Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Tuesday, September 4, 2018

விதை நெல்





விதைநெல்

                      
"டேய் பசங்களா! டீ ஆறிடப் போவுது, குடிங்கஎன்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் பையன்களைப் பார்த்தாள்.மதுரம். அவள் மகன்  ரத்தினமும், குருக்கள் பையன் முரளியும் டீ குடித்துவிட்டுப் படிப்பைத் தொடர்ந்தார்கள். முரளியும், ரத்தினமும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தார்கள். ரத்தினம் தன் சந்தேகங்களைக் கேட்பான். முரளி நல்ல உதாரணத்துடன் அவனுக்கு விளக்கிச் சொல்வான்.

அவர்கள் படித்தது அந்த வீட்டிலேயே ஒரு சின்ன அறை. வெளியே ஹாலில் நிறைய காங்குகள் புதிதாக சாணி  மெழுகிய வாசனையுடன் நெல் நிரம்பி காட்சியளித்தன. ஒரு கயிற்றுக் கட்டிலில் சேனாபதி  கைகளை முட்டுக் கொடுத்தவாறு ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தார். பனியன் சட்டையில் மண் வாசம், மதிய உணவுக்குப் பின் அப்படியே பகல் தூக்கம்.
  
சென்னை பொன்மார் பகுதியில், பச்சைப் பசேல் என்று நிலங்கள் இன்னும் இருந்தன.  பல இடங்களில் அடுக்குமாடிக் கட்டிடஙகள் ஆங்காங்கே  எழும்பி வந்தன. சேனாபதி தன் மூன்று ஏக்கர் நிலத்தை, பல பேர் கட்டிடம் கட்டக் கேட்டும் கொடுக்காமல், விடாப்பிடியாக அதில் விவசாயம் செய்து வந்தார். வயலில் ஒரு கிணறு தோண்டியிருந்தார். தண்ணீர் அதில் வற்றாமல் இருந்தது. இரண்டு மாடுகளும், ஒரு டிராக்டரும் வைத்திருந்தார். நகர மத்தியில் விவசாயம் செய்யும் அவரை அனைவரும் வியப்போடு பார்த்தார்கள். ‘பாவி மனுஷன்….கோடி கோடியா பணம் கொட்டுற நிலத்தை விக்காம வச்சுக்கினு. இப்படியா ஒருத்தன் விவசாயம் பார்ப்பான்’ என்று பேசிக்கொண்டார்கள்.
பொன்மாரைச் சுற்றிலும் சிறிது தொலைவில் ஐ டெக் கம்பெனிகள் இருப்பதைப் பார்த்து, சேனாபதிக்கு தன் பிள்ளை நல்ல உத்தியோகம் பார்க்கவேண்டும் என்று ஆசை இருந்தது. அவனை எப்படியாவது ஒரு இஞ்சினீரிங் கல்லூரியில் சேர்த்துவிட எண்ணினார். அவருடைய பூர்வீக கிராமம் வேலூருக்கு அருகில் இருந்தது. மனைவி பொன்மாரைச் சேர்ந்தவளாய் இருந்ததாலும், அவளுடைய சீதனமாய் நிலம் அங்கு கிடைத்ததாலும், சேனாபதி தன் கிராமத்தை விட்டுப் பொன்மாருக்கு வந்துவிட்டார். 

கிராமத்தில் ஏற்றம் இறைக்கும் போது, ‘பிள்ளையாரே வாரும், பெருமாளே வாரும்’ என்று ஏற்றப் பாட்டுப் பாடியதால், அவருக்குப் பிள்ளையார் மேல் எப்போதும் பக்தி. தன் வீடு, நிலத்திற்கு அருகிலேயே சிறியதாய் ஒரு கோயில் கட்டிக் கொண்டார். ஊர் மக்கள் வழிபாடு செய்ய வந்ததால், அதில் பூஜை செய்ய தன் கிராமத்தில் சின்ன வயதில் ஒன்றாய்ப் படித்த கணபதி குருக்களைக் கூப்பிட்டார். 

கணபதி திருப்பதியில் குருகுலத்தில் சேர்ந்து வேதம் படித்து, குடும்ப சூழ்நிலையின் காரணமாகப்  படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டவர். கோயில் கும்பாபிஷேகம், கல்யாணம் கார்த்திகை என்று கூப்பிட்டதில் சிறிது வருமானம் பார்த்தார். ‘சென்னைக்கு நீயும் வா, என் வீட்டுக்கு அருகில் அவுட் ஹவுசில் இருந்து கொள்’ என்று சேனாபதி கூப்பிட்டதும், சென்னையில் பிழைத்துக் கொள்ளலாம் என்று குடும்பத்துடன் வந்துவிட்டார். .
 “சாமீ,, உங்க புள்ளை நல்லா படிக்கிறான். ரத்தினத்துக்கு அவன் கூட இருந்து படிச்சா அவனும் படிப்பான். முரளி படிப்புச் செலவை நாங்க ஏத்துக்கிறோம். ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல படிக்கட்டும். என்ன சொல்றீங்க அய்யரே” என்றுதான் மதுரம் முரளியையும் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பிலேயே சேர்த்துவிட்டாள். ரத்தினமும் முரளியும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள்.

