Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Monday, September 10, 2018

எலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோ


எலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோ (தினமணி கதிர் )
                  அனந்தசாய்ராம் ரங்கராஜன்
     ஓடிவந்த களைப்புடன் பீச் ஸ்டேஷனில் வந்து நின்று, சிறிது நேரம் ஓய்வெடுத்தது அந்த மின்வண்டி.
      

கார்டு, கடைசி பெட்டியை நோக்கி மெல்ல நகர்ந்தார்.. அவர் மீது ஓர் இளைஞன் இடித்துக் கொண்டு ஓடினான்.
    
சட்டென்று அவன் ஓட்டம் நின்றது. அவரிடம் வந்து  விழுந்து கிடந்த இரு நிறக் கொடிகளையும் எடுத்துத் தந்துவிட்டு, “ஐயாம் ஸாரி ஸார்!” என்று பல்லையிளித்தான். அவன் பார்வையில் தன் செய்கைக்கான  வருத்தம் தெரியாமலிருப்பதைக் கண்டு, கார்டு “மை பாய்! அவசரம், அஜாக்கிரதை என்பதெல்லாம் ஒரு டேஞ்சர்” என்றார்
 புன்னகையுடன்.. அவர் அதைச் சொல்லும்போது கையிலிருந்த சிவப்புக் கொடி தானாக ஆடியது.
    
இளைஞன் அலட்சியமாகத் தன் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு, தோள்களைக் குலுக்கினான்..  கார்டின் அறிவுரை அந்த இளைஞனின் வாயிலிருந்து வந்த சிகரெட் புகையோடு சேர்ந்து பிளட்பாரத்தில் பறந்தது.
   
அவனைப் போல் அங்கே பலர் பறந்தனர்…
   
விசிலை எடுத்து ஊதினார் ஸ்டேஷன் மாஸ்டர். பச்சைக் கொடி கடைசிப் பெட்டியிலிருந்து ஆடியது.
    
“பாங்!” நகர்ந்தது மின்வண்டி.. நகர்ந்தான் இளைஞன்.. வண்டியுடன் பிளாட்பாரத்தில் ஓடினான்.. ஓடியவாறு வாசற்படியை இரண்டாகப் பிரித்த கம்பியைப் பற்றி, ஃபுட்போர்டில் காலை வைத்துச் சிறிது நேரம் சாய்ந்த நிலையில் இருந்துவிட்டு, நிமிர்ந்து நின்றான்.. அப்படி ரயில் ஓடும்போது ஏறுவதில் அவனுக்கு மகிழ்ச்சி; பெரிய சாதனையொன்றைச் சாதித்துவிட்டதைப் போன்ற பூரிப்பு.
     
கோட்டை வந்தது. பிளாட்பாரத்தில் இறங்கினான்.. அந்தப் பெட்டியில் ஓர் இளம் பெண் ஏறினாள். இளைஞன் உற்சாகமாகப் புகையை ஊதினான். கண் கொட்டாமல் அவளையே பார்த்தான்.
   
விசில்..பாங்..சடக்…… சடக்….
  
  இளைஞன் பிளாட்பாரத்தில் ஓடினான். கொஞ்ச தூரம் ஓடி, கைப்பிடியைப்பற்றி, ஃபுட்போர்டில் காலை வைத்துத் தொங்கினான்.. இளம் பெண் அவனை ரசித்தாள்.. அதே பெட்டியில் இருந்த கிழவர் அவன் செயலைக் கண்டு பதறிவிட்டு, தலையைத் தொங்கபோட்டுக் கொண்டார்.
  
  இளைஞன் இளம் பெண்ணைப் பார்த்த வண்ணம் புகையில் வளையங்களை விட்டு, அவற்றின் நடுவே ஓர் அம்பைச் செலுத்தினான்.. அது அவளுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது; விழிகளின் அகலம் பெருத்தது.
     
“பொண்ணைப் பார்த்தா மாம்பலத்துப் பொண்ணாட்டம் தோணுது” என்று முணுமுணுத்தான் அவன்.
    
   பார்க்கில் பார்க் செய்தது மின்வண்டி. கூட்டம் மோதியது. இளைஞன் பிளாட்பாரத்தில் நின்றான். இளம் பெண்ணும் முதியவரும் அவனையே கண் கொட்டாமல் பார்த்தனர். அவளுக்கு அவன் ரயிலுடன் ஓடி வந்து ஏறுவதைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கிழவர் அவனைப் பார்த்து, ‘ஐயோ, ஓடி வந்து ஏறப் போகிறானே!’ என்று மனத்தை வாட்டிக் கொண்டார்.
   
   விசில்!...பாங்….சடக் சடக்….
   
