Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Friday, June 26, 2020

நானே நானா யாரோதானா!!


17. மாயக்கண்ணாடி வாத்தியார்
இன்று நான் ஓரளவுக்குத் தவறில்லாமல், சந்திப்பிழைகள் தவிர்த்து தமிழில் கதை, கட்டுரை, நாவல்கள் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் தமிழ் ஆசிரியர்தான். சந்தன கலரில் கோட்டுடன் வேட்டியில் பள்ளிக்கு வருவார் அவர். 11 ம் வகுப்பு முதல் பீரியட் அவருடையது. முதல் கால்மணி நேரம் மனப்பாடச் செய்யுளை ஒப்புவிக்கவேண்டும். திடீரென ஒரு மாணவனைப் பார்த்து நீ சொல் என்பார். சில மாணவர்கள் எங்களைக் கேளுங்கள் என்பதைப்போல கைகளை உயர்த்துவார்கள். அவர்களை அவர் தவிர்த்துவிட்டு வேறொருவரைக் கேட்பார்.
சில நாள் நான் மனப்பாடம் செய்யாமல் வகுப்புக்கு வருவேன். ஆனால் தெரிந்தது மாதிரி கையை உயர்த்துவேன்.
“டேய் நீ சொல்லு” என்னைக் கை காட்டிவிட நான் விழிப்பேன். எப்படி அவர் எனக்குத் தெரியாது என கண்டுபிடித்தார் என இன்று வரை தெரியாது. என்னைப் போலவே பலருக்கும் அப்படி ஆகியிருக்கிறது. அதனால் அவருக்கு மாயக்கண்ணாடி வாத்தியார் என எங்கள் சர்க்கிளில் பெயர் வைத்தோம்.
ஒப்புவிக்காதவர்கள் அந்த மனப்பாடப் பகுதியை பத்து முறை இன்போஷிஷன் எழுதி அடுத்த நாள் நோட்டைக் காட்டவேண்டும். கடன் கொடுத்தவர் மாதிரி அதை வசூலிப்பார்.
டிக்டேஷனில் பொழிப்புரை தருவார். கோனார் நோட்ஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது. அவருடையதையே எழுதவேண்டும். சந்திப்பிழை ஏற்பட்டால் அரை மார்க் போய்விடும்.
என் கையெழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும். அதற்குக் காரணம் எட்டாம் வகுப்பில் தமிழ் எடுத்த டீச்சர் ஆவார். தினந்தோறும் ஏதாவது மனப்பாடச் செய்யுளை ஐந்து வரிகள் எழுதிக் காட்டவேண்டும். காலையில் முதல் வேலை அதுதான். ஒவ்வொரு நாள் வேகமாய் கிறுக்கினால், அதற்குப் பரிசு பிரம்படிதான்.
என்னைப் பார்த்து “டேய், நீ அழகாய் எழுதுகிறவன். கிறுக்காதே. சில பேர் அப்படி எழுதினால் விட்டுவிடுவேன்” என்பார்.
11 ம் வகுப்பில் ஆங்கிலப் பாடம் எடுத்த ஆசிரியர் ஓர் ஆங்கில வார்த்தி சொல்லி தமிழில் அதை மொழிபெயர்ப்பார். அதாவது ஆங்கிலப் பாடம் தமிழில் நடக்கும். எங்களுடையது B செக்‌ஷன். மாணவிகள் இருப்பார்கள்.. எட்டு மாணவிகள்தான். பக்கத்து A செக்‌ஷனில் ஆங்கில ஆசிரியர் ஸ்டைலாக ஆங்கிலத்திலேயே நடத்துவார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல எனக்கு அவரைப் பிடிக்கும். அவர்களுக்கு எங்கள் ஆசிரியரைப் பிடிக்கும்.
நான் ஆசிரியனாகப் போனபோது ஆங்கில வகுப்பில் தமிழில் சொல்வதை 90% சதவீதம் தவிர்ப்பேன்.
நான் மேல்நிலைப்பல்ளி ஆங்கில ஆசிரியராக இருந்தபோது, என் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் அறையில் ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மணவனும் அவன் தந்தையும் நின்றிருந்தார்கள்.
“என்ன சாயி, நீ இங்கிலீஷ்லயே பாடம் நடத்துறியாமே. இந்தப் பையன் புரியலைன்னு சொல்றான்”
நான் அந்த மணவனிடம் கேட்டேன். “நீ எந்த குரூப் எடுத்திருக்கே?”
“PCMB சார்.”
“உன் கணக்கு வாத்தியார் கெமிஸ்ட்ரி நடத்துறாரா>”
“இல்லை சார்.”
“உன் பயாலஜி வாத்தியார் பிஸிக்ஸ் நடத்துறாரா?”
“இல்லை சார்.”
“நான் இங்கிலீஷ் வாத்யார். நான் மட்டும் ஏன் தமிழ்ல நடத்துணும்?’
பையனைவிட அவன் தகப்பனார் புரிந்துகொண்டார்.
நான் தலைமை ஆசிரியரிடம் சொன்னேன். “ His is not a complaint, but a compliment, sir”
“சாயி, இது கிராமம். அப்பப்ப தமிழ்லயும் நடத்து” என்றார் தலைமை ஆசிரியர்.
  

Saturday, June 20, 2020

நானே நானா யாரோ தானா!


