(இந்தக்
கட்டுரை என்னுடைய 1979ம்
வருடத்தைய அனுபவம். இப்போது நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பக்தியில்லாதார்கள் கூட
பிக்னிக் போல் போகலாம் என்ற நிலை வந்துவிட்டிருக்கிறது. ஆனால் நான்கடின விரதம் இருந்தேன். ஒத்துழைத்த மனைவிக்கு நன்றி)
வேலூர் முஸ்லீம் அரசு மேனிலைப்பள்ளியில் பணி புரிந்துகொண்டிருந்தபோது,
எச்சிலைக் கூட விழுங்காமல் முஸ்லீம் ஆசிரியர்கள் ரமலான் நோன்பு இருந்ததைப் பார்த்து
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னதான் காலை நாலரை மணிக்கு அவர்கள் முழு அளவில் சாப்பிட்டு
விடுகிறார்கள் என்றாலும், பிற்பகலில் பசி எடுக்காதா என்ன? அப்படியே பள்ளிக்கு
வந்து பாடம் நடத்த வேண்டும். ஆசிரியர் அறையில் சோர்வாக ஏதேனும் ஜபித்துக்கொண்டு
சிலர் இருப்பார்கள். அவர்களுடைய நோன்பு என்னையும் சிந்திக்க வைத்தது. கடவுளைத்
தேடும் முயற்சியில் இருந்த நான், ஏன் நாமும் ஐயப்ப விரதம் இருக்கக் கூடாது என்று
நினைத்தேன்.
முஸ்லீம் பள்ளியில் இது சாத்தியப்
படுமா என்று வேறு சந்தேகம். என் தம்பி இரண்டு முறை சபரிமலைக்குப் போய்
வந்துவிட்டிருந்தான். அதுவும் 42 கி.மீ பெரிய பாதையில். கதை கதையாக சொல்வான். என்
எழுத்தாள மனம் அதையும் பார்த்துவிட எண்ணியது.
வேலூரில் நான் வாடைகைக்கு இருந்தது ஒரு பெட்ரூம் வீடு. என் மனைவி பயமுறுத்தினாள்.
மாதவிலக்கு என்று அவள் மூன்று நாள்கள் உட்காருவாள். நான்தான் சமையல் செய்வேன்.
விரதம் வைத்தால் அப்படி விலக்கானவர்களைப் பார்க்கக் கூடாது, தொடக்கூடாதென்று விதி!
அதனால்தான் 10 வயதுக்குள்ளும் இருக்கும் சிறுமிகள், மாதவிலக்கு நின்றுபோன பெண்கள்
குறைந்த்து 41 நாள்கள் விரதம் இருக்கச் சொன்னார்கள். “
“நான்
மாதவிலக்கானால் எப்படி சமாளிப்பீர்கள்” என்று கேட்டாள். மூன்று நாள் கதவை
மூடிக்கொண்டு ரூமில் இரு என்றேன். குழந்தை
எப்படி ஸ்கூலுக்குப் போவாள் என்றாள். எல்கேஜி படித்தாள் குழந்தை. நான்
அவளுக்கு ட்ரஸ் செய்து ஸ்கூலில் விட்டுவிட்டு வருகிறேன் என்றேன். சுலபமாக
சொல்லிவிட்டேன். அது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவித்தேன்.
தம்பியின் குருசாமி வாணியம்பாடியில்
மிகவும் ஃபேமஸ். பாலக்காட்டு ஐயர். ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தார். அவரைப் போய்
பார்த்தோம். என்னிடம் 43 வது வருடமாக மலைக்குப் போகிறேன் என்றார் குருசாமி. முதல்
சில வருடங்கள் கையில் பட்டாக்கத்தி சகிதம் சென்றாராம். காட்டு விலங்குகள்
சுதந்திரமாய் திரிந்த காலம். கையோடு கொண்டு சென்ற கறுப்பு வேஷ்டியைக்
கட்டிக்கொண்டேன். கறுப்பு வேஷ்டியில் என்னைப் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.
அவரிடம் மாலை போட்டுக்கொண்டேன்.
“இன்று ராத்திரி பஜனை இருக்கிறது கலந்து
கொள்ளுங்கள்” என்றார் குருசாமி. வேலூரிலிருந்தே செருப்பு இல்லாமல் நடக்கக் கஷ்டமாக
இருந்தது. ஒரு பக்தர் வீட்டில் பஜனை. பள்ளியில் மெல்லிய குரலில் பேசுவதற்கும்,
பஜனையில் உரக்கப் பாடுவதற்கும் வித்தியாசம் இருந்தது. மிளகு, உப்பு என்று பஜனையில்
அவ்வப்போது சர்குலேஷன் நடந்தது. அது ‘நான் ப்ராமின்’ வீடு. இரவுச் சாப்பாட்டில்
வெங்காயம் எல்லாம் போட்டிருந்தது. குருசாமியிடம் கேட்டேன், “என்ன சாமி இது?
