நானே
நானா,
யாரோ தானா!!
9. கலைமகளும் கணையாழியும்.
என் பெரியப்பாவின்
மாட்டுப்பெண் அவர். என் அண்ணி. கிருஷ்ணகிரி போன்ற நகரத்திலிருந்து எங்கள்
கிராமத்துக்கு வாழ்க்கைப்பட வந்தார். அவருக்கு என் போன்ற சிறுவர்கள்தான்
பொழுதுபோக்கு. எங்களைத் தன் அறையில் உட்கார வைத்துக்கொண்டு கதை
சொல்வார். பூதம், பிசாசு போன்ற கதைகளைக்
கேட்டு எனக்குப் பயமாயிருக்கும் ஆறு வயது. ராத்திரி லாந்தர் வெளிச்சத்தில்
புழக்கடை பக்கம் போகவே அஞ்சுவேன். பெரும்பாலும் சிம்னி விளக்கில்தான்
அவருடைய பூதம் வரும். இந்த மாதிரி கதைகள் என் கற்பனா சக்தியைத்
தூண்டிவிட்டு நானும் என் போன்ற சிறுவர், சிறுமிகளுக்குக் கதை
சொல்வேன்.
1956 ல் நான் ஆறாம் வகுப்பு படிக்க 5 மைல் தொலைவில் உள்ள திருப்பத்தூருக்குப்
போனோம். அக்கிரஹாரத்தில் அப்பா ஒரு பெரிய வீட்டை வாங்கினார்.
அதன் ஹாலில் கிரிக்கெட் விளையாடலாம், அத்தனை பெரிசு.
நவராத்திரி கொலு வைத்தால் 17 படிகள் இருக்கும்.
எதிரே
வக்கீல் வீடு. அவர்கள் வீட்டில் ஆனந்தவிகடன் வாங்குவார்கள். ஒருமுறை
நான் படிக்காதவாறு என்னுடன் படித்த வக்கீல் பையன் மறைத்து வைத்துவிட்டான். எனவே அப்பாவிடம் சொல்லி எங்கள் வீட்டிலும் ஆ.வி வந்த்து.
கூடவே ஆங்கில ஹிந்துவும். நான் இரண்டையும் ஒரு
வரி விடாமல் படிப்பேன். ஆங்கிலம் புரியாமல் போனால் அப்பாவிடம்
கேட்பேன். அப்பா எனக்கு லிப்கோ அகராதி ஒன்று தடிமனாய் வாங்கிக்கொடுத்தார்.
பத்திரிகையில்
இருந்த கதைகள் போல எழுதிப்பார்ப்பேன்.
பத்தாவது படிக்கும்போது ஆவி முகவரிக்கு எழுதிப்போடுவேன். ஸ்டாம்ப் வைத்து அனுப்பியதில் எல்லாம் திரும்பிவிடும். பல முறை அந்தப் பத்திரிகை ஆசிரியர் மணியனின் கடிதம் உடன் வரும். இன்னும் நன்றாக எழுதுமாறு இருக்கும். அது பிரிண்டெட்
கடிதம். நான் மணியனே எழுதியது என பெருமையாக நினைப்பேன்.
1967 ம் ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு. நான் ‘விநோதன் சாய்ராம்’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டிருந்தேன்.
கல்கி படித்ததில் நா.பா என் ஆதர்ஷ எழுத்தாளர்.
அவர் தீபம் என்ற பத்திரிகை ஆரம்பித்தார். 1967 ல் மொழிபிரச்சினைக் கருத்தரங்கு என்று ஒரு போட்டி வைத்து, கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டார். நான் அனுப்பிய கட்டுரை
முதல் பரிசு பெற்றது. அதே ஆண்டு தினமணி கதிர் பத்திரிகை நகைச்சுவைச்
சிறுகதைப்போட்டி நட்த்தியது. என் கதை ஆறுதல் பரிசு பெற்றது.
இப்படியாக நான் எழுதத் தொடங்கினேன். அந்தக் காலத்தில்
கலைமகள், கணையாழி பத்திரிகைகளில் வந்தால் பெருமை. இரண்டிலும் என் படைப்புகள் வந்தன.
1983 ல் பாரதி நூற்றாண்டுக்காக “பாரதி மகத்துவம்” என்று ஒரு கவிதை எழுதி கணையாழியில் வெளியிட்டேன். ஆங்கிலக்
கவிஞர் T.S Eliot’s Murder in the Cathedral தான் இந்தக் கவிதைக்கு
இன்ஸ்பிரேஷன்..
