அரிசி
தந்த கவிதை
காலனியில் காலை நடை
மூன்றாவது சுற்றில்
அசையாமல் நின்றேன்
எதிரே
சிட்டுக்குருவி
யாரோ எறிந்த
தானியத்தை தத்திச்
சென்று கொத்தியது.
செல்போன் கோபுர
வரவில்
காணாமற்போய்விட்ட
குருவி
இனத்தின் மிச்சமோ
இந்தப் பறவை!
காணற்கரிய காட்சி…
சட்டைப்பையில்
கைவிட்டேன்
நேற்று அம்மா திதிக்கு
படைத்த
தலையில் போட்டுக்கொண்ட
ஆசீர்வாத அரிசிகள்
ஐந்து கிடைத்தன
இரண்டைத் தூக்கிப்
போட்டேன்
சினேகத்துடன் தலை
நிமிர்ந்தது குருவி
தத்தித்தத்தி என்
காலருகே வந்து கொத்தியது
போட்டிக்கு இன்னொரு
குருவி
அதற்கும் என்னாலான
இட ஒதுக்கீடு.
பின்னால் சரக்கென்று
செருப்போசை
ஒரு நடை நண்பர்
ஹலோ என்றார்
சத்தம் கேட்டு
புதிய சினேகிதர்கள் காணாமற்போயினர்
நடை இதயத்தைச்
சீர்ப்படுத்துமாம்.
இன்று மூன்றாவது
சுற்றிலேயே
நிறைந்துபோனது
இதயம்.
கையில் மீதமொரு
அரிசி
என்னைக் கவிதை
எழுதச் சொன்னது!
No comments:
Post a Comment