Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Sunday, October 21, 2018

சபரிமலை சாஸ்தா தரிசனம் 4


பள்ளி விட்டு ஒருநாள் வீட்டுக்குப் போனபோது, வேலைக்காரி ஜெயம்மா கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்திருந்தாள். அதை வாங்கிப் படித்தேன். மனைவி மாத விலக்கு ஆனதைப் பற்றி அதில் இருந்தது. நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக இருந்தது. அவள் பெட்ரூம் கதவை மூடிகொண்டு உள்ளே இருந்தாள். நான் இனிமேல் சமையல் அறையில் கதவை மூடிகொண்டு இருக்கவேண்டும். நான் இல்லாத போது ஜெயம்மாதான் அவளுக்கு உதவி செய்தாள். அந்த மூன்று நாளில் நானும் அவளும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்த முறை விலக்குக்கு முன் என் மாமியார் அவர்களை வரவழைத்து விடுவது என்று முடிவு ஆயிற்று!
மேல்மருவத்தூரில் அம்மனையே  பெண்கள் தொட்டுக் கும்பிடலாமாம்! அதனால்தான் பெண்கள் கூட்டம் அங்கு அலைமோதுகிறது போலும்! பெண்கள் பிறந்த ஆசாரமான வீடுகளில் இது எவ்வளவு கடினம்! அதுவும் அவர்கள் வயதுக்கு வந்துவிட்டால்! 
   ஐயப்ப விரதத்தில் இந்த மாதவிலக்கு பிரதானமாகக் கருதப்படுவதால்தான் 10-50 வயதுப் பெண்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விரதம் இருக்கும் வீடுகளில் இது பெண்களாலாயே மனவுவந்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் பக்தியில் எந்தக் குறைப்பாடுமில்லை. இப்போது மாற்று மததவர் வீம்பாக சந்நிதானம் வருகிறார்கள். இது மதச் சட்டத்தை மீறுதலாகும். சில வீம்பு பிடித்த இந்துப் பெண்களும் அறியாமை காரணமாக வரத் துடிக்கிறார்கள். பொறுமை இல்லாத பக்தி வீண்தான். நல்ல இந்துப் பெண் மாதவிலக்கான நேரத்தில் எந்தக் கோயிலுக்கும் போகமாட்டாள்.


விரதம் இருந்ததில் நான் ஐந்து கிலோ குறைந்துவிட்டேன். முகத்தில் தாடி வளர்ந்து என் தோற்றமே மாறிவிட்டதில், பக்கத்தில் வர குழந்தை தயங்கினாள். முன்பெல்லாம் பள்ளியில் மாணவர்கள் தவறு செய்தால் மிகவும் கடுமையாகத் திட்டுவேன். இப்போது சாந்தம் குடிகொண்டு கடும் வார்த்தைகளே வராமல் பார்த்துக் கொண்டேன்.
என் மாமியார் ஹேமாபாய் சென்னையிலிருந்து மகளுக்கு உதவி செய்ய வந்துவிட்டார். அதனால் இரண்டாவதாக மனைவி விலக்கான போது நான் கஷ்டப்படவில்லை. ஒரு நாள் மாமியார் என் காபியில் சர்க்கரை என்று எண்ணி உப்பை போட்டுவிட்டார்! மற்ற சமயம் மனைவி இப்படி செய்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்திருப்பேன். செய்தது மாமியார். நாசூக்காகச் சொன்னேன். அந்த அளவுக்கு பொறுமையின் சிகரமாக மாறியதில், இன்றளவும் எனக்கு கோபம் வருவதில்லை.

வாணியம்பாடிக்கு ஒருமுறை நடுவில் குருசாமி வீட்டுக்கு பஜனைக்குப் போனேன். அவ்வளவுதான். திருப்பத்தூர் சங்கர மடத்தில் இருமுடி கட்டும் தேதியை குருசாமி சொன்னார்.
ஐயப்ப விரதம் இவ்வளவு பேரைக் கவர்ந்திருப்பதற்கு காரணம் அந்த பஜனையின் போது கண்டுபிடித்தேன்! பிராமணரல்லாதார் அனைவரும் தங்களை ஒரு பிராமணனைப்  போன்று நடந்துகொள்வதற்குச் செய்யும் பாவனைதான் அது! அவர்கள் உள் மனதில் அவ்வாறான எண்ணம் இருக்கிறது போலும். ‘தொடாதே, நான் மடி’ என்று தங்கள் சொந்தங்களை அவர்கள் விரட்டும் போது நமுட்டுச் சிரிப்பு வந்தது. சில சாமிகள் நல்ல குரலில் பாடும்போது, அங்கு பக்தி வாடை வீசும்.  சில குருசாமிகள் விரதத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். ’நம் வரையில் ஒழுங்காக இருந்தால் சரி’ என்று திருப்பத்தூர் சாமி சொன்னபடி நான் 60 நாள் விரதம்  இருந்தேன். இருமுடி கட்டிக் கொண்டு திருவனந்தபுரம் போகும் ரயிலில் ஜோலார்பேட்டையில் ஏறி செங்கோட்டையில் இறங்கி, எருமேலி சென்றோம்.

