Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Friday, September 7, 2018

நீங்கள் சரியானவரா… Are you OK....

நீங்கள் சரியானவரா……
Thomas A.Harris என்பவர் “I'm OK-You’re OK” என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். மனித மனம் பற்றிய அலசலை இப்புத்தகத்தில் காணலாம் .
அவர் மனித வாழ்வில் நான்கு நிலைகள் உண்டு என்கிறார். இது நம் இரண்டாவது வயதிலிருந்தே ஆரம்பமாகிவிடுகிறது
1.   I’m not OK- --You’re Ok--- நான் சரியில்லை, நீங்கள் சரி
2.   I’m not OK---You’re not OK--- நானும் சரியில்லை, நீங்களும் சரியில்லை
3.   I’m Ok --- You’re not Ok-----நான்தான் சரி, நீங்கள் சரியில்லை
4.   I’m ok ---You’re ok ---- நானும் சரி, நீங்களும் சரி
மேற்கூறிய எல்லா நிலைகளிலும் நாம் இருந்திருக்கிறோம்; இனிமேலும் இருப்போம்.
ஏனெனில் மனிதர்களுக்கு இரண்டு மனங்கள் எப்போதும் உண்டு. இதில் நம் பழைய வாழ்வின் ஞாபகங்கள் குறுக்கிடும்.
ஹாரிஸ் சொல்கிறார்: “ஒருவன் டாக்டரின் அறுவைச்சிகிச்சை மேசையில் படுத்திருக்கும்போது கூட கருவிகளையும் பார்க்கிறான், மனது ஒரு பேக்கரியின் ரொட்டியைக்கூட நினைக்கிறது.”
நான் நரசிம்மர் ஸ்லோகம் சொல்கிறபோது நான் பார்த்த நரசிம்மர் கோயில்களெல்லாம் நினைவுக்கண்ணில் வந்துபோகின்றன.
நாம் ஒரு பாட்டை ஒரு வீதியில் போகும்போது கேட்டால், சோகப்பாடலாக இருந்தால் நம் வாழ்க்கையின் சோகப் பகுதிகள் வந்து போகின்றன. மனம் கனத்துப் போகிறது.
அதேபோல் இனிமையான சந்தர்ப்பத்தில் நம் பழைய நல் நினைப்புகளும் தொடர்பாய் வரும்.
இனி முதல் நிலையான I’m not OK---you’re OK என்பதைப் பார்ப்போம்.
நம் இரண்டாவது வயதில் மற்றவர்களின் தயவில் இருக்கிறோம். வீட்டுப் பெரியவர்களோ, சகோதர சகோதரிகளோ புத்தகம் படிப்பது அந்தக் குழந்தைக்கு வியப்பாகத் தோன்றும். பேச வராது. வியப்பாகத் தோன்றும் பேசுவது  சப்தம்தான் வரும். நடப்பது வியப்பாகத் தோன்றும். நடக்க வராது.
இந்த நிலை மற்ற வயதுகளில் கூட வரும். இந்த நிலை நம் ஆழ்மனதில் இருக்கும்.
கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன்  வந்தபோது எத்தனைபேர் அதைப் பயன்படுத்துவோரைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருப்போம்? நாம் சரியாக இல்லையோ எனத் தோன்றும். சிலரின் சாதனைகளைப் பார்த்து ஏக்கம் கொண்டிருப்போம். நாம் ஏன் அவர்களைப்போல் இல்லை என சுய பரிதாபம் ஏற்பட்டிருக்கும்.
இந்த நிலையை மாற்றுவது எப்படி?
·         ஒரு விஷயம் தெரிந்த பெற்றோரோ மற்றவரோ நம் கையைப் பிடித்து “நீயும் சரியாக இருப்பாய். ஆனால்”  என்று நல்ல முறையில் ஊக்குவிக்கவேண்டும்.
·         சிறு வயதிலேயே அல்லது எந்த வயதிலும் விஷயம் தெரிந்தவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளவேண்டும்.
·         நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
·         நாம் பயிற்சி செய்யவேண்டும்


