நானே நானா, யாரோ தானா!!
7. அழகழகாய் ஐந்து பெண்கள்
மூன்று வருடங்கள் நான் அன்டிரெயிண்ட் ஆசிரியராக அந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தேன். (1966-69). என் வீட்டில் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை.. ஏனெனில் நான்கு வீடுகள் தள்ளி சிண்ட்கேட் வங்கி மானேஜர் பழக்கமாகியிருந்தார். அம்மாவிடம் அவர் தெலுங்கில் பேசுவார். ரூபாய் இரண்டாயிரம் மேலே உள்ளவர்களுக்குக் கொடுத்தால் கிளார்க் வேலை வாங்கிவிடலாம் என்றார். அது வங்கிகள் தேசியமயமாகாத காலம். என்னிடம் கேட்டபோது
எனக்கு ஆசிரியர் வேலைதான் பிடித்திருக்கிறது, நான் சென்னையில் BT (Now B.Ed) படிக்கப் போகிறேன் என்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் 1969 ல் சேர்ந்துவிட்டேன். அப்போது தீபம், தினமணி கதிர், கலைமகள் என்று பத்திரிகைகளில் என் கதை, கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. கல்லூரி முதல்வருக்கு என்னைப் பிடித்துப்போய்விட்டது. எனக்கும் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
எனக்கு கல்லூரி ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நானும் இன்னொரு மாணவனும் தி.நகரில் உஸ்மான் ரோட்டில் ஒரு மாதாந்திர லாட்ஜில் அறை எடுத்தோம். இப்போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் இருக்கிறதே அதன் மேல்மாடியில். லாட்ஜ் முதலாளி மியூஸிக் அகாடாமி எதிரே பங்களவில் இருந்தார். அவரைப் பார்த்தது கூட இல்லை எதிரே ரேகா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இரு கோடுகள் படத்தில் ஒரு சீனில் வரும். அதன் ஷூட்டிங் பார்தேன்.
நாதன்ஸ் கஃபேயில் 30 டிக்கெட் சாப்பாடு புக் ரூ90 தான். காலை 8.30 மணிக்கே சாப்பாடு ரெடி. போர் அடித்தால் பாண்டி பஜார் கீதா கேப்பில் ராத்திரி சாப்பாடு. எலெக்டிரிக் டிரெயின் ஸ்டூடண்ட்ஸ் மூன்று மாத சீசன் டிக்கெட் வெறும் ரூ.7.50 தான். அதாவது தாம்பரம் டு பீச். .
ஒருநாள் மாலை கல்லூரி விட்டதும் லாட்ஜுக்கு வந்தால், எங்கள் அறைப் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. என் டிரங்க் பெட்டியும், நண்பனுடைய பெட்டியும் சூறையாடப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மானேஜர் வந்து பார்த்தார். நான் பர்ஸ் உபயோகிக்காமல், கிழவிகள் வைத்துக்கொள்வார்களே அது போன்ற சுருக்குப் பையில் பணம் வைத்திருந்தேன். அதனால் என் பணம் அப்படியே இருந்தது. திருட வந்தவன் பர்ஸை எதிர்பார்த்திருப்பான். ஆனால் என் நண்பனுடைய பர்ஸ் போய்விட்டது. போனில் லாட்ஜ் ஓனரைப் பிடித்து புகார் சொன்னால் ஒரு லேடி போலீஸில் புகார் செய்யச் சொன்னாள். அடுத்தநாள் தாழ்ப்பாளை ரிபேர் செய்ய மானேஜரிடம் சொன்னாள்.
அப்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் மிகுந்த பரபரப்பாய் இருந்த்து. ஒரு போலீஸ்கார்ர் என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளி வெளியே விட்டார். வழிவிடு என்றதும் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து அழகழகாய் ஐந்து ஆறு இளம் பெண்கள் இறக்கிவிடப்பட்டார்கள். கூடவே நான்கைந்து ஆண்கள். அந்த போலீஸ்கார்ர் சொன்னார் “தம்பீ இது பிராத்தல் கேஸ்கள். நீ உள்ளே இருந்திருந்தால் உன்னையும் அவங்களோடு சேத்துவிட்டிருப்பாங்க. நாளைக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடு” என்றார். நானும் என் நண்பனும் தப்பித்தால் போதும் என அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் நாங்கள் கல்லூரிக்குப் போகவில்லை. தாழ்ப்பாள் ரிப்பேர் செய்யப்பட்டது.
பக்கத்து அறையில் பிரசாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு தெலுங்கர் “எனக்கு மானேஜர் மீதுதான் சந்தேகம். நான் வேற லாட்ஜ் பார்க்கலாம்னு இருக்கேன்” என்றார்.
எங்களுக்கு அந்த தி.நகர் உஸ்மான் ரோடு பிடித்துவிட்டதால் காலி செய்யவில்லை.
No comments:
Post a Comment