17. மாயக்கண்ணாடி வாத்தியார்
இன்று நான் ஓரளவுக்குத்
தவறில்லாமல், சந்திப்பிழைகள் தவிர்த்து தமிழில் கதை, கட்டுரை, நாவல்கள் எழுதுகிறேன்
என்றால் அதற்குக் காரணம் என் தமிழ் ஆசிரியர்தான். சந்தன கலரில் கோட்டுடன் வேட்டியில்
பள்ளிக்கு வருவார் அவர். 11 ம் வகுப்பு முதல் பீரியட் அவருடையது. முதல் கால்மணி நேரம்
மனப்பாடச் செய்யுளை ஒப்புவிக்கவேண்டும். திடீரென ஒரு மாணவனைப் பார்த்து நீ சொல் என்பார்.
சில மாணவர்கள் எங்களைக் கேளுங்கள் என்பதைப்போல கைகளை உயர்த்துவார்கள். அவர்களை அவர்
தவிர்த்துவிட்டு வேறொருவரைக் கேட்பார்.
சில நாள் நான்
மனப்பாடம் செய்யாமல் வகுப்புக்கு வருவேன். ஆனால் தெரிந்தது மாதிரி கையை உயர்த்துவேன்.
“டேய் நீ சொல்லு”
என்னைக் கை காட்டிவிட நான் விழிப்பேன். எப்படி அவர் எனக்குத் தெரியாது என கண்டுபிடித்தார்
என இன்று வரை தெரியாது. என்னைப் போலவே பலருக்கும் அப்படி ஆகியிருக்கிறது. அதனால் அவருக்கு
மாயக்கண்ணாடி வாத்தியார் என எங்கள் சர்க்கிளில் பெயர் வைத்தோம்.
ஒப்புவிக்காதவர்கள்
அந்த மனப்பாடப் பகுதியை பத்து முறை இன்போஷிஷன் எழுதி அடுத்த நாள் நோட்டைக் காட்டவேண்டும்.
கடன் கொடுத்தவர் மாதிரி அதை வசூலிப்பார்.
டிக்டேஷனில் பொழிப்புரை
தருவார். கோனார் நோட்ஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது. அவருடையதையே எழுதவேண்டும். சந்திப்பிழை
ஏற்பட்டால் அரை மார்க் போய்விடும்.
என் கையெழுத்து
குண்டு குண்டாக அழகாக இருக்கும். அதற்குக் காரணம் எட்டாம் வகுப்பில் தமிழ் எடுத்த டீச்சர்
ஆவார். தினந்தோறும் ஏதாவது மனப்பாடச் செய்யுளை ஐந்து வரிகள் எழுதிக் காட்டவேண்டும்.
காலையில் முதல் வேலை அதுதான். ஒவ்வொரு நாள் வேகமாய் கிறுக்கினால், அதற்குப் பரிசு பிரம்படிதான்.
என்னைப் பார்த்து
“டேய், நீ அழகாய் எழுதுகிறவன். கிறுக்காதே. சில பேர் அப்படி எழுதினால் விட்டுவிடுவேன்”
என்பார்.
11 ம் வகுப்பில்
ஆங்கிலப் பாடம் எடுத்த ஆசிரியர் ஓர் ஆங்கில வார்த்தி சொல்லி தமிழில் அதை மொழிபெயர்ப்பார்.
அதாவது ஆங்கிலப் பாடம் தமிழில் நடக்கும். எங்களுடையது B செக்ஷன். மாணவிகள் இருப்பார்கள்..
எட்டு மாணவிகள்தான். பக்கத்து A செக்ஷனில் ஆங்கில ஆசிரியர் ஸ்டைலாக ஆங்கிலத்திலேயே
நடத்துவார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல எனக்கு அவரைப் பிடிக்கும். அவர்களுக்கு
எங்கள் ஆசிரியரைப் பிடிக்கும்.
நான் ஆசிரியனாகப்
போனபோது ஆங்கில வகுப்பில் தமிழில் சொல்வதை 90% சதவீதம் தவிர்ப்பேன்.
நான் மேல்நிலைப்பல்ளி
ஆங்கில ஆசிரியராக இருந்தபோது, என் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்.
அவர் அறையில் ஒரு பதினோராம் வகுப்பு படிக்கும் மணவனும் அவன் தந்தையும் நின்றிருந்தார்கள்.
“என்ன சாயி, நீ
இங்கிலீஷ்லயே பாடம் நடத்துறியாமே. இந்தப் பையன் புரியலைன்னு சொல்றான்”
நான் அந்த மணவனிடம்
கேட்டேன். “நீ எந்த குரூப் எடுத்திருக்கே?”
“PCMB சார்.”
“உன் கணக்கு வாத்தியார்
கெமிஸ்ட்ரி நடத்துறாரா>”
“இல்லை சார்.”
“உன் பயாலஜி வாத்தியார்
பிஸிக்ஸ் நடத்துறாரா?”
“இல்லை சார்.”
“நான் இங்கிலீஷ்
வாத்யார். நான் மட்டும் ஏன் தமிழ்ல நடத்துணும்?’
பையனைவிட அவன்
தகப்பனார் புரிந்துகொண்டார்.
நான் தலைமை ஆசிரியரிடம்
சொன்னேன். “ His is not a complaint, but a compliment, sir”
“சாயி, இது கிராமம்.
அப்பப்ப தமிழ்லயும் நடத்து” என்றார் தலைமை ஆசிரியர்.
No comments:
Post a Comment