15. நான் கண்ட பொங்கல்

எனக்கு ஒன்பது வயது இருக்கும். கிராமத்தில் சின்ன ஜமிந்தார் வீடு எங்களுடையது. என் அப்பாவை சின்ன ஐயரு எனக் குறிப்பிட்டு பேசுவார்கள். என் தாத்தாவின் அண்ணாவை பெரிய ஐயர் என்பார்கள். காதில் சிவப்புக் கல் கடுக்கன் போட்டு கம்பீரமாக இருப்பார். அவர் குடுமியை அவிழ்த்து முடிந்து கொள்ளும் அழகே தனி.  என் அப்பாவுக்கு 10 வயது இருக்கும் போதே தாத்தா காலமாகிவிட்டார்.
பெரிய தாத்தா வீட்டையும், எங்கள் வீட்டையும் நடுவில் ஒரு சுவர் பிரித்திருந்தது. பழங்காலத் தூண்கள் நின்றபடி ஹஜாரம் இருக்கும். அதாவது பெரிய ஹால். ஒரு தூணில் தான் என் கிராமத்து படிப்பு. இப்போதும் கிராமத்துக்குப் போனால் அந்த தூணை தடவிப் பார்ப்பதில் மனதில் சந்தோஷமாக இருக்கும். மண்ணெண்ணெய் விளக்கில் நான் படித்ததை நினைப்பேன். அந்த ஹஜாரத்தில் ஒரு பக்கம் காங்குகள், அதில் நெல் நிரம்பி இருக்கும். பொங்கல் சமயத்தில் வெல்ல உருண்டைகள் தரையில் பரப்பி வைக்கப்பட்டு வாசனை மூக்கைத் துளைக்கும். சுமார் நூறு உருண்டைகள். மிகுதியாக உள்ளதை விற்கும் பொறுப்பு அம்மாவுடையது. விலை பேச வியாபாரிகள் வருவார்கள். அம்மாவுக்கு சரியான தமிழ் பேச வராது. கன்னடம் படித்த பெங்களூர்காரர். பேரம் பேசி விற்றுவிடுவார், தன் வீட்டுக்கு வருடத்துக்கு வேண்டிய உருண்டைகளை வைத்துக் கொண்டு.              
            ஹஜாரத்துக்கு கீழ் சிறிய ஹால் உண்டு. அங்கே கரும்புகள் தோகைகளுடன் சுவரில் சாய்ந்து கொண்டிருக்கும். நினைக்கும் போதெல்லாம் ஒரு அரிவாளை எடுத்து, வீட்டுக்கு வரும் நிலத்துக்காரரை கொண்டு கரும்பை துண்டுகளாக வெட்டிக் கொள்வேன். முற்றத்தில் ஒரு தூணில் சாய்ந்து, நானும் என் நண்பர்களும் பேசிக்கொண்டே தின்போம். அடிக்கரும்பு தின்ன போட்டி நடக்கும்.சிலசமயம் சண்டை கூட வந்துவிடும். நான் போட்டி போடமாட்டேன். என் வீட்டுக் கரும்பை நான் எப்போது வேணுமானாலும் சாப்பிடலாமே! அப்பாவை பார்க்க வருகிறவர்கள், தலையைச் சொரிந்தால் அவர்களுக்கு ஒரு பெரிய கரும்பைக் கொடுத்துவிடுவார்.
              பின்னாளில் அப்பா ஒரு கரும்பு பிழியும் எந்திரத்தை வாங்கினார். கரும்பு வெட்டும் சீசனில், அதை வாடகைக்குத் தருவார். அவர்கள் வெல்ல உருண்டைகளாக தரும் வெல்லமே ஒரு ரூம் நிறைந்துவிடும். அதை விற்பது அம்மாவின் வேலை. நெல் வாங்க கூட வியாபாரி ஒருவர் வருவார். வந்த பணம் தங்கமாக மாறிவிடும்! அதை பின்னாளில் அறிந்தேன். புது நெல் மிஷினில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி ஒரு ரூமில் ஒரு அடி உயரத்துக்கு பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் நானும், தம்பியும், குதித்து விளையாடுவோம். மிஷின் சூட்டில் அரிசி வெது வெதுப்பாக இருப்பதே ஒரு சுகம்! ஒரு மூட்டை அரிசியை பெங்களுருக்கு என் பாட்டி வீட்டுக்கு அப்பா டிவிஎஸ்ஸில் அனுப்பிவிடுவார். வீட்டில் கிச்சலி சம்பா சாதம்தான். நிலத்துக்காரர்களுக்கும் தினமும் சாப்பாட்டுக் கடை நடந்தவாறு இருக்கும்.
               பெரிய தாத்தா வீட்டில் பொங்கல் பானை வைத்து கும்பிடுவார்கள்.  மாட்டுப் பொங்கல் அன்று, எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வளாகத்தில் ஊரில் உள்ள மாடுகள் இருபத்தைந்தாவது குவிந்துவிடும். மாட்டுச் சொந்தக்காரர்கள் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பின் வாசல் வழியாக ஓடவிடுவார்கள்.
                 வாசற்படியில் ஒரு சாணியில் வாழைப் பழத்தை நட்டு வைத்து, மாடுகளை ஓடவிடுவதற்கு முன் ஒரு போட்டி வைப்பார்கள். ஊரில் இருக்கும் இளவட்டங்கள் அந்த வாழைப் பழத்தை வாயால் கவ்வி எடுக்க வேண்டும். ஐந்து ஐந்து மாடுகள் பாய்ந்து வரும்போது கவ்வ வேண்டும். மாடு முட்டித் தள்ளிவிடும், அல்லது மிதித்துவிடும். வாயில் சாணி ஒட்டி  பலர் தோற்பார்கள். ஜெயித்தால் பத்து ரூபாய் என் அப்பா தருவார். இரண்டு மூன்று பேருக்கு அப்பா பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறேன்.. அந்தப் பத்து ரூபாய் இன்றைய ஐநூறு ரூபாய்க்கு சமம்.
பொங்கல் சமயத்தில் எருதுகட்டு நடக்கும்.. ஜல்லிக்கட்டைத்தான் எங்கள் ஊர் பக்கம் அப்படி குறிப்பிடுவார்கள். வெளி ஊரிலிருந்தெல்லாம் எருதுகள் வந்து போட்டியில் கலந்துகொள்ளும்.
அன்று அப்பா வேட்டியைவிட்டு காக்கி அரை நிஜார் போட்டுக்கொண்டு சர்ட்டை இன் பண்ணிக்கொள்வார். கூம்பு லவுட் ஸ்பீகரில் காமெண்டரி போல சொல்வார். எந்த எருது ஜெயிக்கிறதோ அதற்குப் பரிசளிப்பார்.



Wednesday, June 17, 2020

நானே நானா யாரோதானா!!


14. நூலகங்களும் நானும்

1956 முதல் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தி ஹிந்து ஆகியவை வரும். எல்லாவற்றையும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிப்பேன். மாவட்ட நூலகம் எனக்கு அறிமுகமாகி அதில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டேன். நூலகத்தில் கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர், கண்ணதாசனின் இதழ்கள், கல்கண்டு, முத்தாரம் போன்றவை என்னைக் கவர்ந்தன. ஆங்கிலத்தில் Imprint கட்டுரைகள் அருமையாக இருக்கும்.

நாளிதழ்கள் எட்டாவது வரும். நடுநிலை, கட்சி என பல பத்திரிகைகள் வரும். நான் அரசியல் கற்றுக்கொண்டதே இவற்றைப் படித்துதான். நான் சனி, ஞயிறுகளில் காலை 8 மணிக்குத் திறந்ததுமே சென்றுவிடுவேன். நூலகரின் பக்கத்து அறையில் நாளிதழ்கள் அடுக்கி வைத்திருக்கும். நான் போனாலே நூலகர் டென்ஷன் ஆகிவிடுவார். தம்பீ, ஒழுங்கா படிச்சிட்டு தேதி வாரியா அடுக்கி வை என்பார். அங்கே அட்டைக்கு ஒரு புத்தகம்தான் தருவார்கள். அதனால் புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து படிப்பேன். அப்படி காண்டேகர் நாவல்களைப் படித்தேன். 1960 களில் எழுதிய எழுத்தாளர் நாவல்கள், கட்டுரைகள் ஆகியவையும் அப்படி படித்ததுதான்.

கல்லூரி நூலகத்தில் இரண்டு அட்டை கொடுப்பார்கள்.. ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுகமாயின. நூலகர் கேட்பார் ஏன் தம்பீ சப்ஜெக்ட் புக் படிக்கமாட்டியா? என்று. கிரஹாம் கிரீன் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை.

என் சர்வீஸில் நான் எட்டு கல்விக்கூடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணிக்குச் சேர்ந்தால் முதல் வேலையாக நூலகம்தான் சென்று பார்ப்பேன். பத்திரிகைகளில் எழுதி எழுத்தாளன் வேறு ஆகிவிட்டிருந்தேன்.
வேலூர் அரசினர் முஸ்லீம் பள்ளி நூலகம்தான் எனக்குப் பிடித்தமானது. விதவிதமான தமிழ், ஆங்கில புத்தகங்கள் அதில் இருந்தன. உருது புத்தகங்கள் இன்னும் அதிகம் இருந்தன. சிறு வயதில் வள்ளலாரை ம.பொ சி தமது செங்கோல் பத்திரிகை மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.. ஆனால் வேலூர் பள்ளி நூலகத்தில் தடிமனான அளவில் ஏறக்குறைய 18 புத்தகத் திரட்டுகள் வள்ளலார் எழுதியவை அங்கிருந்தன. பிரமித்துப் போனேன். நான் ஐயப்ப விரதம் வைத்தபோது அந்தப் புத்தகங்களில் பாதியாவது படித்திருப்பேன். தமிழ்நாட்டில் வள்ளலாரைப் பின்பற்றாமல் ஈவேராவை பின்பற்றி மக்கள் தங்கள் ஐடென்டியையே இழந்துகொண்டிருக்கிறார்கள்.