  ,  வருடத்திற்கு கோயில் பூஜைக்கு கணபதி குருக்கள் குடும்பத்துக்கு சேனாபதி நெல் அளந்தார். சம்பளமும் கொடுத்தார். கணபதி குருக்கள் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு, சுற்றியுள்ள ஊர்களில் கூப்பிட்டால் தன் மொபெட்டில் போய் சுப, அசுப காரியங்கள் செய்தார். அவருடைய மனைவி அடுக்குமாடி வீடுகளில் சமையலும் செய்ததால், வாழ்க்கை சுமாராகப் போய்க்கொண்டிருந்தது. விடிகாலையில் கணபதி போய்விடும் நாள்களில், முரளி கோயிலில் விளக்கேற்றி மந்திரங்கள் சொன்னான்.
  
சேனாபதியின் மூத்த மகன் சுப்பிரமணி தன் தந்தையை அடிக்கடி திட்டுவான். அவருடைய ஜாதிக்காரர்கள் முக்கால்வாசிப் பேர் தங்களுடைய  ஜாதி முற்பட்டோராக கருதப் பட்டதால், லஞ்சம் கொடுத்து பிற்பட்ட இனம் என்று மாற்றிக் கொண்டதைச் சுட்டிக் காட்டினான். சுப்பிரமணிக்கு நல்ல படிப்பும், வேலையும் முற்பட்டவன் என்பதால் கிடைக்கவில்லை. அதை அவன் குத்திக் காட்டி, தன் தம்பியின் ஜாதியையாவது பிற்பட்ட இனத்தில் சேர்க்கச் சொல்லி வற்புறுத்தினான்.   
யாராவது கண்டுபிடித்தால் கம்பி எண்ண வேண்டுமே என்ற பயம் சேனாபதிக்கு இருந்தது.. மதுரம் தன் முன்னோர் பிற்பட்ட இனம்தான் என்று சில உறவுகளைச் சொன்னதால், சேனாபதி ரத்தினத்துக்கு  சாதி மாற்றி பள்ளியில் சேர்த்து,  சான்றிதழ் கூட பிற்ப்ட்ட சாதி என்று லஞ்சம் கொடுத்து வாங்கிவிட்டார்.  ஆனால் தமது பெண்ணைத் தன் சாதியாய்த் தேடித்தேடிப்  பார்த்து ஒரு பையனுக்குத்தான் கொடுத்தார்!

ரத்தினம் முரளியிடம் நன்றாகக் கற்றுக் கொண்டான். தேர்வும் வந்து, ப்ளஸ் டூ பரீட்சை எழுதினார்கள்.  ரிஸல்டும் வந்தது. முரளி 98% வாங்கினான். ரத்தினம் 75% வாங்கினான்.

ரத்தினம் பிற்பட்டோர் கோட்டாவில்  ஒரு அரசுக் கல்லூரியில் இஞ்சினீரிங் சேர்ந்தான். கட்டணம் குறைச்சல். ஆனால், முரளிக்கு தனியார் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. கட்டணம் பல மடங்கு அதிகமாய் இருந்தது. கணபதி குருக்கள் தன் கையைப் பிசைந்தார், சென்னைக்கு வந்ததில் அவருக்கு வருமானம் அதிகரித்தது என்றாலும், அவ்வளவு பெரிய தொகையை எப்படிக் கட்டுவதென்று விழித்தார்.  .
  
சேனாபதி சொன்னார், “அய்யரே! நான் சாதி மாற்றி  ஓசியை, பிசி பண்ணிட்டேன். பாவம்யா நீ! உன் ஜாதியிலே அதுக்கு வழி இல்ல…என்று கணபதி குருக்களையும், முரளியையும் பார்த்துப் பரிதாபப்பட்டார்.

அவர் சொல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ரத்தினம் தன் தந்தையிடம், “அப்பா! முரளியின் அறிவுக்கு இந்த அரசாங்கம் ஒண்ணுமே செய்யலை. அவன் சின்ன வயசுலிருந்து எனக்கு அடிப்படை சொல்லிக் கொடுத்தான். நான் இவ்வளவு மார்க் அவனாலதான் வாங்கினேன். அவன் இப்படி உதவி இல்லாம  நிக்கறதை என்னால் பார்த்துகினு இருக்க முடியலை. நீதான் எப்பவும் சொல்லுவியே விதை நெல்லைக் காப்பத்தி வைக்கணும்னு. அவன் விதை நெல்லுப்பா!” என்று சொல்லிவிட்டுத் தன் நண்பனுக்காக அழுதான்.
“எனக்கு உதவி செய்யுங்க ஐயா...அதை நான் கடனா ஏத்துக்கிறேன். படிச்சு முடிச்சு வேலைக்குச் சேர்ந்ததும் அடைச்சுடறேன்”
 என்று தழுதழுத்தான் முரளி, சேனாபதியிடம்.
**********

No comments:

Post a Comment