1979 க்குப் பின் நான் தமிழில் எழுதவில்லை. 2013 ல்
A Dalit’s Love, 2017 ல் The Secrets of Awetosa என்கிற ஆங்கில நாவல்கள் , 2019 ல் கிழக்கு பதிப்பகம்
மூலமாக “நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்” ஆகிய
அச்சுப் புத்தகங்களும் வெளிவந்தன., அமேஸான் கிண்டிலில் ஏனைய மின்
நூல்களும் வெளியிட்டிருக்கிறேன்.
நானே
நானா,
யாரோ தானா!!
10 பரிசும் விருதும்
இந்தக்
காலத்தில் எந்த லாபியும், சிபாரிசும் இல்லாமல் பரிசோ, விருதோ கிடைக்காது.
ஆனால் எனக்கு அவை கிடைத்தன. நான் ஏழாவது படிக்கையில்
கையெழுத்துப் போட்டியில் ஜியாமெட்ரிக் பாக்ஸை பரிசாகப் பெற்றதுதான் முதலாவதாகும்.
அதற்கப்புறம் 1967 ல் நா.பாவின் தீபம் பத்திரிகை என் ஆங்கிலம் பற்றிய கட்டுரைக்கு முதல் பரிசைக் கொடுத்தது.
தீபம் அலுவலகம் மவுண்ட்ரோடில் இருந்தது. தம் அழகான
கையெழுத்தில் நா.பா அவர்கள் ஒரு போஸ்ட் கார்டில் பரிசளிப்பு விழாவுக்கு
வரச்சொல்லி கடிதம் போட்டார். நான் அப்போது ஜோலார்பேட்டை உயர்நிலைப்பள்ளியில்
பயிற்சி பெறா ஆசிரியராய் இருந்தேன். சென்னைக்கு உடனே கிளம்பி,
குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த நண்பன் அறைக்கு வந்து தங்கினேன்.
அடுத்தநாள் மாலை நான்கு மணிக்கு தீபம் அலுவலகத்திற்குப் போய்விட்டோம்.
நா.பா அவர்கள் வரவேற்று தேநீர்
உபசரிப்பு நடந்தது. எழுத்தாளர் அகிலன் அவர்கள் தலைமை வகிப்பார்
என்றார். தீபம் இணையாசிரியர் அசோகமித்திரன் என் கட்டுரையின் ஆங்கில
மேற்கோள்தான் முதல் பரிசுக்கு காரணம் என்றார். 20 எழுத்தாளர்கள்,
அனைவரும் பிரபலமானவர்கள் ஒவ்வொருவராய் வந்தனர். நான் படித்து வியந்த அகிலன், ஆதவன், தி.ஜானகிராமன் எல்லோருடனும் வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
அகிலன்
அவர்கள் கையால் Deepam 1 என்கிற விலையுயர்ந்த பார்க்கர் பேனாவைப் பெற்றேன். இன்னும்
அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறேன். அப்போது என் வயது
20.
1968 ஜனவரி தீபம் இதழில் என் புகைப்படத்துடன் கட்டுரை வெளியானது.
1979 ல் கல்கி பத்திரிகை நடத்திய கல்கியின் நாவலான “அலை ஓசை கருத்தரங்கு” போட்டியில் என் கட்டுரை ஆறுதல் பரிசு பெற்று வெளியானது.
1969 ல் நான் சென்னையில் பி.டி படித்தபோது நினைத்துக்கொண்டால்
தீபம் ஆபீசுக்குப் போய்விடுவேன்.
இப்போது
நான் நல்லாசிரியர் விருது பெற்றதைப் பற்றிச் சொல்கிறேன்..
1993 ல் நான் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வேண்டாம் என்று கிருஷ்ணகிரி
DIET க்கு அதற்குச் சமமான முதுநிலை விரிவுரையாளர்-சீனியர் லெக்சரர்- பதவிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டேன்.
அது ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
NCERT-SCERT-DIET
என்ற வரிசையில் வரும் மாவட்டத்திற்கு ஒன்றாய் இருக்கும் நிறுவனம்.