நான் திருவள்ளூர் மாவட்ட DIET க்கு போனபோது நூலகம் ஒரு சின்ன அறையில் இருந்தது. நான் அங்கே போன மூன்று மாதத்தில் முதல்வர் பொறுப்பு எனக்கு வந்தது. அங்கே நூலகர் என்ற பதவி இருந்தது.. எனக்கு முன்னால் இருந்த முதல்வர் பீரியடில் சிலகட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்து என் காலத்தில் அது முடிந்தது. நான் முதல் வேலையாக ஒரு நீண்ட கட்டிடத்திற்கு நூலகத்தை மாற்றிவிட்டேன்.  நீண்ட மேசைகள் ஓர் அறையில் பூட்டப்பட்டிருந்தன. அவற்றை நூலகத்தில் போடுமாறு செய்தேன்.  ஸ்டாஃப் மீட்டிங் அங்கேதான் நடத்துவேன்

நூலகருக்குச் சொல்லி பதிப்பகங்களுக்கு எழுதச் செய்து புத்தக விவரங்களை வரவழைத்தேன். நூலகக் கணக்கில் ஏராளமான பணம் செலவிடப்படாமல் இருந்தது. நூறு புத்தகங்களுக்கு ஆர்டர் செய்து அவை வந்தன. ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாதம் ஒரு புத்தகம் படித்து அதைப் பற்றி கட்டுரை எழுதுமாறு செய்த போது சும்மா இருந்த நூலகர் சுறுசுறுப்பானார்.. மாணவர்களின் அக மதிப்பீட்டிற்கு அது உதவியது.

இப்போது கூட நான் வருந்தும் விஷயம் ஒன்றுதான். சென்னை அண்ணா நூலகத்திற்கு 50 க்கு மேற்பட்ட நல்ல புத்தகங்களை தானமாகக் கொடுத்ததுதான். இப்படி முகநூல் அப்போது இருந்திருந்தால் தானம் செய்திருக்கமாட்டேன். என் முதிய வயதில் பொழுது போயிருக்கும். அதனால் நண்பர்களே! வாங்கிய புத்தகங்களைக் காப்பாற்றி வையுங்கள். ஒருநாள் அவை உங்களுக்கு உதவக்கூடும்.


Tuesday, June 16, 2020

நானே நானா யாரோதானா!!


13. மரியாதை தெரிந்தவர்கள்

1966 முதல் 1969 வரையிலும், ஆசிரியர் பயிற்சி பெற்றபின் 1970 முதல் 2005 வரையிலும் நான் பணியாற்றினேன். ஆனால் நான் ஒரு மாணவனைக் கூட அடித்ததில்லை. திட்டுவேன்… ‘சோம்பேறி,  உருப்படற வழியைப் பார்என்பதுதான் என் அதிகப்பட்ச திட்டுதல். அதே போல்  பிரைவேட் டியூஷனும் எடுத்ததில்லை. என் பள்ளிக்கூடம் திருபத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவில் இருந்தது. பஸ் பயணம். ஆனால் என் கிராமத்திலிருந்து 3 கிமீ. அதனால் ப்ளஸ் டூ பரீட்சையின் போது மாணவர்களுக்கு கோச்சிங் என கிராமத்து வீட்டுக்கு மூன்று நாள் வரவழைப்பேன். என் மொபெட்டில் போவேன்.. பெண்களுக்கு தடா. பாதி பசங்கள் வருவார்கள்.

அந்த கிராமத்து மேனிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் 150 பேரும், 12ம் வகுப்பில் 150 பேரும் படிப்பார்கள். லேப் பக்கத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு லெக்சர் ஹால் உண்டு. அங்கேதான் ஆங்கில வகுப்பு. என் வகுப்பில் கீச் மூச் சப்தம் கேட்காது. ஏனெனில் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் என் பீரியடில் பேசவேண்டும். தமிழ் மீடியம் மாணவர்கள் திணறுவார்கள். நான் வேலூரில் பணியாற்றியபோது அங்கே ப்ளஸ் டூவில் ஒரு ஆங்கில மீடியம் உண்டு. அந்த வகுப்பு நன்றாக இருக்கும். என்னுடன் கலந்துரையாடுவார்கள். நான் ஹைதராபாத் ஆங்கில கழகத்தில் படித்த மாடர்ன் டீச்சிங்கை அங்கே செய்வேன். ஆனால் கிராமத்து மாணவர்களுக்கு ஆங்கிலம் என்றாலே ஒரு பயம். அதனால் அவர்களுக்கு பாஸ் செய்வதற்கு வேண்டிய .வகையில் பாடம் நடத்துவேன். வியாழன், வெள்ளிகளில் prose essay, poetry essay, எழுத வைப்பேன். அதில் ஒரு தவறு கூட வரக்கூடாதென்பேன்.

அந்தப் பள்ளி பிரேயர் வளாகத்தில் நிறைய மரங்கள் உண்டு. அங்கே மாணவர்களை காப்பி அடிக்கவிடாமல் விதவிதமாய் உட்கார வைப்பேன். அதுவே ஒரு கட்டுரை போல எழுதவேண்டி வரும்.. என்னிடம் அங்கே படித்த பல மாணவர்கள் ஆசிரியர், வங்கி என உத்தியோகத்துக்குப் போனார்கள்.

ஒருமுறை வங்கி வரைவோலை வாங்க திருப்பத்தூர்  பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வங்கிக்குப் போனேன். அங்கே கியூவில் நின்றேன். ஒரு சேலை அணிந்த பெண் சார் சௌக்கியமா என்று அருகில் வந்தாள். நான் அவளை உற்றுப் பார்த்துவிட்டு நீ தானே என்று அவள் பெயரைச் சொன்னேன். அவள் ஆச்சரியப்பட்டாள். அவள் மானேஜர் அறைக்கு என்னை அழைத்துப் போனாள். மானேஜர் நாற்காலியில் உட்காராமல் நின்றுகொண்டே இந்த பிராஞ்சுக்கு போன மாதம் மாற்றலாகி வந்தேன் என்றாள். பியூனிடம் எனக்கு வரைவோலை வாங்கி வரச் சொன்னாள். உட்காரும்மா என்றேன். சீட் முனையில் உட்கார்ந்தாள். இந்த மரியாதைதான் நன்றாய் பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு. இதற்கு ஈடு எதுவுமில்லை.

ஒருமுறை ஜோலார்ப்பேட்டையில் என்னிடம் எப்போதோ படித்த மாணவன் என்னைப் பார்த்துவிட்டு அருகில் வந்தான். அவன் பெயர் ஞாபகம் வரவில்லை. சரியான வால் பையன்.. நான் அவனிடம் கேட்டேன், உன் பசங்களும் வாலா என்று. அவன் வெட்கப்பட்டு போங்க சார் அது ஒரு காலம், இப்போ நான் சாது என்றான்.. டீ குடிக்கலாம் வாங்க என்று அழைத்தான். அவன் பஞ்சாயத்து ஆபீசில் சீனியர் அலுவலராக இருப்பதாகக் கூறினான். இப்படி பல பேரை நான் சந்திக்க முடிகிறது.

ஒருமுறை நான் சென்னை பஸ்ஸில் சென்றபோது, ஒரு முதியவர் காலேஜ் ஸ்டாப்ப்பில் ஏறினார். பார்த்தால் அவர் என் பதினோராம் வகுப்பு தமிழ் ஆசிரியர். பஸ்ஸில் இடமில்லை. நான் எழுந்து இடம் கொடுத்தேன். அவருக்கு நான் யாரென தெரியவில்லை. நானும் சொல்லிக் கொள்ளவுமில்லை. ஆம்பூரில் ஒருவர் இறங்க எனக்கு இடம் கிடைத்தது.




நானே நானா யாரோ தானா!!!


