Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Saturday, October 20, 2018

நான் எழுத்தாளனானேன்


நான் எழுத்தாளனானேன்

1956ல் நாங்கள் திருப்பத்துருக்கு வந்தோம். ஆறாம் வகுப்பில் சேர்ந்தேன். எனக்குத் தமிழ் தாய்மொழியில்லை. எதிர் வீட்டில் என்னுடன் படித்த   வக்கீல் பையன் பிராமணத் தமிழ் பேசினான். நானும் அவனும் ஒரே வகுப்பு..எனக்கு கிராமீய தமிழ்தான் தெரியும். ஏனெனில் எங்கள் வீட்டில் இப்போது கூட.பிராமணத் தமிழ் பேசமாட்டோம், அவர்கள் வீட்டில் ஆனந்த விகடன், குமுதம், கல்கி வாங்கினார்கள். பத்திரிகைகளின் அறிமுகம் அப்போதுதான் கிடைத்தது. அது அக்கிரஹாரம். அதனால் என் நண்பர்கள் எல்லோரும் தமிழ் பிராமணப் பையன்கள்.என் தமிழைக் கேட்டு என்னை விநோதமாகப் பார்த்தார்கள். “இங்கே வா!என்பதை நான் இங்க வாமேஎன்பேன். என்னடா இவன் மே போட்டுப் பேசறான் என்று சிரிப்பார்கள். பாத்துகினு, வந்துகினு என்றுதான் பேசுவேன். காரணம் கிராமத்தில் எங்கள் வீட்டுக்குவந்த விவசாயிகள் அப்படித்தான் என் அப்பாவிடம் பேசுவார்கள்.வட ஆற்காட்டு பாஷை அது. என் அப்பாவும் அவர்கள் மொழியிலேயே பேசுவார். என் அம்மா பாடுதான் திண்டாட்டம். 94 வயதில் இறக்கும் வரையில் அவருக்கு பிராமணத் தமிழ் வரவேயில்லை. தமிழ் எழுதப் படிக்க முயலவேயில்லை. பெங்களூரில் எட்டாம் வகுப்பு வரை கன்னடம் படித்தவர். ‘கினுபாஷைதான் எல்லோரிடமும். அவர் தன் பாஷை பற்றிக் கவலைப்படவும் இல்லை. மாமிகள் அம்மாவைப்  புரிந்துகொண்டார்கள்.
  
எதிர் வீட்டில் போய் விகடன் படிப்பேன். துப்பறியும் சாம்பு படக்கதை பிடித்துப் போயிற்று. விகடன் கைக்குக் கிடைப்பதே கஷ்டமாயிற்று. ஒருநாள் அந்தப் பையனிட்ம் சண்டை. அவன் விகடனை ஒளித்து வைத்துவிட்டான். எனக்கு உயிரே போன மாதிரி ஆகிவிட்டது. அதனால் அப்பாவிடம் விகடன் வாங்கு என்று நச்சரிக்க, அவர் ஆங்கில ஹிந்துவுடன் அதை வாங்கிப் போட்டார். வெள்ளிக்கிழமை பேப்பர் பாய் வரும் வழியை நோக்கித் தவம்.அதனால் 1956 முதல் 2008 வரை விடாமல் (பல ஊர்கள், வீடுகள் மாறினாலும்) வீட்டுக்கு வந்த விகடனை, அதன் தற்போதைய கொள்கை பிடிக்காமல் 2008ல் நிறுத்திவிட்ட நாள் இன்று. அதனால் அந்தப் பழைய நாள்களை பெருமூச்சுடன் நினைக்கவேண்டியதாகப் போய்விட்டது.

 மணியன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது முதல் கதையை எழுதிப்போட்டேன். அச்சடித்த கடிதம் ஒன்று விகடனில் இருந்து வந்தது; கதையை இன்னும் நன்றாக எழுதவும் என்று. அந்த வயதில் விகடனிடமிருந்தே கடிதம் மணியன் கையெழுத்தில் வந்தது என்று பெருமையாக்க காட்டினேன் எல்லோரிடமும்..என்னை உற்சாகப் படுத்திய கடிதம் அது. அதன் பிறகு விகடனை ஊன்றிப் படித்து எவ்வாறு கதைகள் எழுதப்படுகின்றன என்று பார்ப்பேன். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து, விகடனின் ஒரு பக்கத்தில் இருக்கும் கதையை காப்பி பண்ணுவேன். ஓஹோ, ஒரு பக்கம் இங்கே வெள்ளைத்தாளில் இத்தனை பக்கம் வருகிறதா என்று ஆராய்ச்சி வேறு! ஐயோ எனக்கு படம் போடத் தெரியாதே என்ற கவலை வேறு! ஓவியர்கள்தான் அதை வரைவார்கள் என்று அப்போது தெரியவில்லை.


