#காணாமற்_போகும்_மொழிகள்
மாலை நேரத்தில்
எங்கள் காலனியில் பல குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். வயது 5-10 இருக்கும்.
அவர்களிடம் ஆங்கிலக் கூச்சல்கள்தான் கேட்கின்றன. நான் பெங்களூர் போனால் என் மொழியில்
பேத்திகள் உரையாடுவதில்லை. ஆங்கிலம்தான். நான் கன்னடத்திலும், என் மனைவி மராத்தியிலும்
பேசினால் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதில் வருகிறது. ஒரு கால் ஊனமானவனை ரேசில் கலந்துகொள்
என்று சொல்கிறவன் போல் இல்லாமல் நானும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், பக்கத்தில்
உட்கார்ந்து பல கதைகள், நிகழ்ச்சிகள் பற்றி உற்சாகமாய் பேசுகிறார்கள்.
ஜூனியர் காலேஜ்
படிக்கும் பேத்தி தன் ஆங்கில விடைத்தாளைக் காண்பித்தாள். அதில் அவள் ஆசிரியை உன் கையெழுத்து
நன்றாயிருக்கிறது என்று எழுதியிருந்தார். அவள் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்.
என் மூத்த பெண் என்னைப் போலவே சில ஸ்ட்ரோக்குகள் எழுதுவாள். பேத்திக்கும் அது வந்திருக்கிறது.
இது ஜீன் சம்பந்தப்பட்டதா என தெரியவில்லை.
அம்மா கன்னடத்தில்
தன் பெற்றோருக்கும், தம்பிகளுக்கும் கார்டில் எழுதுவாள். குண்டு குண்டாய் அழகாய் இருக்கும்.
அதைப் படிக்க நான் கன்னடம் படித்தேன். என் மாமா ஒருத்தரின் கன்னடம் படிக்கவே முடியாத
கிறுக்கலில் இருக்கும். என் மனைவி கையெழுத்து நன்றாய் இருக்காது. ஆனால் என் மாமியார்
தமிழ்க் கையெழுத்து அழகாயிருக்கும்.
அந்தக் காலத்தில்
பத்திரிகை ஆசிரியர்களுக்கு நான் கடிதம் எழுதுவேன். பதில் அளிப்பவர்களாக இருந்தார்கள்.
நா.பா அவர்கள் கையெழுத்தைப் போல் அழகான ஒன்றைப் பார்த்தது கிடையாது. சாவி அவர்கள் கிறுக்கலாய்
எழுதுவார். பரணில் அவர்கள் கடிதங்களை ஞாபகார்த்தமாய் வைத்திருக்கிறேன்.
டைப் ரைட்டிங்
இன்ஸ்டிடியூட்கள் போய் இன்டெர்னர்ட் பப் வந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்னால் அதுவும்
குறைந்தது. இது வாட்ஸப், FB MESSAGE யுகம். சேட்டிங்கில் விஷயம் முடிந்துவிடுகிறது.
. எல்லாம் ஆங்கிலத்தில். தமிழ் இனி மெல்லச் சாகும் என்றதில் பாதி உயிர் போய்விட்டது.
மீதம் எத்தனை நாளோ.
பழைய தமிழ் சினிமாவில்
இலக்கியத் தரமான வார்த்தைகள் கூட இடம் பெறும். அது குறைந்து அடிடா, வெட்டுடா என்று
ஒரே கொலவெறியாய் இருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ….
எனக்கு ஓர் ஆதங்கம்.
93 வயது வரை வாழ்ந்த அம்மா தமிழ் கற்காமல், என் எழுத்துக்களைப் படித்தேயில்லை. பேத்திகளும்
அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார்கள். ஒரு கால கட்டத்தில் என் எழுத்துக்களுக்கு உரிமை
கோரக் கூட தெரியாதவர்களாய் இருப்பார்கள்.
No comments:
Post a Comment