Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Sunday, September 2, 2018

காவல் (தினமணி கதிர்)

(இந்தச் சிறுகதையை நான் 1970 களில் எழுதினேன். ஆசிரியர் சாவி அவர்கள் பாராட்டிய கதை)
காவல் 
                        
    எனக்குத் தனிமை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் அவருக்குத் தனிமை என்பது வேப்பங்காய். நாங்கள் இரண்டு பேரும் ஏன்தான் கலியாணம் செய்து கொண்டோமோ என்று இருக்கிறது எனக்கு.
       என் அம்மா வீட்டிலிருந்தபடி இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான். பின்னே என்ன? அம்மா பிள்ளையான அவருடன எப்படி நான் அந்த வீட்டில் வாழ முடியும்? ‘வச வச’ வென்று ஏகக் கூட்டமாய் நிரம்பி வழியும் அந்தப் பெரிய வீட்டில் தனித்து வாழ என்னால் முடியவில்லை.. அவரும் என் பக்கமில்லை. அதனால் என்னை நானே பிரித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்!
       என்னால் அவரை மறக்க முடியவில்லை. அவருடைய பண்பான, அன்பான குணம் என்னை நெகிழவைத்து, என் கொள்கையையும் ஆட்டிப் படைக்கவே பல கடிதங்களை ரகசியமாக அவருடைய ஆபீஸ் விலாசத்திற்கு எழுதிப்போட்டேன். என்னுடைய பிரிவால் அவருடைய மனம் கல்லாய்ச் சமைந்து போனதோ என்று கூடச் சந்தேகமாயிருக்கிறது. நான் இந்த ஒரு மாதப் பிரிவில் எழுதிய கடிதங்களுக்கு ஒரு பதில் கூடப் போடவில்லை அவர்!
        இங்கே என் அம்மா வீட்டார் என்னுடைய கொள்கையை ஆதரிப்பவர்கள். அதிலும் குறிப்பாக என் அம்மா தனிக்குடித்தனக் கொள்கைக்காக அந்தக் காலத்தில் போராடியவள். அவளுடைய மகளல்லவா நான்? ஆனல் என் அம்மாவுக்கு அந்தக் காலத்தில் அப்பா அப்படி ஒத்துப்போவாரம். அம்மாவே சொல்வாள், அப்பா ஒரு ‘பெருமாள் மாடு’ மாதிரி என்று. என்னுடைஅய ‘அவர்’ இருக்கிறாரே ஒரே பிடிவாதக்காரர்! அந்தப் பிடிவாதக்காரரை நினைக்கும்போது எனக்கு காதலை விட எரிச்சலே அதிகமாகப் பிறக்கிறது.
          போன மாதம் முப்பதாம் தேதி; ஞாயிற்றுக்கிழமை. நானும் அவரும் ஒரு மார்னிங் ஷோவுக்குப் போனோம். அவரே காரை ஓட்டினார்.  அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிக்குடித்தனம் செய்வதில் உள்ள நன்மைகளைச் சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் என் பேச்சைக் கேட்டதாகத் தெரியவில்லை. அவருடைய   தோளைத் தொட்டுக் குலுக்கினேன். “என்ன, நான்  சொல்வதற்கு ‘ஊம்’ கூடக் கொட்டாமல் சும்மா இருக்கிறீர்கள்?” என்றேன்.
       “விமலா! காரை ட்ரைவ் செய்யும்போது நான்  ஒரு டிரைவர், உன் கணவன் அல்ல!”- இப்படிச் சொன்ன அவர் முகத்தை உற்று நோக்கினேன். சிரித்துக்கொண்டு அவர் இதைச் சொல்லவில்லை என்பதும், சீரியஸாகவே சொல்கிறார் என்பதும் புரிந்தது.. அவர் மேல் கோபம் கோபமாக வந்தது.
        பிரபலமான தியேட்டர் ஒன்றின் முன்னால் காரை நிறுத்தினார் அவர். நான் காரிலேயே மவுனமாக உட்கார்ந்திருந்தேன். காரிலிருந்து இறங்கிய அவர் என் பக்கமிருக்கும் கதவைத் திறந்தார். “வா, போகலாம்!’ என்று என் கையைப் பிடித்துக்கொண்டார்
      “இப்போது நீங்கள் என் கணவரா அல்லது” என்று நான் ஆங்கிலத்தில்.கேட்டதும் அவர் அக்கம் பக்கத்தை மறந்து பலமாகச் சிரித்தார். எனக்கும் சிரிக்கவேண்டும் போல் இருந்தது.
        “விமலா! காரை ஓட்டினாலும், உன் கையைப் பிடித்து அழைத்துப் போனாலும், நானே எங்கேயாவது போய்விட்டாலும்—எல்லா இடத்திலும் எல்லா நேரங்களிலும் நான் உன் கணவன்தானே? என்று அவரும் ஆங்கிலத்தில் தோளைக் குலுக்கிக் கொண்டு சொல்கையில் எனக்கு ஆனந்தமாக இருந்தது.