நானே நானா, யாரோ தானா!!
9. கலைமகளும் கணையாழியும்.
என் பெரியப்பாவின் மாட்டுப்பெண் அவர். என் அண்ணி. கிருஷ்ணகிரி போன்ற நகரத்திலிருந்து எங்கள் கிராமத்துக்கு வாழ்க்கைப்பட வந்தார். அவருக்கு என் போன்ற சிறுவர்கள்தான் பொழுதுபோக்கு. எங்களைத் தன் அறையில் உட்கார வைத்துக்கொண்டு கதை சொல்வார். பூதம், பிசாசு போன்ற கதைகளைக் கேட்டு எனக்குப் பயமாயிருக்கும் ஆறு வயது. ராத்திரி லாந்தர் வெளிச்சத்தில் புழக்கடை பக்கம் போகவே அஞ்சுவேன். பெரும்பாலும் சிம்னி விளக்கில்தான் அவருடைய பூதம் வரும். இந்த மாதிரி கதைகள் என் கற்பனா சக்தியைத் தூண்டிவிட்டு நானும் என் போன்ற சிறுவர், சிறுமிகளுக்குக் கதை சொல்வேன்.
1956 ல் நான் ஆறாம் வகுப்பு படிக்க 5 மைல் தொலைவில் உள்ள திருப்பத்தூருக்குப் போனோம். அக்கிரஹாரத்தில் அப்பா ஒரு பெரிய வீட்டை வாங்கினார். அதன் ஹாலில் கிரிக்கெட் விளையாடலாம், அத்தனை பெரிசு. நவராத்திரி கொலு வைத்தால் 17 படிகள் இருக்கும்.
எதிரே வக்கீல் வீடு. அவர்கள் வீட்டில் ஆனந்தவிகடன் வாங்குவார்கள். ஒருமுறை நான் படிக்காதவாறு என்னுடன் படித்த வக்கீல் பையன் மறைத்து வைத்துவிட்டான். எனவே அப்பாவிடம் சொல்லி எங்கள் வீட்டிலும் ஆ.வி வந்த்து. கூடவே ஆங்கில ஹிந்துவும். நான் இரண்டையும் ஒரு வரி விடாமல் படிப்பேன். ஆங்கிலம் புரியாமல் போனால் அப்பாவிடம் கேட்பேன். அப்பா எனக்கு லிப்கோ அகராதி ஒன்று தடிமனாய் வாங்கிக்கொடுத்தார்.
பத்திரிகையில் இருந்த கதைகள் போல எழுதிப்பார்ப்பேன். பத்தாவது படிக்கும்போது ஆவி முகவரிக்கு எழுதிப்போடுவேன். ஸ்டாம்ப் வைத்து அனுப்பியதில் எல்லாம் திரும்பிவிடும். பல முறை அந்தப் பத்திரிகை ஆசிரியர் மணியனின் கடிதம் உடன் வரும். இன்னும் நன்றாக எழுதுமாறு இருக்கும். அது பிரிண்டெட் கடிதம். நான் மணியனே எழுதியது என பெருமையாக நினைப்பேன்.
1967 ம் ஆண்டு எனக்கு முக்கியமான ஆண்டு. நான்விநோதன் சாய்ராம்என்று புனைபெயர் வைத்துக்கொண்டிருந்தேன். கல்கி படித்ததில் நா.பா என் ஆதர்ஷ எழுத்தாளர். அவர் தீபம் என்ற பத்திரிகை ஆரம்பித்தார். 1967 ல் மொழிபிரச்சினைக் கருத்தரங்கு என்று ஒரு போட்டி வைத்து, கட்டுரைகளை அனுப்புமாறு கேட்டார். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசு பெற்றது. அதே ஆண்டு தினமணி கதிர் பத்திரிகை நகைச்சுவைச் சிறுகதைப்போட்டி நட்த்தியது. என் கதை ஆறுதல் பரிசு பெற்றது. இப்படியாக நான் எழுதத் தொடங்கினேன். அந்தக் காலத்தில் கலைமகள், கணையாழி பத்திரிகைகளில் வந்தால் பெருமை. இரண்டிலும் என் படைப்புகள் வந்தன.
1983 ல் பாரதி நூற்றாண்டுக்காகபாரதி மகத்துவம்என்று ஒரு கவிதை எழுதி கணையாழியில் வெளியிட்டேன். ஆங்கிலக் கவிஞர் T.S Eliot’s Murder in the Cathedral தான் இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன்..
1979 க்குப் பின் நான் தமிழில் எழுதவில்லை. 2013 ல் A Dalit’s Love, 2017 ல் The Secrets of Awetosa என்கிற ஆங்கில நாவல்கள் , 2019 ல் கிழக்கு பதிப்பகம் மூலமாகநீங்களும் பேசலாம் இங்கிலீஷ்ஆகிய அச்சுப் புத்தகங்களும் வெளிவந்தன., அமேஸான் கிண்டிலில் ஏனைய மின் நூல்களும் வெளியிட்டிருக்கிறேன்.







நானே நானா, யாரோ தானா!!
10 பரிசும் விருதும்
இந்தக் காலத்தில் எந்த லாபியும், சிபாரிசும் இல்லாமல் பரிசோ, விருதோ கிடைக்காது. ஆனால் எனக்கு அவை கிடைத்தன. நான் ஏழாவது படிக்கையில் கையெழுத்துப் போட்டியில் ஜியாமெட்ரிக் பாக்ஸை பரிசாகப் பெற்றதுதான் முதலாவதாகும். அதற்கப்புறம் 1967 ல் நா.பாவின் தீபம் பத்திரிகை என் ஆங்கிலம் பற்றிய கட்டுரைக்கு முதல் பரிசைக் கொடுத்தது. தீபம் அலுவலகம் மவுண்ட்ரோடில் இருந்தது. தம் அழகான கையெழுத்தில் நா.பா அவர்கள் ஒரு போஸ்ட் கார்டில் பரிசளிப்பு விழாவுக்கு வரச்சொல்லி கடிதம் போட்டார். நான் அப்போது ஜோலார்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் பயிற்சி பெறா ஆசிரியராய் இருந்தேன். சென்னைக்கு உடனே கிளம்பி, குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த நண்பன் அறைக்கு வந்து தங்கினேன். அடுத்தநாள் மாலை நான்கு மணிக்கு தீபம் அலுவலகத்திற்குப் போய்விட்டோம்.
நா.பா அவர்கள் வரவேற்று தேநீர் உபசரிப்பு நடந்தது. எழுத்தாளர் அகிலன் அவர்கள் தலைமை வகிப்பார் என்றார். தீபம் இணையாசிரியர் அசோகமித்திரன் என் கட்டுரையின் ஆங்கில மேற்கோள்தான் முதல் பரிசுக்கு காரணம் என்றார். 20 எழுத்தாளர்கள், அனைவரும் பிரபலமானவர்கள் ஒவ்வொருவராய் வந்தனர். நான் படித்து வியந்த அகிலன், ஆதவன், தி.ஜானகிராமன் எல்லோருடனும் வலியப் போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
அகிலன் அவர்கள் கையால் Deepam 1 என்கிற விலையுயர்ந்த பார்க்கர் பேனாவைப் பெற்றேன். இன்னும் அதைப் பத்திரமாய் வைத்திருக்கிறேன். அப்போது என் வயது 20.
1968 ஜனவரி தீபம் இதழில் என் புகைப்படத்துடன் கட்டுரை வெளியானது.
1979 ல் கல்கி பத்திரிகை நடத்திய கல்கியின் நாவலான  அலை ஓசை கருத்தரங்குபோட்டியில் என் கட்டுரை ஆறுதல் பரிசு பெற்று வெளியானது.
1969 ல் நான் சென்னையில் பி.டி படித்தபோது நினைத்துக்கொண்டால் தீபம் ஆபீசுக்குப் போய்விடுவேன்.
இப்போது நான் நல்லாசிரியர் விருது பெற்றதைப் பற்றிச் சொல்கிறேன்..
1993 ல் நான் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வேண்டாம் என்று கிருஷ்ணகிரி DIET க்கு அதற்குச் சமமான முதுநிலை விரிவுரையாளர்-சீனியர் லெக்சரர்- பதவிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டேன். அது ஆசிரியர் பயிற்சி நிறுவனம்.
NCERT-SCERT-DIET என்ற வரிசையில் வரும் மாவட்டத்திற்கு ஒன்றாய் இருக்கும் நிறுவனம். 1-8 வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும். நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஆசிரிய டிப்ளமாவுக்கு மாணவர்கள்  படிப்பார்கள். 69% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்ப்படுவார்கள். என்னைப் போன்றவர்கள் ஒரு துறைக்கு HOD என இருப்பார்கள். அப்படி 7 துறைகள் அங்கே உண்டு. நான் curriculum department HOD. வகுப்புகளுக்குப் புத்தகம் எழுதுதல், எழுத வைத்தல், எழுதிய புத்தகங்களை மதிப்பீடு செய்தல் என வேலை. எனக்குக் கீழே இரண்டு லெக்சரர்கள் பணியாற்றினர்.
1996 ல் எங்கள் நிறுவனத்திற்கு நல்லாசிரியர் விருதுக்கு சீனியர்கள் விண்ணப்பம் அளிக்குமாறு கடிதம் வந்தது. என்னைக் கேட்க நான் மறுத்துவிட்டேன். ஏனெனில்புரட்சித்தலைவி நல்லாசிரியர் விருதுஎன பெயர் வைத்திருந்தார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை.
1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்று கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். 1997 ல் அவர் அந்த விருதைடாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுஎன பெயரிட்டார். எனக்கு இஷ்டமில்லாவிடினும் என் துறை லெக்சரர்கள் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து என்னிடம் கையொப்பம் வாங்கிவிட்டார்கள். அப்படி நானும் எனக்கு ஜூனியரான இரண்டு பேரும் விண்ணப்பித்தோம். நியாயமாய் என் பெயரை நிறுவன முதல்வர் 1 என குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரு ஜூனியர் பெயரை 1 என போட்டு, எனக்கு 3 எனக் கொடுத்தார். மேலதிகாரிகளுக்கு அனுப்பினார். என் மேல் என்ன கோபமோ அல்லது 1 என்று போடப்பட்டவர் அவருக்கு என்ன கொடுத்தாரோ தெரியாது. இதை டைப் அடித்த பெண்மணி ரகசியமாய் என்னிடம்  சொல்லிவிட்டு பரிதாபப்பட்டார்.
ஒரு மாதம் கழித்து என் துறை லெக்சரர் என்னிடம் வந்து சார் கை கொடுங்க. உங்களுக்கு நல்லசிரியர் விருது கிடைச்சிருக்கு. என்றார். நான் பிரின்ஸிபால் சொல்லட்டும் என்றேன் நம்பாமல். நிறுவன ப்யூன் வந்து தெலுங்கில் பிரின்ஸிபால் கூப்பிடுகிறார் என்றார். நான் போனேன் வாழ்த்து சொன்ன அவர் முகத்தில் ஈயாடவில்லை. நானும் அதிகம் பேசவில்லை.
கருணாநிதியைப் பிடிக்காமல் போனாலும் அவர் கையால் விருது வாங்கினேன்.













