Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, May 20, 2020

நானே நானா, யாரோ தானா!!


நானே நானா, யாரோ தானா!!

4. மாடு இருக்கும் வீடு

கல்யாணத்திற்காக நான் நான்கு பெண்கள் பார்த்துவிட்டேன். எதுவும் சரிப்பட்டு வரவில்லை. எனக்கு வயது 28.75 ஆகிவிட்டது. அப்பா என்னைச் செட்டியார் கடைக்குப் போய் மளிகை சாமான் வாங்கி வர அனுப்பி ஒரு பெரிய லிஸ்டைக் கொடுத்தார். கடைவீதியில் அந்தக் கடை இருந்தது. வீட்டில் வெள்ளை நிற ஃபியட் கார் இருந்தது. நான் டிரைவ் செய்துகொண்டு கடைத்தெருவுக்குப் போனேன்.


செட்டியார் வரவேற்றார். கடைப்பையன் சாமான்களைக் கட்டினான்.

“நேத்து நான் வாங்கின வீட்டில் பால் காய்ச்சினேன். வெளி வாசலில் இருந்து பார்த்தால் நேராய் கிணறு. அந்த மாதிரி இருக்கக் கூடாதாம்.. அதை மறைக்க சுவர் கட்டினேன். ஹோமம் செய்தேன்” என்று செட்டியார் தான் வாங்கிய வீட்டுப் புராணம் பாடினார். நான் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

காரை காரேஜில் நிறுத்தியதும் திடீரென்று என் மனக்கண்ணில் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. எங்கள் கிராமத்து வீட்டின் வாசலுக்கு நேராய் கிணறு இருந்த காட்சி அது. அதனால்தானோ என்னவோ வீட்டில் சில குழப்பங்கள், மனக் கஷ்டங்கள் எல்லாமும். . அம்மாவிடமும், அப்பாவிடமும் சொன்னேன். என் கல்யாணம், என் தங்கை கல்யாணம் தடைப்படுவது அந்தக் கிணற்றினால்தான் என்றேன். உடனே சுறுசுறுப்பானேன். மேஸ்திரிக்குச் சொல்லி அனுப்பி வந்தார். எஸ்டிமேட் போட்டார்..

கிராமத்து வீடு பூட்டிதான் இருக்கும். அப்பா அம்மா இருவரையும் நானே காரில் அழைத்துப் போய் விட்டேன். கிணற்றை மறைக்கும் வேலை ஜரூராக நடந்தது.

அன்று இரவு 10 மணி இருக்கும். பக்கத்து வீட்டு நாகராஜன் மாமா காலிங் பெல் அடித்துக் கூப்பிட்டார்.

“அன்சாயி!  யாரோ சாந்தாபாயாம் ஃபோனில் கூப்பிடறாங்க. நாகராஜனைக் கூப்பிடுங்கன்னதும் எதிர் வீட்டில் என்னை கூப்பிட்டாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது உன் அப்பா பேரும் அதுதானாமே” என்றார்.

“ஆமாம், மாமா. எங்க அப்பாவோட அஃபீஷியல் பேரு ரங்கராஜன். சொந்தக்காரங்களுக்கு அவரு பேரு நாகராஜன். அதுதான் உங்களைக் கூப்பிட்டிருக்காங்க.”

நான் ஃபோனில் சாந்தா மாமியிடம் பேசினேன். “உனக்கு ஒரு பொண்ணு வந்திருக்கு. நம்ம மாத்வ பொண்ணுதான். நல்ல இடம். ஆனா கன்னடம் இல்லை. மராட்டி பொண்ணு. உனக்கு சரியா? “ என்றார் மாமி.

எனக்கு மொழிப்பிரச்னை இல்லை என்றேன். “அப்ப நாளான்னைக்கே மெட்ராசுக்கு வா.”

மாமி சொன்னதைப் போல 1975 மே 14 ம் தேதி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இரு வீட்டாருக்கும் பிடித்திருந்தது..

என் கண்ணில் அந்த ஊமை ஜோசியன் தோன்றினான். அவன் சொன்னது ஏறக்குறைய நிஜமானது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் பக்கத்து வீட்டில் ஒரு ஊமை வந்து சைகையில் ஏதோ பேசுகிறான். நீயும் கேள் என்று அவனை எங்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
நான் அவனிடம் என் கல்யாணம் எப்போது என்றேன். இந்த வருஷம் ஆகும் என்றான் சைகையில். எங்கேயிருந்து பெண் வரும்.என்றால் சென்னை திசையைக் காட்டி, பெண் வீட்டில் கறவை மாடுகள் இருக்கும் என்று பால் கறப்பதுபோல் காட்டினான். என் தங்கைக்கு எனக்குப் பின்னால்தான் கல்யாணம் ஆகும் என்றான்.

1975 ஆகஸ்ட் 25ல் என் கல்யாணம் ஆயிற்று. 

அந்த ஊமை சொன்னதைப் போல என் மனைவி திருவல்லிகேணியில் இருந்தாள்.. ரோடு எங்கும் பசு மாடுகள் திரிந்தன. அதுதான் கறவை மாடுகள் இருக்கும் வீடு!! என் மாமியார் மூலமாய் என் தங்கைக்கு வரன் அமைந்தது.

இப்போதும் கிராமத்து வீட்டுக்குப் போனால் அந்த சுவரை ஒருமுறை தொட்டுப் பார்க்கிறேன்!!


No comments:

Post a Comment