கல்லூரி படிக்கும்போது பல பத்திரிகைகளுக்கு பல கதைகள் எழுதி திரும்பி வந்தன. 1967ல் ஆசிரியப் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது நா.பாவின் தீபம் பத்திரிகை ஒரு மொழிப்பிரச்னை கருத்தரங்கு நடத்திய போது என் கட்டுரை முதல் பரிசு பெற்றது. தீபம் என்று பொறித்த பார்க்கர் பேனாவை அந்தப் பத்திரிகை அலுவலத்தில், எழுத்தாளர் அகிலன் அவர்கள் வழங்கினார். நான் வியந்த தி. ஜானகிராமன், அசோகமித்ரன் ஆகியோரை அந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன். இன்னும் பல எழுத்தாளர்களை அங்கு பார்த்தேன். அதே வாரம் சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் என் முதல் சிறுகதை “செஞ்சுரிநாதன்” வெளியானது. அதற்கு அடுத்த மாதம் பல பத்திரிகைகள் திருப்பிய கதை “அவரும் அவளும்” சிறுகதை கலைமகள் பத்திரிகை ஏற்றுக்கொண்டு பிரசுரித்தது. அப்போது முதல் இன்று வரை  பத்திரிகைகள் எப்படி கதைகளை ஏற்கின்றன, மறுக்கின்றன என்கிற ரகசியம் புரியவேயில்லை. தினமணி கதிர் எழுத்தாளனாகவே பல கதைகள் வந்தன.

2004ல் ஓய்வு பெற்றேன். ஆங்கில ஆசிரியனான நான் கல்கி ஆபீஸ் சென்று சீதாரவியிடம் என் இரண்டு அத்தியாயங்களைக் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு உதடைப் பிதுக்கினார். பிறகு விகடனுக்கு ஒரு கடிதம் போட்டேன்.அதைப் பார்த்துவிட்டு விகடனில் அவள் விகடன் பத்திரிகை ஆசிரியர் பேசுவார் என்றார்கள். 

அதன் படி இப்போது மல்லிகை மகள் ஆசிரியராகவுள்ள ம.கா.சிவஞானம் அவள் விகடன் பத்திரிகைக்காக தொலைபேசியில் அரைமணிநேரம் பேசினார். என்னை இரண்டு அத்தியாங்கள் மாதிரிக்குக் கொடுக்கச் சொன்னார். அப்போது விகடன் அலுவலகம் கிரீம்ஸ் சாலையில் இருந்தது. அங்கு போனேன். அத்தியாயங்கள் சிவஞானத்திற்குப் பிடித்துப் போய்விட்டது. நாங்கு கேரக்டர்களை மூன்றாகக் குறைத்து மறுபடியும் எழுதி வரச் சொன்னார். இரண்டு நாளில் மாற்றி எழுதி மீண்டும் அவள் விகடன் அலுவலகத்தில் அவரிடம் கொடுக்க அவர் ஏற்றுகொண்டார்.
அவள் விகடனில் 32 இதழ்கள் தொடராக என் ஆங்கிலம் பற்றிய கட்டுர்ரைகள் வந்தன. விகடன் புத்தகமாகவும் வெளியிட்டனர். 

நான்கு வருடங்களாக பிரசுரிப்பதை நிறுத்திவிட இப்போது “நீங்களும் பேசலாம் இங்கிலீஷ்” என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகத்தில் கொடுத்திருகிறேன். இன்னும் சில அத்தியாயங்களைச் சேர்த்திருக்கிறேன். 2019 சென்னை புத்தக காட்சியில் இடம் பெறும்.
 A Dalit's Love, The Secrets of Awetosa are my English novels available as paperback and eBook in Amazon, Flipkart, Educreation
இப்போது என் FB, Blog தான் எழுதும் களம்.
  

No comments:

Post a Comment