        :ஆனால்…” என்றார் அவர்.
        நான் அவரையே நோக்கினேன்.
       “ நீ காரில் என்னுடன் பேசிய விஷயங்கள்தான் எனக்குப் பிடித்தமாக இல்லை. எனக்குத் தனிமை பிடிக்காது. நான் கூட்டத்தோடு பழகும் சுபாவம் உள்ளவன். உன்னுடன் நம்முடைய வீட்டில் பழகுகிறவர்கள் சாதாரண கூட்டமல்ல, விமலா! அவர்கள் உன் கணவனின் தங்கைகள்; உன் கணவனின் தம்பிமார்; உன் கணவனின் அப்பாவும் அம்மாவும்! நீ பெண்; உன் அப்பாவையும் அம்மாவையும் தம்பி தங்கையரையும் விட்டுப் பிரிந்து வரவேண்டிய கட்டாயம் உள்ளவள். நான் அந்தக் கட்டாயம் இல்லாதவன்” என்று கறாரகக் கூறிவிட்டார் அவர்.
        “விமலா! ஜூலி ஆண்ட்ரூஸின் நடிப்பும் பாட்டும் பிரமாதம். நீ இப்போதுதான் ‘ஸவுண்ட் ஆஃப் ம்யூஸிக்’ பார்க்கிறாய்; நான் ஏற்கனவே இரண்டு முறை பார்த்துவிட்டேன்!” என்றார் அவர்.
         வீட்டில் ரிகார்டு ப்ளேயர் இருந்தது. போனவுடன் அந்தப் படத்தின் பாடல்களையெல்லாம் கொண்ட பெரிய இசைத்தட்டை போட்டுக் கேட்க ஆரம்பித்தார். எனக்கு அந்தப் படமே பிடிக்கவில்லை. ஏழெட்டுக் குழந்தைகள்; அவர்களுடன் ஒருத்தி கூத்தடிப்பு. அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்து இங்கே இவரின் கூத்தடிப்பு! என்னால் அவருடைய ரசனையை மதிக்க முடியவில்லை. என் அறைக்குப் போய்விட்டேன். தனியறையில் என் மனம் புகைந்து புழுங்கியது. நான் மவுனமாக அழுதேன். என் தோழிமார்களில் எத்தனையோ பேர் தாங்கள் போட்ட இலக்கை அடைந்திருக்கிறார்கள்.. ‘கையில்லாத ரவிக்கை போடக்கூடாது’ என்று கூறிய மாமியாருடன் சண்டை போட்டு தனியாக கணவனுடன் போய்விட்டாள் ஒருத்தி.  பெண்களுடைய பாஷன்களை விளக்கும் பத்திரிகைகளால் மருமகள் கெட்டுப்போகிறாளே என்ற பத்தாம் பசலித்தனமான சிந்தனையில் சிறுத்துப் போன மாமியாருக்கு எதிராக மற்றொருத்தியின் போர்க்கொடி. அதிலே அவளின் வெற்றி! ---ஆனால் எனக்கு வாய்த்த மாமியார் ரொம்பவும் நல்லவராக இருக்கிறார். என் அம்மா கூட என்னை அப்படிக் கவனித்ததில்லை. கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவது இந்த அன்பு. நான் கைகள் கட்டப்பட்டு இருக்கிறேன்.
        என் கணவர் ஒரு நகைச்சுவையாளர். அவர் தம்பி தங்கையரின் முன்னால் நாங்கள் மார்னிங் ஷோவுக்குப் போனதற்கு மறுநாள் என் கொள்கையைச் சொல்லி என்னைக் கேலி செய்தார். அகத்தையெல்லாம் புறத்திற்கு கொண்டு வந்து என்னைத் தலை குனிய வைத்துவிட்டார். .எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. நான் அமைதியான பிராணி.. என் குரல் கீச்சுக்குரல்.. என் கோபாவேசச் சொற்கள் எனக்கே சிரிப்பை மூட்டும். அதனால் பேசாமல் அம்மா வீட்டுக்கு மூட்டை கட்டிவிட்டேன்!
       ம்மா வீட்டில் நான் இருப்பதை நினைக்கும்போது எனக்கே அது புதிதாக இருக்கிறது. ஊர் பேர் தெரியாதவர்களின் வீட்டில் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்ப்டுகிறது. அப்பாவுடன் என் வாழ்நாளிலேயெ எண்ணிப் போட்டுவிடும் அளவுக்குத்தான் பேசியிருப்பேன்.  அவருக்கென்று ஒரு தனியறை. அதில் ஏகப்பட்ட புத்தகங்கள். எப்போது பார்த்தாலும் ‘வோர்ட்ஸ்வர்த்’தின் கவிதைகளைப் படித்த வண்ணம் இருப்பார். அம்மாவும் படித்தவள்..யாருடனும் அதிகம் பேசாமல் காலகளை மட்டும் தரையுடன் பேசவிட்டுக்கொண்டு பரக்கப் பரக்கக் காரியங்களைச் செய்வாள். எனக்கு தம்பி ஒருவன். ஹாஸ்டலில் அவன் எடுத்திருப்பது சிங்கிள் ரூம். ஒரு தங்கை உண்டு. எங்கள் வீட்டிலேயே கலகலப்பானவள். ஆனால் வெளியில் மட்டும்தான். வீட்டிலே பேசா மடந்தை. எனக்கு இந்த அமைதியும் தனிமையும் ரொம்பப் பிடித்திருக்கிறது. எதிர் வீட்டில் –அக்கம் பக்கத்தில் இருப்போர் யாரையும் எங்களுக்குத் தெரியாது. சில சமயம் இதே தெருவிலிருப்போர் சிலரைத் தேடி வருகிறவர்கள் எங்கள் வீட்டுக்குத் தவறி வந்துவிட்டு முகவரியைக் கேட்டால் விழிப்போம் நாங்கள். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை.