1-8 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும். நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஆசிரிய டிப்ளமாவுக்கு மாணவர்கள் படிப்பார்கள். 69% இட ஒதுக்கீட்டில்
தேர்ந்தெடுக்கப்ப்படுவார்கள். என்னைப் போன்றவர்கள் ஒரு துறைக்கு
HOD என இருப்பார்கள். அப்படி 7 துறைகள் அங்கே உண்டு. நான் curriculum
department HOD. வகுப்புகளுக்குப் புத்தகம் எழுதுதல், எழுத வைத்தல், எழுதிய புத்தகங்களை மதிப்பீடு செய்தல்
என வேலை. எனக்குக் கீழே இரண்டு லெக்சரர்கள் பணியாற்றினர்.
1996 ல் எங்கள் நிறுவனத்திற்கு நல்லாசிரியர் விருதுக்கு சீனியர்கள் விண்ணப்பம் அளிக்குமாறு
கடிதம் வந்தது. என்னைக் கேட்க நான் மறுத்துவிட்டேன். ஏனெனில் “புரட்சித்தலைவி நல்லாசிரியர் விருது”
என பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை.
1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்று கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். 1997 ல் அவர் அந்த விருதை “டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர்
விருது” என பெயரிட்டார். எனக்கு இஷ்டமில்லாவிடினும்
என் துறை லெக்சரர்கள் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து என்னிடம் கையொப்பம் வாங்கிவிட்டார்கள்.
அப்படி நானும் எனக்கு ஜூனியரான இரண்டு பேரும் விண்ணப்பித்தோம்.
நியாயமாய் என் பெயரை நிறுவன முதல்வர் 1 என குறிப்பிட்டிருக்கவேண்டும்.
ஆனால் ஒரு ஜூனியர் பெயரை 1 என போட்டு, எனக்கு 3 எனக் கொடுத்தார். மேலதிகாரிகளுக்கு
அனுப்பினார். என் மேல் என்ன கோபமோ அல்லது 1 என்று போடப்பட்டவர் அவருக்கு என்ன கொடுத்தாரோ தெரியாது. இதை டைப் அடித்த பெண்மணி ரகசியமாய் என்னிடம் சொல்லிவிட்டு பரிதாபப்பட்டார்.
ஒரு மாதம்
கழித்து என் துறை லெக்சரர் என்னிடம் வந்து சார் கை கொடுங்க. உங்களுக்கு நல்லசிரியர்
விருது கிடைச்சிருக்கு. என்றார். நான் பிரின்ஸிபால்
சொல்லட்டும் என்றேன் நம்பாமல். நிறுவன ப்யூன் வந்து தெலுங்கில்
பிரின்ஸிபால் கூப்பிடுகிறார் என்றார். நான் போனேன் வாழ்த்து சொன்ன
அவர் முகத்தில் ஈயாடவில்லை. நானும் அதிகம் பேசவில்லை.
கருணாநிதியைப்
பிடிக்காமல் போனாலும் அவர் கையால் விருது வாங்கினேன்.
நானே
நானா,
யாரோ தானா!!
11. மொழிகள் ஏராளம்
கிராமத்தில்
நான் பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரை படித்தேன். தமிழ் மட்டும்தான்.
ஆறாம் வகுப்பில்தான் ABCD அறிந்தேன். என் அம்மாவுக்கு பெங்களூரிலிருந்து அவள் அப்பா, தம்பிகள்
அடிக்கடி கன்னடத்தில் போஸ்ட் கார்டு எழுதுவார்கள். எனக்கு என்னடா
தமிழ் மாதிரி எழுத்துக்கள் இல்லாமல் குண்டு குண்டாய் அழகாய் இருக்கு எனத் தோன்றும்.
அம்மாவின் கையெழுத்து அத்தனை அழகு. தாத்தாவின்
கையெழுத்து கிறுக்கலாக இருக்கும். மற்ற மாமாக்களின் கையெழுத்து
நன்றாய் இருக்கும். அம்மாவை தான் எழுதும் கடிதத்தைப் படித்துக்
காட்டச் சொல்வேன். கடைசியில் கூடலே ஜபாபு என்று முடிப்பார்.
நான் பத்தாம்
வகுப்பு படித்தபோது ஒரு கன்னடம் கற்பிக்கும் புத்தகம் வாங்கினேன். அதை எழுத்துக்கூட்டி கற்றதில்
அம்மாவும், மாமாக்களும் எழுதுவதை ஓரளவுக்குப் படிக்க முடிந்தது.
ஆனால் நன்றாகக் கற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் தெலுங்கு-கன்னடம் இரண்டும் கலந்த மொழிதான் பேசுவோம்.