நானே நானா, யாரோ தானா!!
11. மொழிகள் ஏராளம்
கிராமத்தில் நான் பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரை படித்தேன். தமிழ் மட்டும்தான். ஆறாம் வகுப்பில்தான் ABCD அறிந்தேன். என் அம்மாவுக்கு பெங்களூரிலிருந்து அவள் அப்பா, தம்பிகள் அடிக்கடி கன்னடத்தில் போஸ்ட் கார்டு எழுதுவார்கள். எனக்கு என்னடா தமிழ் மாதிரி எழுத்துக்கள் இல்லாமல் குண்டு குண்டாய் அழகாய் இருக்கு எனத் தோன்றும். அம்மாவின் கையெழுத்து அத்தனை அழகு. தாத்தாவின் கையெழுத்து கிறுக்கலாக இருக்கும். மற்ற மாமாக்களின் கையெழுத்து நன்றாய் இருக்கும். அம்மாவை தான் எழுதும் கடிதத்தைப் படித்துக் காட்டச் சொல்வேன். கடைசியில் கூடலே ஜபாபு என்று முடிப்பார்.
நான் பத்தாம் வகுப்பு படித்தபோது ஒரு கன்னடம் கற்பிக்கும் புத்தகம் வாங்கினேன். அதை எழுத்துக்கூட்டி கற்றதில் அம்மாவும், மாமாக்களும் எழுதுவதை ஓரளவுக்குப் படிக்க முடிந்தது. ஆனால் நன்றாகக் கற்றுக்கொள்ளவில்லை. வீட்டில் தெலுங்கு-கன்னடம் இரண்டும் கலந்த மொழிதான் பேசுவோம்.
எனக்கு தஞ்சாவூர் மராட்டி பேசும் பெண் மனைவியாக ஆனாள். அதற்கு முன் பார்த்த பெண்கள் எல்லாரும் கன்னடம் பேசுபவர்கள். என்னைச் சில பெண்கள் நிராகரித்தார்கள். நான் சிலரை வேண்டாம் என்றேன். பெங்களூரில் இருந்த என் பாட்டிக்குக் கோபம் வந்து போடா உனக்கு இனிமேல் நான் யாரையும் சொல்வதில்லை என்றாள். வீட்டிலும் அதே மாதிரி பேசினார்கள். அதனால் நான் மராட்டி பெண் வந்ததும் ஹைய்யா இன்னொரு மொழி நமக்குத் தெரியப் போகிறது என்று ஒப்புக்கொண்டேன். கல்யாணமாகி 45 வருடம் ஆகப்போகிறது. நன்றாய் புரிகிறது, ஆனால் மராட்டி பேச வரவில்லை.
1978 ல் முதுநிலைப் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக வேலூர் அரசினர் முஸ்லீம் பள்ளிக்குப் போனேன். அங்கே தமிழ், ஆங்கிலம், உருது மீடியங்கள் இருந்தன. 11,12 வகுப்புகளுக்கு நான் ஒருவனே ஆங்கில ஆசிரியன்.. உருது மீடியம் மாணவர்களுக்கு அர்த்தம் சொல்ல ஒரு ஆசிரியரிடம் சொற்களைத் தெரிந்துகொண்டு பாடம் நடத்தினேன். ஆனால் உருதும் வரவில்லை.
கிருஷ்ணகிரி DIET க்கு போனேன். அங்கே மாணவர்கள் தமிழ், தெலுங்கு மீடியம் படித்தார்கள். தெலுங்கு மீடியத்தில் நான் பேசிய தெலுகு அவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்திருக்கும். ஆனால் சிரிக்காமல் அன்புடன் பழகினார்கள். ஒரு தமிழ்-தெலுகு நன்றாய் படிக்கத் தெரிந்த திருத்தணி மாணவன் எனக்கு தெலுங்கு கற்பித்தான். ஏற்கனவே கன்னட எழுத்துகள் தெரிந்ததால் எளிதாக இருந்தது. ஆனால் நான் திருவள்ளூர் மாவட்ட டயட்டுக்கு மாற்றல் பெற, தெலுகும் நின்று போயிற்று.
இந்தி எதிர்ப்பில் இந்தியும் இல்லாமல் போயிற்று.
1970 களில் என் ஆசிரிய நண்பனுக்கு மைசூரில் மலையாளம் நான்கு மாதம் கற்க கடிதம் வந்தது. அவன் ஏய் எழுத்தாளா, மலையாளம் கற்க மைசூருக்கு போ என்றான். ஆனால் என்னால் முடியவில்லை.
பெங்களூரில் உள்ள என் பேத்திகள் இந்தி படிக்கிறார்கள். இந்தி சீரியல்கள் பார்த்து அவர்கள் சிரிக்கும்போது நான் புரியாமல் விழிக்கிறேன்.  நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் நான் கட்டாயமாக அவர்களுடன் கன்னடமும், என் மனைவி மராட்டியும் பேசுகிறோம்.
பதினைந்து வயதுக்குள் மொழிகளைக் கற்றுவிடவேண்டும். வயதாக ஆக மொழி கற்கும் திறன் குறைந்துபோய்விடுகிறது. இது என் அனுபவம். மற்றவர்களுக்கு எப்படியோ.





