14. நூலகங்களும் நானும்
1956 முதல் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், தி ஹிந்து ஆகியவை வரும். எல்லாவற்றையும் முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிப்பேன். மாவட்ட நூலகம் எனக்கு அறிமுகமாகி அதில் உறுப்பினர் அட்டை வாங்கிக்கொண்டேன்.
நூலகத்தில் கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர், கண்ணதாசனின் இதழ்கள், கல்கண்டு, முத்தாரம் போன்றவை என்னைக் கவர்ந்தன.
ஆங்கிலத்தில் Imprint கட்டுரைகள் அருமையாக இருக்கும்.
நாளிதழ்கள்
எட்டாவது வரும். நடுநிலை, கட்சி என பல பத்திரிகைகள் வரும். நான் அரசியல்
கற்றுக்கொண்டதே இவற்றைப் படித்துதான். நான் சனி, ஞயிறுகளில் காலை 8 மணிக்குத் திறந்ததுமே சென்றுவிடுவேன்.
நூலகரின் பக்கத்து அறையில் நாளிதழ்கள் அடுக்கி
வைத்திருக்கும். நான் போனாலே நூலகர் டென்ஷன் ஆகிவிடுவார்.
தம்பீ, ஒழுங்கா படிச்சிட்டு தேதி வாரியா அடுக்கி
வை என்பார். அங்கே அட்டைக்கு ஒரு புத்தகம்தான் தருவார்கள்.
அதனால் புத்தகங்களை எடுத்துக்கொண்டு ஒரு பெஞ்சியில் உட்கார்ந்து படிப்பேன்.
அப்படி காண்டேகர் நாவல்களைப் படித்தேன். 1960 களில்
எழுதிய எழுத்தாளர் நாவல்கள், கட்டுரைகள் ஆகியவையும் அப்படி படித்ததுதான்.
கல்லூரி
நூலகத்தில் இரண்டு அட்டை கொடுப்பார்கள்..
ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுகமாயின. நூலகர் கேட்பார்
ஏன் தம்பீ சப்ஜெக்ட் புக் படிக்கமாட்டியா? என்று. கிரஹாம் கிரீன் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை.
என் சர்வீஸில்
நான் எட்டு கல்விக்கூடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணிக்குச் சேர்ந்தால் முதல்
வேலையாக நூலகம்தான் சென்று பார்ப்பேன். பத்திரிகைகளில் எழுதி
எழுத்தாளன் வேறு ஆகிவிட்டிருந்தேன்.
வேலூர்
அரசினர் முஸ்லீம்
பள்ளி நூலகம்தான் எனக்குப் பிடித்தமானது. விதவிதமான தமிழ்,
ஆங்கில புத்தகங்கள் அதில் இருந்தன. உருது புத்தகங்கள்
இன்னும் அதிகம் இருந்தன. சிறு வயதில் வள்ளலாரை ம.பொ சி தமது செங்கோல் பத்திரிகை மூலமாக அறிமுகப்படுத்தி வைத்தார்.. ஆனால் வேலூர் பள்ளி நூலகத்தில் தடிமனான அளவில் ஏறக்குறைய 18 புத்தகத் திரட்டுகள் வள்ளலார் எழுதியவை அங்கிருந்தன. பிரமித்துப் போனேன். நான் ஐயப்ப விரதம் வைத்தபோது அந்தப்
புத்தகங்களில் பாதியாவது படித்திருப்பேன். தமிழ்நாட்டில் வள்ளலாரைப்
பின்பற்றாமல் ஈவேராவை பின்பற்றி மக்கள் தங்கள் ஐடென்டியையே இழந்துகொண்டிருக்கிறார்கள்.
நான் திருவள்ளூர்
மாவட்ட DIET க்கு போனபோது நூலகம் ஒரு சின்ன அறையில் இருந்தது. நான்
அங்கே போன மூன்று மாதத்தில் முதல்வர் பொறுப்பு எனக்கு வந்தது. அங்கே நூலகர் என்ற பதவி இருந்தது.. எனக்கு முன்னால் இருந்த
முதல்வர் பீரியடில் சிலகட்டிடங்களைக் கட்ட ஆரம்பித்து என் காலத்தில் அது முடிந்தது.
நான் முதல் வேலையாக ஒரு நீண்ட கட்டிடத்திற்கு நூலகத்தை மாற்றிவிட்டேன். நீண்ட மேசைகள் ஓர் அறையில் பூட்டப்பட்டிருந்தன.
அவற்றை நூலகத்தில் போடுமாறு செய்தேன். ஸ்டாஃப் மீட்டிங் அங்கேதான் நடத்துவேன்.
நூலகருக்குச் சொல்லி பதிப்பகங்களுக்கு எழுதச் செய்து புத்தக விவரங்களை
வரவழைத்தேன். நூலகக் கணக்கில் ஏராளமான பணம் செலவிடப்படாமல் இருந்தது.
நூறு புத்தகங்களுக்கு ஆர்டர் செய்து அவை வந்தன. ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாதம் ஒரு புத்தகம் படித்து அதைப் பற்றி கட்டுரை
எழுதுமாறு செய்த போது சும்மா இருந்த நூலகர் சுறுசுறுப்பானார்.. மாணவர்களின்
அக மதிப்பீட்டிற்கு அது உதவியது.
இப்போது
கூட நான் வருந்தும் விஷயம் ஒன்றுதான்.
சென்னை அண்ணா நூலகத்திற்கு 50 க்கு மேற்பட்ட நல்ல
புத்தகங்களை தானமாகக் கொடுத்ததுதான். இப்படி முகநூல் அப்போது
இருந்திருந்தால் தானம் செய்திருக்கமாட்டேன். என் முதிய வயதில்
பொழுது போயிருக்கும். அதனால் நண்பர்களே! வாங்கிய புத்தகங்களைக் காப்பாற்றி வையுங்கள். ஒருநாள்
அவை உங்களுக்கு உதவக்கூடும்.
No comments:
Post a Comment