எனக்கு
தஞ்சாவூர் மராட்டி பேசும் பெண் மனைவியாக ஆனாள். அதற்கு முன் பார்த்த பெண்கள் எல்லாரும் கன்னடம்
பேசுபவர்கள். என்னைச் சில பெண்கள் நிராகரித்தார்கள். நான் சிலரை வேண்டாம் என்றேன். பெங்களூரில் இருந்த என்
பாட்டிக்குக் கோபம் வந்து போடா உனக்கு இனிமேல் நான் யாரையும் சொல்வதில்லை என்றாள்.
வீட்டிலும் அதே மாதிரி பேசினார்கள். அதனால் நான்
மராட்டி பெண் வந்ததும் ஹைய்யா இன்னொரு மொழி நமக்குத் தெரியப் போகிறது என்று ஒப்புக்கொண்டேன்.
கல்யாணமாகி 45 வருடம் ஆகப்போகிறது. நன்றாய் புரிகிறது, ஆனால் மராட்டி பேச வரவில்லை.
1978 ல் முதுநிலைப் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக வேலூர் அரசினர் முஸ்லீம் பள்ளிக்குப்
போனேன். அங்கே தமிழ், ஆங்கிலம்,
உருது மீடியங்கள் இருந்தன. 11,12 வகுப்புகளுக்கு
நான் ஒருவனே ஆங்கில ஆசிரியன்.. உருது மீடியம் மாணவர்களுக்கு அர்த்தம்
சொல்ல ஒரு ஆசிரியரிடம் சொற்களைத் தெரிந்துகொண்டு பாடம் நடத்தினேன். ஆனால் உருதும் வரவில்லை.
கிருஷ்ணகிரி DIET க்கு போனேன்.
அங்கே மாணவர்கள் தமிழ், தெலுங்கு மீடியம் படித்தார்கள்.
தெலுங்கு மீடியத்தில் நான் பேசிய தெலுகு அவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்திருக்கும்.
ஆனால் சிரிக்காமல் அன்புடன் பழகினார்கள். ஒரு தமிழ்-தெலுகு நன்றாய் படிக்கத் தெரிந்த திருத்தணி மாணவன் எனக்கு தெலுங்கு கற்பித்தான்.
ஏற்கனவே கன்னட எழுத்துகள் தெரிந்ததால் எளிதாக இருந்தது. ஆனால் நான் திருவள்ளூர் மாவட்ட டயட்டுக்கு மாற்றல் பெற, தெலுகும் நின்று போயிற்று.
இந்தி
எதிர்ப்பில் இந்தியும் இல்லாமல் போயிற்று.
1970 களில் என் ஆசிரிய நண்பனுக்கு மைசூரில் மலையாளம் நான்கு மாதம் கற்க கடிதம் வந்தது.
அவன் ஏய் எழுத்தாளா, மலையாளம் கற்க மைசூருக்கு
போ என்றான். ஆனால் என்னால் முடியவில்லை.
பெங்களூரில்
உள்ள என் பேத்திகள் இந்தி படிக்கிறார்கள்.
இந்தி சீரியல்கள் பார்த்து அவர்கள் சிரிக்கும்போது நான் புரியாமல் விழிக்கிறேன். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.
ஆனால் நான் கட்டாயமாக அவர்களுடன் கன்னடமும், என்
மனைவி மராட்டியும் பேசுகிறோம்.
பதினைந்து
வயதுக்குள் மொழிகளைக் கற்றுவிடவேண்டும்.
வயதாக ஆக மொழி கற்கும் திறன் குறைந்துபோய்விடுகிறது. இது என் அனுபவம். மற்றவர்களுக்கு எப்படியோ.
12. அப்பாவை பார்க்கலை
அன்டிரெயிண்ட்
ஆசிரியராக நான் ஜோலார்ப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில்தான் மூன்று வருடம் (1966-69) வேலை பார்த்தேன்.
ஆனால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் கொடுத்தார்கள்.
அடிப்படை சம்பளம் ரூ140 + டீ ஏ ரூ50= ரூ 190. இப்போது ரூ200 என் பாக்கெட்டில்
எப்போதும் இருக்கிறது. அன்று மாத சம்பளமே அதுதான்.
சுமார் 2000 பிள்ளைகள் இரு பாலரும்
படித்தார்கள். ஆசிரியர்கள் 70 பேர்..
இப்போது
அமைச்சராக இருக்கும் ஒருவரது தகப்பனார் ஆசிரியர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பார். அவர் வந்து ஆலமரத்தடியில்
வந்து உட்கார்ந்தால் அன்று சம்பள டிராஃப்ட் வந்திருக்கிறது என்று அர்த்தம்.