12. அப்பாவை பார்க்கலை
அன்டிரெயிண்ட் ஆசிரியராக நான் ஜோலார்ப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில்தான் மூன்று வருடம் (1966-69) வேலை பார்த்தேன். ஆனால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் கொடுத்தார்கள். அடிப்படை சம்பளம் ரூ140 + டீ ஏ ரூ50= ரூ 190. இப்போது ரூ200 என் பாக்கெட்டில் எப்போதும் இருக்கிறது. அன்று மாத சம்பளமே அதுதான்.
சுமார் 2000 பிள்ளைகள் இரு பாலரும் படித்தார்கள். ஆசிரியர்கள் 70 பேர்..
இப்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது தகப்பனார் ஆசிரியர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பார். அவர் வந்து ஆலமரத்தடியில் வந்து உட்கார்ந்தால் அன்று சம்பள டிராஃப்ட் வந்திருக்கிறது என்று அர்த்தம். மாலை நான்கு மணியளவில் சம்பளம் விநியோகிக்கப்படும். அவரிடம் கடன் பட்ட ஆசிரியர்கள் பலர் ஒழுங்காகப் பணம் கொடுப்பார்கள். சிலர் தலையைச் சொரிந்து அடுத்த மாசம் என்பார்கள். அவரிடம் என்னைப் போன்ற சிலர்தான் கடன் வாங்காதவர்கள்..
அவர் தி.க காரர். தோள்பட்டையில் கறுப்புத் துண்டு போட்டிருப்பார்.
யோவ் வாத்யாரே! ஐயமாருதான் தப்பாம பணம் கட்டிர்றாங்க. உனக்கு என்னய்யா கேடுஎன்று ஒரு கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவார்.
அப்போது திமுக ஆட்சி பிடித்த காலம். வயதான தமிழ் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரும் வட்டிக்கு கடன் கொடுப்பார். அவர் வசவை காதால் கேட்க முடியாது. அவர் திமுக அநுதாபி. மொட்டை கடிதாசி போடுவதில் வல்லவர். ஆட்சிக்கு வந்த புதிதில் திமுக பள்ளிக்கே வந்து சகாயவிலையில் ரேஷன்கடை சர்க்கரை, அரிசி விநியோகித்தது. அந்த ஆசிரியர் மொட்டை கடிதத்தில் ரேஷன் கடைக்காரனுக்கு உதய சூரியன் பேசும் என்று போடுவார். அதனால் ஒழுங்கான அளவில் எடை போடுவார்கள்.
ஜோலார்ப்பேட்டைக்கு 12 கிமீ தொலைவில் மல்லானூர் என்ற ஊர் ஆந்திராவில் இருக்கிறது. பெங்களூர் பாசஞ்சரில் சில ஆசிரியர்கள் சனி ஞாயிறுகளில் மது குடிக்கப் போவார்கள்.
அங்கே ஒரு விசித்திரம். ஒரு வீட்டில் முன் அறை தமிழ்நாடாம், பின் அறை ஆந்திரமாம். முன் அறையில் மது குடிப்பது குற்றமாம் என்று கூறிச் சிரிப்பார்கள். இதில் திக, திமுக, காங்கிரஸ் வேறுபாடில்லாமல் குடிப்பார்கள்.
ஆசிரியர் அறையில் கட்சி சண்டை அப்படி நடக்கும். ஆனால் எதிரில் இருந்த டீ கடைக்கு ஒன்றாகப் போவார்கள்.
அந்தப் பள்ளியின் நூலகத்தில் ஒரு விசித்திரம். பொன்னியின் செல்வன் என்ற புத்தகம் அட்டை மட்டும் இருக்கும். நடுவில் உள்ள கதையை யாரோ உருவிவிட்டிருப்பார்கள். இப்படி பல புத்தகங்கள் இருக்கும் வெறும் அட்டையுடன்.
ஒரு செகண்டரி கிரேட் ஆசிரியர் இருந்தார். அவர் பிள்ளைகளை சென்னை, மகாபலிபுரம் என்று கூட்டிப்போவார். பணம் வசூலிப்பார். ஆனால் ஜோலார்ப்பேட்டையிலிருந்து பாஸஞ்சரில் சென்னைக்கு டிக்கெட் வாங்காமல் பிள்ளைகளை அழைத்துப்போவார். அதை பெருமையாக அந்த கார்டுக்கு பணம் வெட்டிவிடுவேன் என்பார்.
அந்தப் பள்ளியில் மாதாமாதம் புரோகிரஸ் ரிபோர்ட் போடுவேன். ஒரு மாணவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டுவிடுவதாக சில மாணவர்கள் காட்டிக்கொடுத்தார்கள். நான் அப்பாவை நாளை கூப்டுனு வா என்றேன்.
சார் நான் அப்பாவை பார்த்ததேயில்லைஎன்றான்.
அவர் எங்கே இருக்கார்?”
வீட்லதான் சார். அவர் கார்த்தால 4 மணிக்கு வேலைக்குப் போறார். ராத்திரி 11 மணிக்கு வீட்டுக்கு வர்றார். அதனால் நான் பார்க்கலைஎன்றான் அந்த ரயில்வே காங்கி தொழிலாளி பையன்.


Saturday, May 30, 2020


நானே நானா, யாரோ தானா!!
8. 1965,66,67 ல் தமிழகம்
தமிழகத்தின் இன்றைய நல்லவைகளுக்கும், தீயவைகளுக்கும் இந்த மூன்று வருடங்கள் மிக முக்கியமானவை. 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. ரயில்வே நிலையங்களில் உள்ள பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளை தார் பூசி அழித்தார்கள். காட்பாடி தாண்டி வரும் தலங்கை என்கிற ஸ்டேஷனையே கொளுத்தி தரைமட்டம் ஆக்கினார்கள். பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. எல்லாரும் வீதிக்கு வந்தார்கள். பேண்ட் போட்டுக்கொண்டு போன மாணவர்களை போலீஸ் தடியால் அடித்தார்கள்.
1966 ல் அது நீறு பூத்த நெருப்பாய் இருந்தது. அது அணைந்துவிடாமல் திமுக பார்த்துக் கொண்டது. நான் பணியாற்றிய பள்ளியில் திமுக- காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர்கள் ஆசிரியர் அறையில் வாக்குவாதம் செய்தார்கள். நான் இந்தி எதிர்ப்பில் பங்குகொண்டு போலீஸ் என் காலை பதம் பார்த்ததால் திமுக ஆதரவு எடுத்தேன். போதாக்குறைக்கு மூதறிஞர் ராஜாஜி கூட்டணி அமைத்தார். 1967 தேர்தல் வந்தது. என் போன்ற ஆசிரியர்களை வாக்குச் சாவடியில் போட்டார்கள். என்னை ஏலகிரி மலை கிராமத்துக்குப் போட்டார்கள். என் வேலை வாக்காளர் ரோல் படித்து அடிக்கோடு இடுவது. என் பக்கத்தில் ரப்பர் ஸ்டாம்ப் கொடுப்பவர் இருந்தார். எல்லாரும் திமுக அனுதாபிகள். மலைவாழ் மக்களில் எல்லாரும் காங்கிரஸ் ஆதரவு. காளை மாட்டுச் சின்னம். அதில் சிலர் படிப்பறிவு இல்லாமல் அல்லது கண் பார்வை மங்கல் என்று வந்தால் இந்த ரப்பர் ஸ்டாம்ப் ஆசாமி அவர்களுடன் செல்வார். இதோ மாட்டுக்கு குத்துகிறேன் என்று உதய சூரியனுக்கு குத்திவிடுவார். அப்படி 50 ஓட்டுகளாவது போட்டிருப்பார். அந்தத் தேர்தலில் திமுக ஆட்சி பிடித்தது.
பள்ளியில் இவ்வாறு தாங்கள் ஓட்டர்களை ஏமாற்றி சூரியனுக்கு குத்தியதை ஆசிரியர்கள் பேசினார்கள். காங்கிரஸ் ஆதரவு ஆசிரியர்கள் வாயடைத்துப் போனார்கள்.
இன்று நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை பெரிய தவறுகளை அந்த ஆசிரியர் கூட்டம், என்னையும் சேர்த்து, செய்துவிட்டது.
எம்ஜியார் இன்னும் சிறப்பாக ஆட்சி செய்திருக்கலாம். ஆனால் அவருக்குத் தகுந்த அறிவுறுத்தல் இல்லை. அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா தான் படித்தவர் என்றாலும், கூடா நட்பின் விளைவினால் தமிழ்நாட்டைக் கெடுத்துவிட்டுப் போய்விட்டார்.
இப்போது யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆள் மாறாலாமே தவிர நடத்தை அதேமாதிரிதான் இருக்கும். அப்படி தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. டாஸ்மாக்கில் தங்களை இழந்த கூட்டத்திற்கு வேறு சிந்தனை வராது.



