நம் போன்றவர்களும் ஓரளவு காரணமே. இந்த வகையில் திரை நடிகன் கோபாலை ஒரு Haughtyhead ஆக நாவலாசிரியர் படைக்கும்போது இந்தச் சமுதாயத்தின் வீதியில் நடமாடும் ஒவ்வொருவரையும் மறைமுகமாகத் தாக்குகிறார். கவர்ச்சிக் கன்னியாக எதற்கும் துணியும் உதயரேகாவுக்குத் திடீரென்று மார்க்கெட் கூடுகிறது என்றால் நாம்தானே காரணம்? சிங்கப்பூர் மைனர் கோமான் அப்துல்லா ‘அந்த வாழ்க்கை’ வாழுகிறான் என்றால் யார் காரணம்? எனவேதான் 

இந்நாவலாசிரியர் தமது நாவலுக்குத் தலைப்பிட எந்த வாசகரையும், மற்றவர்களையும் கூப்பிட்டு நிற்கவில்லை. தலைப்பில்லாத கதை, தலைப்பில்லாத கட்டுரை என்று பிறரைக் கேட்டு “தானம்” பெறுகிற ‘புதுமை’யை ஆசிரியர் செய்யாமல் ஒழுங்காகச் சிந்தித்து சமுதாயத்தில் நடமாடும் எல்லா மனிதர்களும் இந்த நாவலின் கதாபாத்திரங்களின் குண விஷேசங்களுக்குக் காரணம் என்றெண்ணிப் பொருத்தமான தலைப்பினை வைத்துள்ளார்.

மனிதபிமானக் கண்ணோட்டம்

‘சமுதாய வீதி’ கவர்ச்சியாக இல்லைதான். ஏனெனில் நமது சமுதாயத்தின் வீதிகளில் கவர்ச்சியாக மின்னுகின்றவர்களும், திரைத்தாரகைகளும், வசதி பெற்ற அரசியல்வாதிகளும்தான். அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதங்களை நாம் “குறிஞ்சிமலர்”, “நெஞ்சக்கனல்” ஆகிய இந்நூலாசிரியரின் வேறு நாவல்களில் அவர் இடித்துக் கூறுவதைக் கண்டிருக்கிறோம். அவற்றில் வலியோராக உள்ள அதர்மவாதிகளை எதிர்த்துப் போராடும் பூரணிகள், அரவிந்தன்கள், காந்திராமன்கள் ஆகியோரைக் கண்டோம். வலிமைக்கும், வலிமை குறைந்த நல்லனவற்றிற்கும் நடக்கும் போராட்டங்களில் வலிமையுள்ள அதர்மவாதிகள் அறிவூட்டப்படுவதும், வலியற்ற நல்லோர் முடிவில் தெம்பூட்டப்படுவதும் திரு நா. பா அவர்களின் எல்லா நாவல்களின் மையக் கருத்து என்று கூறிவிடலாம். ஆங்கில மகாகவி மில்டனைப் போல் இவ்வாறு தமது கதாபாத்திரங்களை அவர் அமைத்துக்கொள்கிறார். மில்டனின் ‘சாத்தான்’ தான் அவருடைய கதாநாயகன் என்று சில ஆங்கிலத் திறனாய்வாளர் வாதிடுகின்றனர். அதைப்போல் நாம் திரு நா. பா அவர்களின் முறைதவறிய கதாப்பாத்திரங்களை கதைத் தலைவர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. தீது செய்வோர்க்கும், நல்லது செய்வோர்க்கும் நடக்கும் போராட்டங்களை balanced நிலையில் சித்தரித்து முடிவில் நன்மை வெல்லுமாறு அமைக்கிறார். 