மாலை நான்கு மணியளவில் சம்பளம் விநியோகிக்கப்படும். அவரிடம் கடன் பட்ட ஆசிரியர்கள் பலர் ஒழுங்காகப் பணம் கொடுப்பார்கள்.
சிலர் தலையைச் சொரிந்து அடுத்த மாசம் என்பார்கள். அவரிடம் என்னைப் போன்ற சிலர்தான் கடன் வாங்காதவர்கள்..
அவர் தி.க காரர். தோள்பட்டையில் கறுப்புத் துண்டு போட்டிருப்பார்.
“யோவ் வாத்யாரே! ஐயமாருதான் தப்பாம பணம் கட்டிர்றாங்க.
உனக்கு என்னய்யா கேடு” என்று ஒரு கெட்ட வார்த்தை
சொல்லித் திட்டுவார்.
அப்போது
திமுக ஆட்சி பிடித்த காலம்.
வயதான தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரும்
வட்டிக்கு கடன் கொடுப்பார். அவர் வசவை காதால் கேட்க முடியாது.
அவர் திமுக அநுதாபி. மொட்டை கடிதாசி போடுவதில்
வல்லவர். ஆட்சிக்கு வந்த புதிதில் திமுக பள்ளிக்கே வந்து சகாயவிலையில்
ரேஷன்கடை சர்க்கரை, அரிசி விநியோகித்தது. அந்த ஆசிரியர் மொட்டை கடிதத்தில் ரேஷன் கடைக்காரனுக்கு உதய சூரியன் பேசும்
என்று போடுவார். அதனால் ஒழுங்கான அளவில் எடை போடுவார்கள்.
ஜோலார்ப்பேட்டைக்கு 12 கிமீ தொலைவில் மல்லானூர்
என்ற ஊர் ஆந்திராவில் இருக்கிறது. பெங்களூர் பாசஞ்சரில் சில ஆசிரியர்கள்
சனி ஞாயிறுகளில் மது குடிக்கப் போவார்கள்.
அங்கே
ஒரு விசித்திரம். ஒரு வீட்டில் முன் அறை தமிழ்நாடாம், பின் அறை ஆந்திரமாம்.
முன் அறையில் மது குடிப்பது குற்றமாம் என்று கூறிச் சிரிப்பார்கள்.
இதில் திக, திமுக, காங்கிரஸ்
வேறுபாடில்லாமல் குடிப்பார்கள்.
ஆசிரியர்
அறையில் கட்சி சண்டை அப்படி நடக்கும்.
ஆனால் எதிரில் இருந்த டீ கடைக்கு ஒன்றாகப் போவார்கள்.
அந்தப்
பள்ளியின் நூலகத்தில் ஒரு விசித்திரம்.
பொன்னியின் செல்வன் என்ற புத்தகம் அட்டை மட்டும் இருக்கும். நடுவில் உள்ள கதையை யாரோ உருவிவிட்டிருப்பார்கள். இப்படி
பல புத்தகங்கள் இருக்கும் வெறும் அட்டையுடன்.
ஒரு செகண்டரி
கிரேட் ஆசிரியர் இருந்தார்.
அவர் பிள்ளைகளை சென்னை, மகாபலிபுரம் என்று கூட்டிப்போவார்.
பணம் வசூலிப்பார். ஆனால் ஜோலார்ப்பேட்டையிலிருந்து
பாஸஞ்சரில் சென்னைக்கு டிக்கெட் வாங்காமல் பிள்ளைகளை அழைத்துப்போவார். அதை பெருமையாக அந்த கார்டுக்கு பணம் வெட்டிவிடுவேன் என்பார்.
அந்தப்
பள்ளியில் மாதாமாதம் புரோகிரஸ் ரிபோர்ட் போடுவேன். ஒரு மாணவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டுவிடுவதாக
சில மாணவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். நான் அப்பாவை நாளை கூப்டுனு
வா என்றேன்.
“சார் நான் அப்பாவை பார்த்ததேயில்லை” என்றான்.
“அவர் எங்கே இருக்கார்?”
“வீட்லதான் சார். அவர் கார்த்தால 4 மணிக்கு வேலைக்குப் போறார். ராத்திரி 11 மணிக்கு வீட்டுக்கு வர்றார். அதனால் நான் பார்க்கலை”
என்றான் அந்த ரயில்வே காங்கி தொழிலாளி பையன்.
No comments:
Post a Comment