    மீண்டும் அவன் அதே இயந்திர கதியில் செயல் புரிந்தான்.
      “ நிறைய இடம் இருக்கு; இங்கே உட்கார் தம்பி! வாசலில் நின்னு விழுந்து தொலைக்கப் போறே!” என்று ஒரு சில்க் சட்டைக்காரர் அவனிடம் துணிந்து சொன்னார்.
    
   இளைஞன் அவரைப் பார்த்து அலட்சியமாக   “ நான் சின்ன வயசிலிருந்து இப்படி பழகியவன் சார்! எனக்கு எல்லாம் தெரியும்” என்றான்.
    
  “நேத்து கூட கோடம்பாக்கத்துக்கும் மாம்பலத்துக்கும் நடுவே ஒரு பாவிப் பையன் அகப்பட்டுச் செத்துப் போனான். தினமும் இதே பொழப்பாப் போச்சு.”   
    தனது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார் சில்க் சட்டைக்காரர்.
     
இளம் பெண் அதைக் கேட்டுச் சிரித்தாள். மூலையில் முடங்கிக் கிடந்த முதியவர் திடீரென்று கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். அவருடைய விசும்பல் கேட்பதற்குப் பரிதாபமாக இருந்தது.
   
“பெரியவரே! ஏன் அழறீங்க?” என்று அந்த மனிதர் கேட்டபோது, கிழவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.. பேசமுடியாமல் திணறினார். கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவர் ”ஒண்ணுமில்லே” என்று சொல்லி, மீண்டும் தலையைக் குனிந்தார்.
    
இளைஞன் கிழவரைப் பார்த்துச் சிரித்தான். அவன் சிரிப்பு அந்தப் பெண்ணின் முகத்தில் புன்னகையை மலரச் செய்தது. ‘கையாலாகாத கிழவன்’ அவன் முணுமுணுத்தான்.
    
  எழும்பூர் அந்த ரயிலின் பயணப் பாதையில் எழும்பியது.
       கனமான பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு  வந்த ஒரு நடுத்தர வயது தம்பதியருக்கு உதவி செய்த இளைஞனின் கண்களில் பச்சை நிறம் திடீரெனப் பளிச்சிட்டது.. பிளாட்பாரத்தில் ஒயிலாக நடந்து சென்றாள் ஒரு பச்சைக் கிளிப் பெண். அவள் பின்னழகை ரசித்தவாறு அவன் நின்றான்.
   
விசில்…பாங்…சடக்…சடக்…
  
  இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது ரயில் ஓடிக்கொண்டிருந்தது.வேகமாய்ப் பறந்தான் அவன். கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டான். செயினை இழுத்து ரயிலை நிறுத்திவிட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. காரணம், பச்சைக் கிளிப் பெண்ணை நம்பி, மாம்பலத்துப் பெண்ணைக் கோட்டை விட்டு விட்டோமே என்பதுதான்!
     
இப்போது ஏறிய கம்பார்ட்மெண்டில் கிழவிகள் மயம்! திருப்பதி மொட்டைக் கிராக்கிகள் வேறு!
    
சேத்துப்பட்டைச் சேர்ந்தது ரயில். வேகமாய் இறங்கி ஓடினான் அவன். அந்த இளம் பெண்ணைத் தேடினான். அவளை இவன் கண்டான். இவனை அவள் கண்டாள்.
    
  “எக்மோர்ல இறங்லையாப்பா நீ?” என்று ரொம்பவும் அக்கறையாக அந்த சில்க் சட்டைக்காரர் அவனை விசாரித்தார்.. அவருக்கு ஏதோ ஒர் பதட்டம். இவன் செயலைப் பார்த்து கிழவருக்கு மீண்டும் அவனைக் கண்டதில் பயம். அது அவர் கண்ணில் தெரிந்தது..
   
   இந்த முறை அவன் வாசலில் நின்றபடியே இருந்தான். ‘பயலுக்குப் புத்தி வந்திருக்கு பரவாயில்லை’ என்று ‘சில்க்’ நினைத்தது. கிழவருக்கும் அவன் செய்கை இதமாக இருந்தது அந்த இதமான மனதிற்குள் மறுபடியும் ஒர் எரிமலையைத் தூண்டிவிட்டது. அடுத்து வந்த நுங்கம்பாக்கம். பயல் இறங்கினான். பழகிப் போன வேலையை மீண்டும் செய்தான்.
   
   “வேதாளப் பயல்” என்று முணுமுணுத்தது  சில்க்.
   
விசில்..பாங்..சடக்..சடக்…

கோடம்பாக்கம் என்ற நீல எழுத்துப் பலகை கண்ணில் பட்டதும், கிழவரின் முகத்தில் ஒரு கிலி; முத்தெனக் கோத்தது வியர்வை. கண்களின் ஈரம் உலர்ந்துவிட்டாற் போன்ற ஒரு பிரமை.
  
