நானே நானா, யாரோ தானா!!
8. 1965,66,67 ல் தமிழகம்
தமிழகத்தின் இன்றைய
நல்லவைகளுக்கும், தீயவைகளுக்கும் இந்த மூன்று வருடங்கள் மிக முக்கியமானவை. 1965 ல்
இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. ரயில்வே நிலையங்களில் உள்ள பலகைகளில் இருந்த
இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்கள். காட்பாடி தாண்டி வரும் தலங்கை என்கிற ஸ்டேஷனையே
கொளுத்தி தரைமட்டம் ஆக்கினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. எல்லாரும் வீதிக்கு
வந்தார்கள். பேண்ட் போட்டுக்கொண்டு போன மாணவர்களை போலீஸ் தடியால் அடித்தார்கள்.
1966 ல் அது நீறு
பூத்த நெருப்பாய் இருந்தது. அது அணைந்துவிடாமல் திமுக பார்த்துக் கொண்டது. நான் பணியாற்றிய
பள்ளியில் திமுக- காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர்கள் ஆசிரியர் அறையில் வாக்குவாதம் செய்தார்கள்.
நான் இந்தி எதிர்ப்பில் பங்குகொண்டு போலீஸ் என் காலை பதம் பார்த்ததால் திமுக ஆதரவு
எடுத்தேன். போதாக்குறைக்கு மூதறிஞர் ராஜாஜி கூட்டணி அமைத்தார். 1967 தேர்தல் வந்தது.
என் போன்ற ஆசிரியர்களை வாக்குச் சாவடியில் போட்டார்கள். என்னை ஏலகிரி மலை கிராமத்துக்குப்
போட்டார்கள். என் வேலை வாக்காளர் ரோல் படித்து அடிக்கோடு இடுவது. என் பக்கத்தில் ரப்பர்
ஸ்டாம்ப் கொடுப்பவர் இருந்தார். எல்லாரும் திமுக அனுதாபிகள். மலைவாழ் மக்களில் எல்லாரும்
காங்கிரஸ் ஆதரவு. காளை மாட்டுச் சின்னம். அதில் சிலர் படிப்பறிவு இல்லாமல் அல்லது கண்
பார்வை மங்கல் என்று வந்தால் இந்த ரப்பர் ஸ்டாம்ப் ஆசாமி அவர்களுடன் செல்வார். இதோ
மாட்டுக்கு குத்துகிறேன் என்று உதய சூரியனுக்கு குத்திவிடுவார். அப்படி 50 ஓட்டுகளாவது
போட்டிருப்பார். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சி பிடித்தது.
பள்ளியில் இவ்வாறு
தாங்கள் ஓட்டர்களை ஏமாற்றி சூரியனுக்கு குத்தியதை ஆசிரியர்கள் பேசினார்கள். காங்கிரஸ்
ஆதரவு ஆசிரியர்கள் வாயடைத்துப் போனார்கள்.
இன்று நினைத்துப்
பார்க்கிறேன். எத்தனை பெரிய தவறுகளை அந்த ஆசிரியர் கூட்டம், என்னையும் சேர்த்து, செய்துவிட்டது.
எம்ஜியார் இன்னும்
சிறப்பாக ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் அவருக்குத் தகுந்த அறிவுறுத்தல் இல்லை. அவருக்குப்
பின் வந்த ஜெயலலிதா தான் படித்தவர் என்றாலும், கூடா நட்பின் விளைவினால் தமிழ்நாட்டைக்
கெடுத்துவிட்டுப் போய்விட்டார்.
இப்போது யார் ஆட்சிக்கு
வந்தாலும் ஆள் மாறாலாமே தவிர நடத்தை அதேமாதிரிதான் இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கும்
கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. டாஸ்மாக்கில் தங்களை இழந்த கூட்டத்திற்கு வேறு
சிந்தனை வராது.
No comments:
Post a Comment