அவர் நாவல்களைப் படிக்கும்போது நமது மனத்திலும், சிந்தையிலும் ஒருங்கே சிலர்பால் விருப்பமும், சிலர்பால் வெறுப்பும் உண்டாகிறது. விருப்பம் உண்டாகும் கதாபாத்திரங்களின் மேல் முடிவில் நமக்குப் பரிதாபமே உண்டாகிறது. அவர்களை நாம் முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுவதில்லை. இந்த விஷயத்தில் இந்த நாவலாசிரியர் சிறந்த மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் திகழ்கிறார்.

உயர்வும் தாழ்வும்

‘சமுதாய வீதி’யில் வரும் கோபால் மீது நமக்கு முதலில்
வெறுப்பு உண்டாகிறது. தன் நண்பன் முத்துக்குமரனும் தானும் ஒன்றாக இருந்தவர்கள்  என்பதை மறந்துவிட்டு அவன் நடந்துகொள்ளும்போது நாம் அவனை வெறுக்கிறோம். ஆனால் அவனைப் பார்த்து முடிவில் பரிதாபப்படும்படி செய்துவிடுகிறார் நாவலாசிரியர். அவன் இடருற்று வருந்துகையில் அவனுக்கு உதவி செய்வோர் அவனைச் சுற்றியிருந்த படத்தயாரிப்பாளர்களும், ஃபைனான்ஸியர்களும் அல்ல. அவனுடைய பழைய நண்பன் முத்துக்குமரன்தான்—முன்பு இதே கோபாலால் கேவலமாக நடத்தப்பட்டவன். இந்தக் கட்டத்தைப் படிக்கும்போது ஷேக்ஸ்பியரின் ஒரு கொள்கைக்கு நாவலாசிரியர் எவ்வளவு அழகாக உருவம் கொடுக்கிறார் என்று வியக்கத் தோன்றுகிறது.
“The rarer action is in virtue than in vengeance.”
“பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே” என்று புதுமைக்கவி பாரதியின் வாக்கையும், ‘இடுக்கண் களையும் நட்பை’யும் அந்தக் கட்டம் உயர்த்திக் காட்டுகிறது. கோபால் முன்பு நட்சத்திரம், ஆனால் அவன் முன்னே  நாடகாசிரியனும், கவிஞனுமான முத்துக்குமரன் ஒரு சூரியன்.

சத்தியமூர்த்தியை விட…

முத்துக்குமரன் கதாபாத்திரத்தை இதே நாவலாசிரியரின் மற்றொரு கதாபாத்திரமான “பொன் விலங்கு” சத்தியமூர்த்தியுடன் ஒப்பிடுவது நமது கடமையாகிறது. சத்தியமூர்த்தி நன்கு படித்தவன். புரட்சி மனப்பான்மை உடையவன். அவனுக்கும் நடனக்காரி மோகினிக்கும் உண்டாகும் தொடர்பில் ஒரு பக்கம் புரட்சி மனப்பானமையையும், மறுபக்கம் காலம் தாழ்த்துதல் என்ற போக்கையும் காணுகிறோம். சத்தியமூர்த்தி அவ்வளவு சீக்கிரம் மோகினியின் காதலை ஒத்துக்கொண்டுவிடுவதில்லை. ஆனால் நாடக ஆசிரியன் முத்துக்குமரன் நாடக நடிகை மாதவியின் ‘உள் வாழ்க்கை’யைத் தெரிந்துகொண்டிருந்தும், அவளுடைய காதலை விரைவில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதைக் காணுகிறோம்.
நாடக நடிகை மாதவியைப் பற்றி இங்கு எழுதுகையில் Thomas Hardy யின் “Tess of the D’urbervilles’ என்ற நாவலில் வரும் சூழ்நிலையால் கெடுக்கப்பட்ட Tess என்ற பெண்ணின் நினைவு வருகிறது. Tess ஓர் ஆபத்தில் இருந்தபோது அவளை Alec என்பவன் காப்பாற்றுகிறான். ஆனால் அவனே அவளைக் கற்பழித்துவிடுகிறான். பிறகு Tess ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அதுவும் இறந்துவிடுகிறது. அவளை Angel என்பவன் விரும்புகிறான். அவள் உண்மையை மறைத்து அவளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நேரிடுகிறது.. தன் மனச்சாட்சி உறுத்த அவள் தன்னைப்பற்றிக் கூறுகிறாள். அவனும் ‘fornication’ செய்தவந்தானாம். அவன் வேண்டுமென்றே நெறியிழந்தவன். ஆனால் Tess அநியாயமாகத் தவறிப்போனவள். இந்த உண்மை தெரிந்ததும் Angel அவளைவிட்டு ஓடிவிடுகிறான். Hardy இந்த இடத்தில் அவர் காலத்து ஒழுக்கத்தின் ‘இரட்டை மதிப்பு நிலை’யைச் சாடுகிறார்.