  “கடவுளே! கடவுளே! உனக்கு அடுக்குமா? என் மாணிக்கத்தை நசுக்கிட்டயே கடவுளே! கடவுளே!”
அலறினார் பெரியவர். அவருடைய அலறலுக்குப் பயந்துதான் அந்த மின்வண்டி வேகமாக ஒடுகிறதா? அதற்கு அடுத்து வரும் ஸ்டேஷன் மாம்பலமா, எமபுரிப் பட்டணமா? கிழவர் எழுந்து நின்று தவித்தார்.
   
சில்க் சட்டைக்காரர் கிழவரைப் பிடித்து மெல்ல உட்காரவைத்தார்.

“நேற்று..நேற்று..என் பிள்ளை இங்கே தான் ரயில்ல மாட்டிண்டு செத்துப் போனான். மூஞ்சி கூட தெரியாம நசுங்கி நாசமாப் போயிட்டான். என் ஒரே பையன்…..தங்க விக்கிரகம்…கடவுளே..நீயே ஒரு விக்கிரகம் மாதிரி இருக்கே..என் உயிர் விக்கிரகத்தை ஏன் பறிச்சிண்டே…” கிழவர் கத்தினார்.

   அவரைச் சமாதானப் படுத்த யாராலும் முடியவில்லை. இருப்புக் கொள்ளாமல் அவர் எழுந்து எழுந்து உட்கார்ந்தார். மகனைப் பறிகொடுத்த ஏக்கம் அவரைப் பைத்தியமாக்கி இருந்தது.
  
“நீங்க எங்கே இருக்கீங்க பெரியவரே?’

   “மாம்பலம்.”

“அடுத்த ஸ்டேஷன்ல இறங்குங்க, ஜாக்கிரதையா.”

   “இல்லே..இல்லே.. நான் இறங்கப் போறதில்லே. இந்த ரயில்ல நான் மேலும் கீழுமா போய் வரப்போறேன். என் மகன் ஆவி இந்தப் பெட்டியில சுத்துது. அதோட நான் பேசப் போறேன். என் ஒரே பையன் என் கூடப் பேசாம வேற யார் கிட்டே பேசப் போறான்? ரமேஷ்…ரமேஷ்.. இந்தப் பெட்டீல தானேடா இருக்கே?...சொல்லுடா..ரமேஷ்…” என்று அந்தக் கிழவர் அழுதுகொண்டே கூச்சல் போட்டார்.
  
  அவரைப் பார்த்துத் திக்பிரமை அடைந்து நின்றிருந்தான் இளைஞன். அவனுக்குள் பய உணர்ச்சி பரவியது.
   
  மாம்பலம் மெல்ல வந்தது.
   
“இறங்குங்க பெரியவரே”.

    “ மாட்டேன்….மாட்டேன்…”
  
    சில்க் சட்டைக்காரர் குண்டுக்கட்டாகக் கிழவரைத் தூக்கி வந்து இறக்கினார். கையையும், காலையும் உதைத்துக்கொண்டு அவர் துடிப்பதைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடிவிட்டது.
   
    இளைஞன் இறங்கிப் பார்த்தான். கிழவரை விட அந்த இளம் பெண்ணின் மேல்தான் அவனுக்குக் கண். அவள் மாம்பலத்தில் இறங்கவில்லை. ஜன்னலின் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
  
   “இந்தப் பெண் எங்கேதான் போகிறாள்?” என்று அவன் வியந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் மாம்பலம்தான். சீஸன் டிக்கெட்டும் அதுவரைதான்.
  
   விசில்!...பாங்….சடக்….சடக்…
   
  இளைஞன் ஒரு கணம் யோசித்தான். பிளாட்பாரத்தில் ஓடியவாறு ரயிலில் ஏறினான். இளம் பெண் புன்னகை புரிந்தாள். அவனும் பதில் புன்னகை பூத்தான். அவன் என்ணத்திலிருந்து அந்தக் கிழவர் மறைந்து போனார்.
  
   ந்தப் பெண் குரோம்பேட்டையில் இறங்கி, ரயில்வே லைன்களைக் கடந்து, எம்.ஐ.டி பக்கம் இருந்த சந்தில் மறைந்தாள்.
    
   இளைஞன் டிரெயினைத் தாம்பரத்திற்கு வழியனுப்பி வைத்துவிட்டு, அங்கிருந்த உணவு விடுதியில் ஒரு கப் காபி வாங்கிச் சுவைத்தான். சில விநாடிகளில் அவன் இதழ்களில் சிகரெட் நெளிந்தது.
   