 I’m not Ok-You’re not OK
வாழ்வில் இந்த ஸ்டேஜ் ஒரு பையன் அல்லது பெண் தன் பிள்ளைப் பிராயத்தைவிட்டு வெளிவரும்போது ஏற்படும்.. இதுவரை பெற்றோர் ஆசிரியர் அண்ணன் அக்கா ஆகியோர் சொல்படி நடந்தவன்(ள்) மேற்கொள்கிற நிலை இது. காஷ்மீரில், ஏன் தமிழ்நாட்டில் கூட இம்மாதிரியான இளமைப் பருவம் ஆபத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஒருவருடைய வாழ்க்கைப் பதையையே புரட்டிப்போடும் நிலை இது. சிலர் கடைசி வரையில் மாறவேமாட்டார்கள்.
வீட்டில் அதனால்தான் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கக்கூடாது. வீட்டில் அபரிதமான வசதிகள் இருந்தால்கூட இந்தநிலை ஏற்படும். கொஞ்சம் அதட்டல்கூட தேவைப்படும் பருவம் இது. எந்த வயதிலும்கூட இந்த முரண்டு பிடிக்கும் நிலை வரலாம். இதற்கு மனோதத்துவ கவுன்சிலிங் தேவைப்படும். சமுதாயம் நேர்மையானதாக, ஊழலற்றதாக இருந்தால் இந்தக் கோபம் வராது. இதை முளையிலேயே கண்டுபிடித்து திருத்தவேண்டும். “ஊனமுற்றவர்களுக்கு இந்த நிலை வரும் சாத்தியக்கூறு உள்ளது”  என்க்றார் ஸ்கோப்ளர் என்ற ஆடிசம் சம்பந்தப்பட்ட நிபுணர். 


I’m OK-You’re not Ok
   இந்த ஸ்டேஜில் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். தாங்கள் நினைப்பதை மற்றவர்கள் பின்பற்றவேண்டும் என்று நினைப்பவர்கள். உங்களுக்கு சில இருக்கும், இறந்துபோன தலைவர்கள் நினைவுக்கு வரலாம். இவர்களால் சமுதாயம் அல்லல் பட நேரிடும். குடும்ப வாழ்க்கை கூட இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும்.  முன்னர் தமது பழைய வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்காமல் ஒருவித மன உளைச்சலுக்கு இவர்கள் ஆளாகியிருப்பார்கள். தங்களைச் சுற்றி “ஆமாம் சாமிகள்” வைத்துக்கொள்ள விரும்பி, அவர்களால் கெட்டுப் போகவும் கூடும். இவர்கள் இந்த ஸ்டேஜைவிட்டு வெளிவருதல் நன்மை பயக்கும்.

I’m Ok- You’re OK
இந்த கடைசி ஸ்டேஜ்தான் வாழ்வியலுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை தரவல்லது. ஆனால் இதை அடைய நிறைய மெனக்கெடவேண்டும். இதுதான் ஒருவனை நம்பிக்கைக்கு உரியவனாக்கும். முதல் மூன்று நிலைகளும் நமது ஆழ்மன சிக்கல்களினால் வருபவை. இந்த மூன்று நிலைகளும் ஒருவனை வாழ்நாள் பூராவும் துரத்தும். அதிலிருந்து ஒருவன் விடுபடவேண்டும். நானும் சரி, நீயும் சரி என்பது நனவு நிலையில்தான் வரும். மற்றவர்களைக் கோபப்படாமல் புரிந்துகொள்ளவேண்டும். முதல் மூன்று நிலைகளும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டவை. நான்காவது நிலை சிந்தனை, நம்பிக்கை, செயல்பாடு ஆகியவற்றால்தான் ஏற்படும். நம்மால் ஏன் சரியாக இருக்கமுடியாது என்ற கேள்வி நமக்கு ஏற்பட்டாலே பாதி வெற்றிதான். இந்த நிலை  தீர்மானமான மனநிலையை நாம் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியம்.
இளவயதில் விளையாட்டு வெற்றி தோல்விகளில் பங்கெடுத்திருந்தால் இந்த நிலை சாத்தியமாகிறது
 அதனால் நம் பிள்ளைகளை போட்டிகளில் கலந்துகொள்ளச் சொல்லுங்கள். வெற்றியின் போது ஏற்படும் மகிழ்ச்சி பெருமையளிக்கும். ஆனால் தோல்விகள் ஒருவனை நம்பிக்கை கொள்ளச் செய்து மேலும் முயலச் செய்யும். புதிய ரிஸல்ட்களைக் கொடுக்கும்.
எனவே "நானும் சரி, நீங்களும் சரி" என்ற மனநிலைக்கு வந்து வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.






No comments:

Post a Comment