Friday, May 29, 2020

நானே நானா, யாரோ தானா!!

நானே நானா, யாரோ தானா!!

7. அழகழகாய் ஐந்து பெண்கள்
மூன்று வருடங்கள் நான் அன்டிரெயிண்ட் ஆசிரியராக அந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தேன். (1966-69). என் வீட்டில் அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை.. ஏனெனில் நான்கு வீடுகள் தள்ளி சிண்ட்கேட் வங்கி மானேஜர் பழக்கமாகியிருந்தார். அம்மாவிடம் அவர் தெலுங்கில் பேசுவார். ரூபாய் இரண்டாயிரம் மேலே உள்ளவர்களுக்குக் கொடுத்தால் கிளார்க் வேலை வாங்கிவிடலாம் என்றார். அது வங்கிகள் தேசியமயமாகாத காலம். என்னிடம் கேட்டபோது
எனக்கு ஆசிரியர் வேலைதான் பிடித்திருக்கிறது, நான் சென்னையில் BT (Now B.Ed) படிக்கப் போகிறேன் என்று சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் 1969 ல் சேர்ந்துவிட்டேன். அப்போது தீபம், தினமணி கதிர், கலைமகள் என்று பத்திரிகைகளில் என் கதை, கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன. கல்லூரி முதல்வருக்கு என்னைப் பிடித்துப்போய்விட்டது. எனக்கும் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
எனக்கு கல்லூரி ஹாஸ்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நானும் இன்னொரு மாணவனும் தி.நகரில் உஸ்மான் ரோட்டில் ஒரு மாதாந்திர லாட்ஜில் அறை எடுத்தோம். இப்போது அர்ச்சனா ஸ்வீட்ஸ் இருக்கிறதே அதன் மேல்மாடியில். லாட்ஜ் முதலாளி மியூஸிக் அகாடாமி எதிரே பங்களவில் இருந்தார். அவரைப் பார்த்தது கூட இல்லை எதிரே ரேகா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இரு கோடுகள் படத்தில் ஒரு சீனில் வரும். அதன் ஷூட்டிங் பார்தேன்.
நாதன்ஸ் கஃபேயில் 30 டிக்கெட் சாப்பாடு புக் ரூ90 தான். காலை 8.30 மணிக்கே சாப்பாடு ரெடி. போர் அடித்தால் பாண்டி பஜார் கீதா கேப்பில் ராத்திரி சாப்பாடு. எலெக்டிரிக் டிரெயின் ஸ்டூடண்ட்ஸ் மூன்று மாத சீசன் டிக்கெட் வெறும் ரூ.7.50 தான். அதாவது தாம்பரம் டு பீச். .
ஒருநாள் மாலை கல்லூரி விட்டதும் லாட்ஜுக்கு வந்தால், எங்கள் அறைப் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது. என் டிரங்க் பெட்டியும், நண்பனுடைய பெட்டியும் சூறையாடப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. மானேஜர் வந்து பார்த்தார். நான் பர்ஸ் உபயோகிக்காமல், கிழவிகள் வைத்துக்கொள்வார்களே அது போன்ற சுருக்குப் பையில் பணம் வைத்திருந்தேன். அதனால் என் பணம் அப்படியே இருந்தது. திருட வந்தவன் பர்ஸை எதிர்பார்த்திருப்பான். ஆனால் என் நண்பனுடைய பர்ஸ் போய்விட்டது. போனில் லாட்ஜ் ஓனரைப் பிடித்து புகார் சொன்னால் ஒரு லேடி போலீஸில் புகார் செய்யச் சொன்னாள். அடுத்தநாள் தாழ்ப்பாளை ரிபேர் செய்ய மானேஜரிடம் சொன்னாள்.

அப்போது இரவு 9 மணி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் மிகுந்த பரபரப்பாய் இருந்த்து. ஒரு போலீஸ்கார்ர் என்னை கழுத்தைப் பிடித்துத் தள்ளி வெளியே விட்டார். வழிவிடு என்றதும் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து அழகழகாய் ஐந்து ஆறு இளம் பெண்கள் இறக்கிவிடப்பட்டார்கள். கூடவே நான்கைந்து ஆண்கள். அந்த போலீஸ்கார்ர் சொன்னார் “தம்பீ இது பிராத்தல் கேஸ்கள். நீ உள்ளே இருந்திருந்தால் உன்னையும் அவங்களோடு சேத்துவிட்டிருப்பாங்க. நாளைக்கு வந்து கம்ப்ளைண்ட் கொடு” என்றார். நானும் என் நண்பனும் தப்பித்தால் போதும் என அறைக்கு வந்து சேர்ந்தோம்.
அடுத்த நாள் நாங்கள் கல்லூரிக்குப் போகவில்லை. தாழ்ப்பாள் ரிப்பேர் செய்யப்பட்டது.

பக்கத்து அறையில் பிரசாத் ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு தெலுங்கர் “எனக்கு மானேஜர் மீதுதான் சந்தேகம். நான் வேற லாட்ஜ் பார்க்கலாம்னு இருக்கேன்” என்றார்.

எங்களுக்கு அந்த தி.நகர் உஸ்மான் ரோடு பிடித்துவிட்டதால் காலி செய்யவில்லை.



Wednesday, May 27, 2020


நானே நானா, யாரோ தானா!!

6. நிறைவேறாத ஆசைகள்

அம்மாவுக்குப் பதினான்கு வயதிலேயே பூப்பு அடைவதற்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. அப்போது அப்பாவுக்கு 19 வயது. அம்மாவுக்கு 23 வயதானபோதுதான் நான் பிறந்தேன். அதனால் என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

ஆமாம், நான் 50 ஏக்கர் நிலம் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை. என்னைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆயா. என்னைத் தெருவில் இறங்கி விளையாடவே விடமாட்டாள். அந்த கிராமத்துப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் நினைவு இருக்கிறது. மேள தாளத்துடன் சேர்த்தார்கள். பட்டுச் சொக்காய். அன்று பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள்.. மற்ற குழந்தைகள் எல்லாரும் சாதாரண உடையில் வந்தபோது நான் மட்டும் தினசரி உயர்வான உடை. வாத்தியார் மற்ற பிள்ளைகளை கோலால் அடித்தபோது என்னை மட்டும் அது சீந்தவேயில்லை. எனக்கு இதெல்லாம் ஒரு மாதிரி பட்டது. ஒரு மாணவன் கோலில் அடிபட்டு அழுதபோது எனக்கும் பயம் வந்து நானும் அழுத்து நினைவிருக்கிறது.