     எதிர் வரிசையில் வந்த டிரெயினில் கூட்டம் நிரம்பி வழிந்தது.’பீக் அவர்’ ஆரம்பமாகிவிட்டது. நிற்க இடமில்லை.
    
     ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஏறியவர்களின் தொகை அதிகமாகியது. இளைஞனின் வாடிக்கை விளையாட்டும் அதிகமாகியது. உடன் போட்டிக்கு மேலும் இரண்டு பேர். அவர்கள் இவனை விட அதிசூரர்கள் போலும்! இளைஞனை முதலில் ஏறவிட்டு, அதற்குப் பிறகு ரயிலில் தொத்திக்கொண்டு அவனுக்குச் சவால் விட்டனர்.
    
      இளைஞனுக்கு மனக்கண்ணில் கிழவரின் துடிப்புத் தெரிந்தது. ‘என்னை இழந்துவிட்டால் என் தாயும் தந்தையும் அந்தக் கிழவரைப் போலதானே துடிப்பார்கள்? வேண்டாம் இந்தச் சவால். வேண்டாம் இந்த விஷப் பரீட்சை” இளைஞன் ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டான். ஈரம் கசிந்தது அங்கே.
     
     “என்னா வாத்யாரே! பின்னாலே புளி மாதிரி நின்னு போட்டே!. சவாலு இன்னா ஆச்சு? நான் எலெக்ட்ரிக் டிரெயின்லேயே பொறந்தவன் வாத்தியாரே…நம்ம கிட்டே நீ  வந்து போட்டி போட்டா தாரவாந்து பூடுவே!” என்றான் அவனைப் சவாலுக்கு அழைத்த பரட்டைத் தலை ஆசாமி.
     
   இளைஞன் அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் உள்ளே நின்றான்.
     
   கிண்டியைத் தாண்டியது மின்வண்டி. அங்கே ஏறிய கூட்டம் இன்னும் அதிகம். பரட்டைத்தலை ஆசாமியின் ரயில் விளையாட்டும் வெறியுடன் ஆரம்பமாகியது. மின்வண்டி ஏன் இப்படி ஓடுகிறது? யாரை விழுங்க இப்படி ஓடுகிறது. இளைஞன் பெருமூச்சுவிட்டான்..
   

      அந்தக் கம்பார்ட்மெண்டில் உட்கார்ந்திருந்தவர்களின் தலைகள் ஆடின. உடல்கள் தூக்கித் தூக்கிப் போட்டன. இளைஞன் கண்களை மூடிக்கொண்டான். ‘ஐயோ! என்னுள் ஏன் இன்னமும் அந்த பழைய வெறியன் இருக்கிறான்? ‘நீ போய்விடு..நீ போய்விடு!’ என்று ஊளையிடும் மனத்தினை அவன் உணர்ந்தான்.
   
      மாம்பலம் வந்துவிட்டது.
    
    ரயில் நின்றதும் மெல்ல இறங்கினான். அவன் எடுத்து வைத்த அடி ஒவ்வொன்றும் அமைதியாகவும் அழுத்தமாகவும் இருந்தது. அவன் கண்களில் அந்தக் கிழவர் மீண்டும் பட்டார். அவரைச் சுற்றியிருந்த கூட்டம் இன்னும் குறையவில்லை. அவருடைய துடிப்பும் அலறலும் அதிகமாகிக் கொண்டே இருந்தன. அவரை அழைத்துப் போக அங்கே யாரும் இதுவரை வரவில்லை போல் தோன்றியது.
    
      “இந்தக் கிழவர் என்னுள் என்னையே அழித்துவிடுவதற்காகவே இருந்து வந்த ஒரு குட்டிச் சாத்தானை நசுக்கிவிட்ட தெய்வம். நான் இனி அமைதியான பிராணி. இந்தக் கிழவருக்கும் கடவுள் அமைதியைத் தரட்டும். அதோ ரயில் ஓடிகொண்டிருக்கும் போதே அனாயாசமாகத் தொற்றிக் கொள்கிறானே அந்தப் பரட்டைத் தலையனுக்கும் எந்த விபத்தும் நேராமல் கடவுள் காக்கட்டும்.” என்று மனத்துள் வேண்டினான்.
     
   அந்தக் கிழவரின் முகவரியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு , அவருடைய வீட்டில் அவரைப் பத்திரமாகக் கொண்டு போய் சேர்த்தான், இளமைத் துள்ளலை ஆச்சரியமாக அடக்கிக் கொண்ட அந்த இளைஞன்.
           -----------------&&&&&&&&&&&-------------

      
   

      .
    
    
   
   
  




No comments:

Post a Comment