விரதத்தில் வெங்காயம் எல்லாம் அலௌவ் பண்ணுகிறீர்கள்” என்று.
நான் மாலை போட்டுக்கொண்ட
அன்று ஞாயிற்றுக் கிழமை. வேலூருக்கு பஸ் பிடித்து போகவேண்டும். இரவு ஒன்பது மணி
ஆகிவிட்டது. அடுத்த நாள் பள்ளிக்குப் போகவேண்டும். வாணியம்பாடிக்கும் வேலூருக்கும்
60 கி.மீ தொலைவு. வீட்டுக்குப் போய் சேர 12 மணி ஆகிவிடும். அதனால் நான் கிளம்ப
உத்தேசித்தேன். குருசாமி ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது கையில்
ஒரு தட்டுடன் ஒருவர் மாலை போட்டுக் கொள்ள வந்திருந்தார். தட்டை குருசாமி கையில்
கொடுத்துவிட்டு ‘சாமியே சரணம்’ என்று காலில் விழுந்தார். தட்டில் என்ன இருந்தது
தெரியுமா? வாழைப் பழங்களுடன் இரண்டு பாக்கெட் சிகரெட் இருந்தது. எனக்கு அதைப்
பார்த்து அதிர்ச்சியாக இருந்தது,
விரதம் இருக்கும் போது கூட குருசாமி
சிகரெட் குடிப்பாரா என்று. பக்கத்தில் இருந்த எங்கள் திருப்பத்தூரை சேர்ந்த ஒரு
பிராமண சாமியிடம் அதைப் பற்றிக் கேட்டேன். ‘குருசாமி அதற்கு ஐயப்பனிடம் பெர்மிஷன்
வாங்கியிருக்கிறார்!’ என்றார். ‘எப்படி?’ என்றேன். ‘சீட்டு குலுக்கிப் போட்டு!’
என்றார். எனக்கு மனம் ஆரவில்லை. அவரிடம் சொல்லிக்கொள்ளாமலே கிளம்ப ஆயத்தமானேன்..
பிராமண சாமி அடுத்த வெள்ளிக் கிழமை தன் வீட்டில் பூஜைக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்.
‘உங்க வீட்டில் கூட வெங்காயம் போடுவீர்களா? இங்கே நான் வெங்காயம்
சாப்பிட்டுவிட்டேன்”’ என்றேன்.
‘சாயி சாமி! எங்கள் வீட்டில் கிடையாது.
இங்கே கூட நான் வெங்காயம் இல்லாத உப்புமா தான் சாப்பிட்டேன். முதல் தடவை ஆனதால் உங்களுக்கு
பாவம் தெரியவில்லை. குருசாமி கூட சாப்பிடமாட்டார். நாம் முன்னரே சொல்லிவிட்டால்
நமக்கு அப்படி வெங்காயம், பூண்டு இல்லாமல் செய்துகொடுப்பார்கள். ஐயப்பனுக்கு மாலை
போடும் ஆசை இருக்கிறது. ஆனால் விரத மகிமை தெரியவில்லை.”
“இந்த குருசாமி கொஞ்சம் லீனியண்டாக இருக்கிறார்.
என் தம்பி பிராமண கோஷ்டியில் சென்றான். அப்பப்பா! அவர்கள் சட்ட திட்டமே தனி.
கடினம்” என்றேன்.
“சாயி சாமி.! நம்
வரைக்கும் ப்யூராக இருந்தால் சரி!’ என்றார்.
நான் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டேன்.
சற்று தூரத்தில் குருசாமி சிகரெட்
புகைத்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்து ”என்ன எழுத்தாள சாமி, ஊருக்கு கிளம்பிட்டேளா?” என்றார். சாயந்திரம்தான் அவரிடம் என்னைப் பற்றி
சொல்லியிருந்தேன்; கதை, கட்டுரைகள் பத்திரிகையில் எழுதுகிறவன் என்று.
அவரிடமிருந்து புகை வருவதை நான் கையால் விலக்கிய போது
அவர் சொன்னார்: ‘விட முடியவில்லை!’ என்றார் சிகரெட்டை மறைத்துக்கொண்டு.
‘உங்க சிஷ்யர்கள் இதே போல செய்யலாமா?’ என்று
கேட்டேன் துணிச்சலாக. (தொடரும்)
No comments:
Post a Comment