        “ரமேஷ் வந்துவிட்டானா?’ என்று திடீரென்று குரல் கேட்டது.
        ஹாலின் சோபாவில் சிந்தித்த வண்ணம் இருந்த நான் தலை நிமிர்ந்தேன். சுரேஷ்! என் தம்பி ரமேஷின் காலேஜ் நண்பன். இவன் படிப்பது வேறு ஊரில் வேறு காலேஜில் வேறு சப்ஜக்ட்.
         “வா, சுரேஷ்! உட்கார்!” என்று எதிரேயிருந்த சோபாவைக் காட்டினேன்.
           சுரேஷ் உட்கார்ந்தான். அவன் சிகரெட் குடித்துவிட்டு வந்திருப்பான் போலிருக்கிறது. அதன் நெடி நாசியைத் தட்டியது. நான் சிறிது முகத்தைச் சுளித்தேன். அதைக் கவனித்த அவன் ஒரு வாசனைப் பாக்கை எடுத்து அப்படியே வாயில் கொட்டிகொண்டான்.
         “லெட்டர் போட்டிருந்தான் எனக்கு. அவன் எக்ஸாம்ஸ்  எல்லாம் ஓவர் ஆகிவிட்டது என்று. இன்னுமா வரவில்லை அவன்?”
          “இங்கே லெட்டர் எதுவும் வரவில்லை. அவனுக்கு லெட்டர் போடும் பழக்கமும் இல்லை. எதற்கெடுத்தாலும் தந்திதான் அடிப்பான்.”
          “எனக்கென்னவோ லெட்டர்தான் போடுகிறான்.. ரொம்ப மோசம் அவன்! அந்த ஊரில் யாரையுமே அவன் சிநேகம் செய்துகொள்ள வில்லையாம். யுரேனியம் மாதிரிஅவன்!”
         “யுரேனியமா?” நான் புரியாமல் கேட்டேன்.
           “அது ஒரு உலோகம். எப்போதும் ரேடியோ ஆக்டிவ் கதிர்களை வீசிக்கொண்டு, தன்னைத் தானே அழித்துக்கொண்டிருக்கும்.. அப்படிப்பட்டவன் அவன்” என்று சிரித்தான் அவன்.
        “தனிமை என்பது ஒருவனை அழிக்ககூடியதா? எனக்குப் புரியவில்லையே, சுரேஷ்.”
         “நீ என்னைவிட நாலைந்து வயசு பெரியவள். உனக்கு விளக்கத் தேவையில்லை. நீ கலியாணமானவள் வேறு.. கலியாணம் ஆகிவிட்டாலே தனிமை போய்விடுகிறது இல்லையா?'
 ’         "இல்லையே! நான் தனித்துதான் இருக்கிறேன். கலியாணம் என்கிற பந்தம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லையே!”
          “கலியாணம் செய்து கொள்வது தனிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக இல்லையே. இரண்டு பேர் பங்கு பெறும் வாழ்க்கை எப்படித் தனிமையாக இருக்க முடியும்?’ என்று தேதோ பேசினான் சுரேஷ்.
           எனக்குக் குழப்பமாக இருந்தது.
            “தனிமை என்பது மனதில் இருக்கிறது. இந்த வாதத்தை நீ ஒப்புக் கொள்கிறாயா, விமலா?” என்றான் அவன்.
            நான் தலையை அசைத்தேன். அவ்வளவுதான். என்னை யாரோ இறுகத் தழுவியது போலிருந்தது. நான் திமிறினேன்.விடுபட முயன்றேன். கூக்குரல் இட முயன்றேன். முடியவில்லை.
              அடுத்த கணம் சுரேஷ் ஓடிக்கொண்டிருந்தான். “ உன் தனிமையும் என் தனிமையும் இப்போது கூடக் கெடவில்லை, விமலா” என்று கத்திக் கொண்டே. நான் ஒன்றும் புரியாது நின்றேன்.. என் உடலம் எரிந்தது.உதடுகள் கொதித்தன.. யாரையாவது துணைக்குக் கூப்பிட வேண்டும் போலிருந்தது.
           “அம்மா!”
            “அப்பா!”
         நான் கத்தினேன்.. பதிலில்லை. அப்பா இன்று வெள்ளிக்கிழமை என்று லவுட் ஸ்பீக்கர் இல்லாத பார்க் ஒன்றிற்குப் போய்விட்டிருப்பதும், அம்மா கோயிலுக்குப் போயிருப்பதும் நினைவுக்கு வந்தது.
         