பள்ளி விட்டதும் ஆயா வந்து தயாராகப் பள்ளியில் நிற்பாள். மற்ற மாணவர்கள் குதூகலமாய் மண்ணில் ஆடும்போது ஆயா தடுத்து, வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டு போய்விடுவாள். நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால், ஆயாவும் நிற்பாள். என் பக்கத்து வீட்டுச் சிறுவன் என்னைக் கூப்பிட்டால் ஆயாசாமீ நீ அவங்களோட சேர வேணாம்என்பாள். எனக்கு மற்ற பிள்ளைகளெல்லாம் சுதந்திரமாய் திரியும்போது நான் மட்டும் ஏன் அப்படி முடியவில்லை என்று துக்கம் துக்கமாய் வரும். அதனால் அம்மாவிடம் வந்து அழுவேன். அப்பா அம்மாவை மீறி என் விஷயத்தில் எதுவும் செய்யமாட்டார். எனக்கு நான்கு வயதான போது தம்பி பிறந்தான். அதனால் ஆயாவின் கண்காணிப்பு எனக்கு ஆறு வயதான போது குறைந்தது. நான் மற்ற பையன்களோடு விளையாடப்போவேன்.

அப்பாவிடம் எனக்கும் டமடம் (நீச்சல்) கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். அப்பா உதட்டில் விரலை வைத்து உஷ் அம்மா கிட்டே சொல்லாதே என்று எங்கள் நிலத்துக் கிணற்றுக்கு அழைத்துப்போனார். அப்பா ஒரு சொர புருடைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை இடுப்பில் கட்டிக்கொள்ள, நிலத்து ஆள் வஜ்ஜிரம் கற்றுக்கொடுத்தார். இரண்டு நாள் கற்றிருப்பேன். அம்மாவிடம் யாரோ இதைச் சொல்லிவிட அம்மா ஆகாசத்துக்கும் பூமிக்கும் எகிறினாள். வஜ்ஜிரம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள எனக்கு மீண்டும் காவல். என் நீச்சல் ஆசை இன்று வரை நிறைவேறாமல் போய்விட்டது.

பெங்களூரில் என் மூத்த மகள் இருக்கும் அபார்ட்மெண்ட்ஸில் நீச்சல் குளம் இருக்கிறது. அவள் நீச்சல் கற்றுக்கொண்டு,  என் இரு பேத்திகளும் அருமையாக நீந்துகிறார்கள். நான் அந்தக் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் நீந்துவதை ஒரு பெருமூச்சுடன் காண்கிறேன். அம்மா என்னைச் சிறுவயதில் தடுத்தாள் இல்லையா? அப்போதிலிருந்து அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க ஆரம்பித்தேன். அம்மா ஏதாவது சொன்னால் எதிரிடையாகச் செய்வேன்.

என் கதையைக் கேட்ட மனைவி சொன்னாள்:.

நீங்க சென்னையில்தானே சைதாப்பேட்டையில் படிச்சீங்க. பக்கத்துலியே ஒய் எம் சி ஏ நீச்சல் குளம் இருக்கே, . ஏன் கத்துக்கலை?”
ஆமாம். வாழ்வில் நான் செய்த தவறு அதுதான்.

சென்றதினி மீளாது….(நிறைவேறாதவை இன்னும் தொடரும்)


நானே நானா, யாரோ தானா!!

நானே நானா, யாரோ தானா!!

6. நிறைவேறாத ஆசைகள்
அம்மாவுக்குப் பதினான்கு வயதிலேயே பூப்பு அடைவதற்கு முன்னாலேயே திருமணம் ஆகிவிட்டது. அப்போது அப்பாவுக்கு 19 வயது. அம்மாவுக்கு 23 வயதானபோதுதான் நான் பிறந்தேன். அதனால் என்னை எப்படி வளர்த்திருப்பார்கள் என்று உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
ஆமாம், நான் 50 ஏக்கர் நிலம் கொண்ட ஜமீந்தார் வீட்டுப் பிள்ளை. என்னைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆயா. என்னைத் தெருவில் இறங்கி விளையாடவே விடமாட்டாள். அந்த கிராமத்துப் பள்ளியில் நான் சேர்ந்த நாள் நினைவு இருக்கிறது. மேள தாளத்துடன் சேர்த்தார்கள். பட்டுச் சொக்காய். அன்று பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள்.. மற்ற குழந்தைகள் எல்லாரும் சாதாரண உடையில் வந்தபோது நான் மட்டும் தினசரி உயர்வான உடை. வாத்தியார் மற்ற பிள்ளைகளை கோலால் அடித்தபோது என்னை மட்டும் அது சீந்தவேயில்லை.

எனக்கு இதெல்லாம் ஒரு மாதிரி பட்டது. ஒரு மாணவன் கோலில் அடிபட்டு அழுதபோது எனக்கும் பயம் வந்து நானும் அழுதது நினைவிருக்கிறது.
பள்ளி விட்டதும் ஆயா வந்து தயாராகப் பள்ளியில் நிற்பாள். மற்ற மாணவர்கள் குதூகலமாய் மண்ணில் ஆடும்போது ஆயா தடுத்து, வீட்டுக்குக் கூப்பிட்டுக்கொண்டு போய்விடுவாள். நான் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால், ஆயாவும் நிற்பாள். என் பக்கத்து வீட்டுச் சிறுவன் என்னைக் கூப்பிட்டால் ஆயா “சாமீ நீ அவங்களோட சேர வேணாம்” என்பாள். எனக்கு மற்ற பிள்ளைகளெல்லாம் சுதந்திரமாய் திரியும்போது நான் மட்டும் ஏன் அப்படி முடியவில்லை என்று துக்கம் துக்கமாய் வரும்.

அதனால் அம்மாவிடம் வந்து அழுவேன். அப்பா அம்மாவை மீறி என் விஷயத்தில் எதுவும் செய்யமாட்டார். எனக்கு நான்கு வயதான போது தம்பி பிறந்தான். அதனால் ஆயாவின் கண்காணிப்பு எனக்கு ஆறு வயதான போது குறைந்தது. நான் மற்ற பையன்களோடு விளையாடப்போவேன்.
அப்பாவிடம் எனக்கும் டமடம் (நீச்சல்) கற்றுக்கொடுக்கும்படி கேட்டேன். அப்பா உதட்டில் விரலை வைத்து உஷ் அம்மா கிட்டே சொல்லாதே என்று எங்கள் நிலத்துக் கிணற்றுக்கு அழைத்துப்போனார். அப்பா ஒரு சொர புருடைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதை இடுப்பில் கட்டிக்கொள்ள, நிலத்து ஆள் வஜ்ஜிரம் கற்றுக்கொடுத்தார். இரண்டு நாள் கற்றிருப்பேன். அம்மாவிடம் யாரோ இதைச் சொல்லிவிட அம்மா ஆகாசத்துக்கும் பூமிக்கும் எகிறினாள். வஜ்ஜிரம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ள எனக்கு மீண்டும் காவல். என் நீச்சல் ஆசை இன்று வரை நிறைவேறாமல் போய்விட்டது.

பெங்களூரில் என் மூத்த மகள் இருக்கும் அபார்ட்மெண்ட்ஸில் நீச்சம் குளம் இருக்கிறது. அவள் நீச்சல் கற்றுக்கொண்டு, என் இரு பேத்திகளும் அருமையாக நீந்துகிறார்கள். நான் அந்தக் குளத்துக்கு அருகில் உட்கார்ந்து சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் நீந்துவதை ஒரு பெருமூச்சுடன் காண்கிறேன்.

அம்மா என்னைச் சிறுவயதில் தடுத்தாள் இல்லையா? அப்போதிலிருந்து அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய் எதிர்க்க ஆரம்பித்தேன். அம்மா ஏதாவது சொன்னால் எதிரிடையாகச் செய்வேன்.

என் கதையைக் கேட்ட மனைவி சொன்னாள்:.
“நீங்க சென்னையில்தானே சைதாப்பேட்டையில் படிச்சீங்க. பக்கத்துலியே ஒய் எம் சி ஏ நீச்சல் குளம் இருக்கே, . ஏன் கத்துக்கலை?”

ஆமாம். வாழ்வில் நான் செய்த தவறு அதுதான்.

சென்றதினி மீளாது….(நிறைவேறாதவை இன்னும் தொடரும்)