நானே
நானா, யாரோ தானா!!
2. 38 வயசுப் புள்ள
யதேச்சையாக என் ரெட்மீ செல்போன் கேமிராவில் என் பிம்பத்தைப் பார்த்து, முகத்தை அஷ்ட கோணலாக்கினேன். அது பயந்துபோய் என் வயது 45 என்றது. மேலும் செல்போனை திருப்பத் திருப்ப அது 48, 38 என்று காட்டியது. இது என்னடா வம்பு என்று என் உண்மையான 74 வயது கவலைப்பட்டது.
சரி, 48 வயதில் நான் என்ன செய்தேன்
என்று மனதில் காட்சிப்படுத்தினேன். அது 1993 ம் ஆண்டு. நான் மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி
பிடிக்காமல், அதற்குச் சமமான சீனியர் லெக்சரர் பணிக்கு கிருஷ்ணகிரி
DIET க்கு மாற்றல் ஆகிப்போனேன்.
டயட் முதல்வரிடம்
என் ஜாயினிங் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு ஆசிரியர் அறைக்குப் போனேன். அறைக்கு அழைத்துப்போன பியூன்
புது வாத்தியார் என்று தெலுங்கு உச்சரிப்பில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அங்கிருந்த
பெண் லெக்சரர் என்னை சீனியர் லெக்சரர் என்று ஒப்புக்கொள்ள மறுத்து,. “உங்களை பாத்தா
38 வயசுப் புள்ள மாதிரி தெரியுது” என்றார்.
என் தலைமுடிதான் காரணம். இப்போதுகூட மீசை தாடி
நரைத்திருக்கிறதே தவிர தலைமுடி கன்னங்கரேல்தான். உதிர்வது வேறு
விஷயம். முன்பெல்லாம் பார்பர் ஷாப்புக்கு இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை போவேன். இப்போது 5 மாதம்.
அதனால் கொரானா லாக்டவுனுக்குக் கவலைப்படவில்லை.
என் மனைவிக்கு 40 வயதிலேயே பாதி தலை நரைத்துவிட்டது.
என் அம்மாவுக்கும் அவளுக்கும் நரைமுடி போட்டி நடக்கும். இப்போது முழுசாய்
வெள்ளி. என் அம்மாவுக்கு 75 வயதில் கூட
காதோரம் மட்டும்தான் நரைத்திருந்தது. 94 வயதில் அம்மா கறுப்பு
வெள்ளி முடிகளுடன் இறந்தார். எனக்கு அம்மா வழி கிஃப்ட் இது என்று நினைக்கிறேன். சில சமயம் சாபமா.
என்று கூட எண்ணுவேன். என் மகள்கள் கூட இப்போது நடுவயது நெருங்குகிறார்கள்.
அவர்களுக்கும். கன்னங்கரேல்தான்.
ஒருநாள்
இன்னொரு லெக்சரர் “எந்த டை அடிக்கிறீங்க. எனக்கு மட்டும் சொல்லுங்க”
என்றார்.
நான் தமாஷாக
ஆனால் சீரியஸாய் முகத்தை வைத்துக்கொண்டு,
“நான் 1986 ல் ஹிமாச்சல் டூர் போனேன். அங்கே ஒரு சாமியார் எண்ணெய் பாட்டிலை கொடுத்தார். வருடத்திற்கு
இரண்டு முறை மூன்று மணி நேரம் ஊறிக் குளிக்கிறேன். இன்னும் ரெண்டு பாட்டில்தான்
மீதம் இருக்கு. அதுதான் என் கறுப்புமுடி ரகசியம்” என்றேன்.
நான் கிருஷ்ணகிரி
டயட்டை விட்டு மாற்றல் ஆகும் வரை அவர் அந்த பாட்டிலை பற்றிக் கேட்டு கெஞ்சுவார். நான் பொய் சொன்னேன் என்றால் கூட அவர் நம்பவில்லை.
“சார், டை பற்றி ஆராய்ச்சி செய்திருக்கேன்..உங்கள் கறுப்பு தனிதான்” என்பார்.
ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் சிலர்
என் வில்லன்கள். என் தலையையும், டிரைவிங் லைசன்ஸையும் மாறி மாறிப் பார்த்து, நான் சீனியர்
சிடிஸன்தானா என்று அவர்கள் திணறும்போது நான் நொந்துபோகிறேன்.
அதனால் ரயில் பயணத்துக்கு நான் நரைத்த ஐந்து நாள் தாடியுடன்தான்
போகிறேன். ஏனெனில் ஒருமுறை தலை நரைத்த மனைவியைக் காண்பித்து இவங்க
என் ஒய்ஃப் என்று சொல்லி என்னை வயசானவன் மாதிரி காண்பிக்க வேண்டியதாய் போயிற்று.
(அடுத்து என் வயது மாணவன்).
No comments:
Post a Comment