ஆனால் ‘சமுதாய வீதி’யில் வரும் மாதவி. தெரிந்தே இழிசெயல்களில் ஈடுபட்டிருந்தவள். அவள் கூட ஒருவனை நம்பி அந்நிலைக்கு ஆளானவள் என்றாலும், அவள் முதலில் வருந்துவதில்லை. ஆனால் அவள் முத்துக்குமரனிடம் மையல் கொள்ளும்போது, ஒழுக்கத்தின் விளைநிலமான முத்துக்குமரன் அவளை ஏற்றுக்கொள்வதாக நாவலாசிரியர் படைத்திருப்பது அவருடைய மனப்பக்குவத்தையும், அவர் தன் கதாபாத்திரத்தை அவ்வாறு படைத்திருப்பதன் சிறப்பையும் ஒருங்கே காணமுடிகிறது. இந்த விஷயத்தில் சத்தியமூர்த்தியைவிட முத்துக்குமரன் ஒருபடி மேலே சென்றுவிட்டான் என்றால் மிகையாகாது.
இந்த நாவல் ஒரு ‘ஸடயரா?’
இந்த நாவலைப் படித்து முடித்தபோது நமக்கு ஏற்படும் ஒரு கேள்வி, இது ஒரு கிண்டல்(Satire) வகையைச் சேர்ந்த நாவலா என்பதாகும். Satire என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ஒரு வரையறை(Definition) கொடுத்துள்ளார்கள்:
“A satire is a composition in prose or verse holding up vice or folly to ridicule or lampooning individuals; it also means the use of ridicule, irony, sarcasm etc. in speech or writing for the ostensible purpose of exposing and discouraging vice or folly. The true aim of satire is the amendments of vices by correction.”

மேற்கூறியபடி பார்த்தால் ‘சமுதாய வீதி’யில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் இன்றைய உலகில் நடமாடிக்கொண்டிருக்கும் சில மனிதர்களை மறைமுகமான போர்வையில்(Masquerading)  நமக்குக் காட்டுகிறது. அதனாலேயே இந்நாவலை ஒரு யதார்த்த நாவல் என்று கூறலாம். நேர்மையற்ற கோபால், உதயரேகா, அப்துல்லா, பத்திகையாசிரியர் கனியழகு போன்றவர்கள் திருந்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்நாவலாசிரியர் எழுதியிருக்கவேண்டும். அதனால்தான் இதை ஒரு ஸடயர் வகையைச் சேர்ந்த நாவல் என்கிறோம். இவ்வாறு ‘சமுதாய வீதி’ என்னும் இந்நாவல், வீதியில் உலவிடும் சாதாரண மனிதர்களையும் பங்கெடுத்துக்கொள்ள வைக்கிறது. மனிதாபிமான தத்துவத்தை(Spirit of Humanism) விளக்குவதில் சிறந்து நிற்கிறது. சிலரைக் கிண்டல் செய்து அவர்களைத் திருந்திக்கொள்ளுமாறு விண்ணப்பம் விடுக்கிறது.
******







No comments:

Post a Comment