அங்கு பேட்டைதுள்ளல் நடக்கும் போது நான் சரியாக குதிக்கவில்லை. அது ஒரு பிசிகல் எக்ஸசைஸ். ஆனால் நான் சங்கோஜப் பட்டுவிட்டேன். 42 கி.மீ நடக்கையில் தொடைகள் வலித்தன. (இரண்டாம் முறை சென்றபோது, ஒரு சாமியுடன் ஜோடி சேர்ந்து நன்றாகத் துள்ளினேன். அந்தமுறை மலையேறுவது கடினமாக இல்லை!). காட்டு வழியில் விதவிதமான மரங்கள். ஒற்றையடிப் பாதையில் போகும்போது, அவற்றின் வேர்களை மிதிப்பதும் ஒருவகை உடல்நலம் சார்ந்த மருத்துவக் கருத்துதான். காட்டில் தமிழ் எழுத்துக்களில் ‘சாராயம் கிடைக்கும்’ என்று ஒரு மரத்தடியில் மேஜை போட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து மனதில் வேதனை உண்டாயிற்று. அந்த அளவுக்கு தமிழர்கள் பலவீனமானவர்களா?  

எங்கள் குருசாமி மலையாள தேசத்தவர் அல்லவா? கோயிலில் அவருக்கு இன்ஃப்ளூயன்ஸ் இருந்தது. ஒரு நல்ல இடம் கிடைத்து அங்கே தேங்காயில் இருந்த நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றும் சடங்கு ஆரம்பமானது. குருசாமி ஒவ்வொருவரையும் அந்த நிகழ்ச்சியின் போது எதிரில் சரணம் சொல்லிக் கொண்டு உட்காரச் சொன்னார். ஒரு சாமியின் தேங்காய் அழுகிவிட்டிருந்தது! அந்த நெய் ஸ்வாமிக்குப் போகவில்லை. அந்த நபர் ’ஐயோ சாமி நான் எந்த குற்றமும் செய்யவில்லை!’ என்று அலறினார்! அதைப் பார்த்து சில சாமிகள் பயந்துபோனார்கள். சிலர் அவரவர் தேங்காய்க்கு எதிரில் உட்காரத் தயங்கி , தேங்காய்களைக் கலந்து விடலாம் என்றார்கள். குருசாமி இதை ஓட்டுக்கு விட்டார்! ’இஷ்டம் இருக்கிறவர்கள் எதிரில் உட்காரலாம், இஷ்டம் இல்லாதவர்களின் தேங்காய்கள் கலந்துவிடப்படும்! நெய் கெட்டுப் போனால், சரியாக விரதம் இருந்தோமா என்று அவரவர் மனசாட்சிக்கு தெரியும்’ என்றார். 40 பேர் இருந்தோம். அதில் என்னையும் சேர்த்து ஆறு பேர்தான் இஷ்டம் என்று எதிரில் உட்கார்ந்தோம்! என் தேங்காய் நெய் நன்றாக இருந்தது! ஐயப்பன் மேல் அந்த சமயத்தில் எனக்கு உண்மையான பக்தி தோன்றி என் உடல் சிலிர்த்தது! அந்த அனுபவம் மறக்க முடியாதது. மற்ற ஐவருடைய நெய்யும் நன்றாக இருந்தது! பதினெட்டுப் படியில் ஏறி இறைவனைக் கண்டபோதும் உடல் சிலிர்த்தது.

பத்து வருடம் கழித்து இரண்டாவது முறையாக சென்றேன். அத்துடன் என் ஐயப்பனை தேடல் முடிந்தது. அங்கே நடைபெறும் சில அசுத்தங்களைப் பார்த்து மனம் வெறுத்ததால் மூன்றாவது முறை போகவில்லை. இப்போது நிலைமை எப்படியோ?
விரதம் இருப்பது மனக்கட்டுப்பாட்டுக்குத்தான். ஐயப்ப விரதத்தை அவர்கள் கூறுகிறபடி செய்வது என்பது ஒரு சவால்தான். நம் மனத்திண்மையைச் சோதிக்கும் அளவுகோல் இந்த விரதம் என்று சொல்லலாம். ஆனால் இப்போது சில சாமிகள் விரதம் இருப்பதாகவே தெரியவில்லை. பெண்ணைத் தொடுவதைத் தவிர எல்லா வரம்புகளியும் அறியாமை காரணமாக மீறுகிறார்கள்.இஷ்டப்படி வரம்பு மீறுகிறார்கள். அவர்கள் சபரிமலை செல்வது வீண்தான் என்று தோன்றுகிறது.


No comments:

Post a Comment