இரண்டு
மாடுகளும் ஒரு நாயும்
நிறைவாய் நடந்தது
அம்மா திதி
பிண்டங்களில் அம்மா,
பாட்டி, முப்பாட்டி
மூவரும் வாழ்த்துருண்டைகளாயிருந்தனர்
நாங்கள் நமஸ்கரித்து
ஆசீர்வாத நீரும் அரிசிகளும்
தலையில் விழுந்தன
மூவரையும் கரையேற்றவேண்டும்
மாடுகள் அல்லது
நீரோடை ஏற்கும்
மாடுகளைத் தேடி
அலைந்தேன்
இரண்டு மாடுகள்
கண்ணில் பட்டன
கூட ஒரு நாய்
சாஸ்திரங்கள் நாய்கள்
பிண்டங்களை உண்டால்
பாவமென்கிறது
சிறிது தயங்கினேன்…
இளவயதில் நானொரு
iconoclast
அந்த குணம் எட்டிப்
பார்த்தது
பிண்டவாசனையில்
மாடுகள் அருகில் வந்து
என் பைகளை நக்கின
பைரவனும் எதிரே
பசியில்
அருகில் நாக்கை
நீட்டியது
பசியாற்றுவதில்
அம்மா
அன்னபூரணியாக இருப்பார்
வாழை இலைகளில்
பிண்டங்களை வைத்தேன்
பசித்த அனைவரும்
உண்டனர்
பாவம் சேர்ந்தது
எனக்கு
பரவாயில்லை
நாளை காலை சந்தியின்போது
போக்கிக்கொள்கிறேன்
No comments:
Post a Comment