நானே
நானா,
யாரோ தானா!!
6. நிறைவேறாத ஆசைகள்
அம்மாவுக்குப்
பதினான்கு வயதிலேயே பூப்பு அடைவதற்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. அப்போது அப்பாவுக்கு
19 வயது. அம்மாவுக்கு 23 வயதானபோதுதான் நான் பிறந்தேன். அதனால் என்னை எப்படி வளர்த்திருப்பார்கள்
என்று உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
ஆமாம், நான் 50 ஏக்கர் நிலம் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை. என்னைப்
பார்த்துக்கொள்ள ஓர் ஆயா. என்னைத் தெருவில் இறங்கி விளையாடவே
விடமாட்டாள். அந்த கிராமத்துப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் நினைவு
இருக்கிறது. மேள தாளத்துடன் சேர்த்தார்கள். பட்டுச் சொக்காய். அன்று பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும்
இனிப்பு வழங்கினார்கள்.. மற்ற குழந்தைகள் எல்லாரும் சாதாரண உடையில்
வந்தபோது நான் மட்டும் தினசரி உயர்வான உடை. வாத்தியார் மற்ற பிள்ளைகளை
கோலால் அடித்தபோது என்னை மட்டும் அது சீந்தவேயில்லை. எனக்கு இதெல்லாம்
ஒரு மாதிரி பட்டது. ஒரு மாணவன் கோலில் அடிபட்டு அழுதபோது எனக்கும்
பயம் வந்து நானும் அழுத்து நினைவிருக்கிறது.
பள்ளி
விட்டதும் ஆயா வந்து தயாராகப் பள்ளியில் நிற்பாள். மற்ற மாணவர்கள் குதூகலமாய் மண்ணில் ஆடும்போது
ஆயா தடுத்து, வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டு போய்விடுவாள்.
நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால், ஆயாவும்
நிற்பாள். என் பக்கத்து வீட்டுச் சிறுவன் என்னைக் கூப்பிட்டால்
ஆயா “சாமீ நீ அவங்களோட சேர வேணாம்” என்பாள்.
எனக்கு மற்ற பிள்ளைகளெல்லாம் சுதந்திரமாய் திரியும்போது நான் மட்டும்
ஏன் அப்படி முடியவில்லை என்று துக்கம் துக்கமாய் வரும். அதனால்
அம்மாவிடம் வந்து அழுவேன். அப்பா அம்மாவை மீறி என் விஷயத்தில்
எதுவும் செய்யமாட்டார். எனக்கு நான்கு வயதான போது தம்பி பிறந்தான்.
அதனால் ஆயாவின் கண்காணிப்பு எனக்கு ஆறு வயதான போது குறைந்தது.
நான் மற்ற பையன்களோடு விளையாடப்போவேன்.
அப்பாவிடம்
எனக்கும் டமடம் (நீச்சல்) கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். அப்பா உதட்டில் விரலை வைத்து உஷ் அம்மா கிட்டே சொல்லாதே என்று எங்கள் நிலத்துக்
கிணற்றுக்கு அழைத்துப்போனார். அப்பா ஒரு சொர புருடைக்கு ஏற்பாடு
செய்திருந்தார். அதை இடுப்பில் கட்டிக்கொள்ள, நிலத்து ஆள் வஜ்ஜிரம் கற்றுக்கொடுத்தார். இரண்டு நாள்
கற்றிருப்பேன். அம்மாவிடம் யாரோ இதைச் சொல்லிவிட அம்மா ஆகாசத்துக்கும்
பூமிக்கும் எகிறினாள். வஜ்ஜிரம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள எனக்கு
மீண்டும் காவல். என் நீச்சல் ஆசை இன்று வரை நிறைவேறாமல் போய்விட்டது.
பெங்களூரில்
என் மூத்த மகள் இருக்கும் அபார்ட்மெண்ட்ஸில் நீச்சல் குளம் இருக்கிறது. அவள் நீச்சல் கற்றுக்கொண்டு, என் இரு பேத்திகளும் அருமையாக நீந்துகிறார்கள்.
நான் அந்தக் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் நீந்துவதை ஒரு பெருமூச்சுடன்
காண்கிறேன். அம்மா என்னைச் சிறுவயதில் தடுத்தாள் இல்லையா?
அப்போதிலிருந்து அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க ஆரம்பித்தேன்.
அம்மா ஏதாவது சொன்னால் எதிரிடையாகச் செய்வேன்.
என் கதையைக்
கேட்ட மனைவி சொன்னாள்:.
“நீங்க சென்னையில்தானே சைதாப்பேட்டையில் படிச்சீங்க. பக்கத்துலியே
ஒய் எம் சி ஏ நீச்சல் குளம் இருக்கே, . ஏன் கத்துக்கலை?”
ஆமாம். வாழ்வில் நான் செய்த தவறு
அதுதான்.
சென்றதினி
மீளாது….(நிறைவேறாதவை
இன்னும் தொடரும்)
No comments:
Post a Comment