ப்போது என் கணவர் வீட்டில் இருக்கிறேன்.. நான் இங்கே வந்ததும் அடுத்த நாளே என் பெயருக்கு ஒரு ரிஜிஸ்தர் தபால் வந்து சேர்ந்தது. கவரின் வெளிப் பக்கத்தில் இருந்த முகவரியைப் பார்த்ததும், சுரேஷ் எழுதியிருப்பது தெரிந்தது.. நான் அஞ்சினேன்.. ரகசியமாக என் அறைக்கு எடுத்துச் சென்று கடிதத்தைப் படித்தேன்.
        “அன்பிற்குரிய திருமதி விமலா அக்கா அவர்களுக்கு, சுரேஷ் எழுதிக் கொண்டது.
        என்னை நீ மன்னிக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
        நான் ராமாயணம் படித்தவன். அதில் வரும் நீதியை உணர்ந்தவன். உன்னைச் சிறு வயது முதலே அறிவேன்.. நீயும் என்னை அறிவாய். ஆனால் இள வயதில் பருவ உணர்ச்சிகள் இருப்பதில்லை. வாலிப வயதில் அவை பற்றிய சிந்தையாகவே எங்கள் உலகம் செல்கிறது. நாங்கள் காதல் அவஸ்தையில் அவதிப்படுகிறோம். பெண்களைப் பார்க்கும் போது நாங்கள் தடுமாறிப் போகிறோம். எங்களுடைய அறிவு, நிதானம், நாங்கள் படித்த நீதி எல்லாமே மறந்து போய்விடுகின்றன.. நாங்கள் மிருகமாகி விடுகிறோம்.  அதிலும் உன்னை அன்று தனிமையில் சந்தித்த போது, நீ பேசிய பேச்சுக்களினால் நான் கேவலமானவனாகி விட்டேன். பெண்கள் தனிமையை விரும்பக் கூடாது என்று படுகிறது எனக்கு. ஆனால் தனிமையை நீ மட்டுமல்ல, உன் குடும்பமே விரும்புகிறது என்பதும் எனக்குத் தெரியும்.
         பெண்ணுக்குத் தனிமை பரம விரோதி. அவளுக்குக் காவல் அவள் போட்டுக் கொண்டிருக்கும் ரவிக்கையும், புடவையும் மட்டுமல்ல. அவள் கணவன் அருகில் இருப்பதும்தான்.
   இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு.”
        நான் அந்தக் கடிதத்தைக் கொளுத்திவிட்டேன். அது புகைந்து எரிந்தபோது சுரேஷ் செய்த தவறும், என்னுடைய தனிக்குடித்தன ஆசையும் சேர்ந்து எரிந்துவிட்டன.
         ____________&&&&&&&&&&__________ 
           

         
       


       

No comments:

Post a Comment