அச்சில்
எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்
நான்
பள்ளிப் பருவத்திலேயே எழுதி எழுதி விகடன், குமுதம் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். தபால் தலை இணைத்து அனுப்பவேண்டும். எல்லாம் திரும்பி வந்துவிடும். அயர்ச்சியாக இருக்கும். அது 1967 வரை தொடர்ந்தது. முதல் கதை வேலூர் முரசில் வந்தது. ரூ25 சம்மானம். போஸ்ட்மேனுக்கு அதில் ஐந்து ரூபாய் கொடுத்தேன். வீட்டில் சாக்லெட் கொண்டாட்டம். அதன் பிறகு தினமணி கதிரில் அதே வருடம் என் சிறுகதையும், நாபாவின் தீபம் பத்திரிகையில் முதல் பரிசுக் கட்டுரையும் வெளியாயின. அச்சில் பார்க்கிற சந்தோஷம் அப்படி எழுதியவர்கள் அனுபவித்திருப்பார்கள். பல பத்திரிகைகளில் என் கதை கட்டுரைகள் வெளி வந்தன. ஆனால் என் ஆதர்ச விகடன் மட்டும் எனக்குப் போக்கு காட்டியது.
நான்
2004 ல் ஓய்வு பெற்றபோது என் ஆங்கிலம் பற்றிய அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்கி ஆபீசுக்குப் போய் அதன் ஆசிரியர் சீதாரவியைப் பார்த்தேன். அவர் என் முதல் நான்கு அத்தியாயங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, முடியாது என திருப்பிக் கொடுத்துவிட்டார். அவருடைய எடுத்தெறிந்து பேசும் குணம் எனக்கு வியப்பை உண்டாக்கியது. ஒரு சிரித்த முகம் இல்லை. என்ன கஷ்டமோ அவருக்கு.. நான் அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் நாபாவிடமும், சாவி அவர்களிடமும் பழகியிருக்கிறேன். சாவி அவர்களை நான் தினமணி கதிர் ஆபீசில் சந்தித்து என் கதையை அவரிடம் கொடுத்தேன். “ஏற்கனவே அந்தப் பத்திரிகையில் என் மூன்று கதைகள் வந்திருந்தன.. கதையைப் பார்த்துவிட்டு உதவி ஆசிரியரிடம் கொடுத்துவிட்டார். இரண்டு வாரங்களில் நான் கொடுத்த தலைப்பு மாற்றப்பட்டு “எலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோ” என வந்தது. என்னிடம்
2006ல் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெண்மணி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, அவள் விகடன் ஆசிரியர் உங்களிடம் பேசுவார் என்றார். மாலையில் அதன் படியே ஆசிரியர் என்னிடம் எப்படிப்பட்ட தொடர் வேண்டும், நீங்கள் எப்படி எழுதப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் இரண்டு அத்தியாயங்களை எழுதி வாருங்கள் என்றார். அவர் சொன்னபடி முழு மூச்சாக இரண்டு நாளில் எழுதி, கிரீம்ஸ் சாலையில் இருந்த விகடன் ஆபீசுக்குப் போனேன். ஆபீஸ் பல கம்ப்யூட்டர்கள் சகிதம் ஹைடெக்காக இருந்தது.
அவள்
அலுவலகத்தில் ஆசிரியர் ம.கா. சிவஞானத்தைச் சந்தித்தேன். அத்தியாயங்களைக் கொடுத்தேன். அவர் முகத்தைப் பார்த்தேன் மலர்ச்சி காணப்பட்டது. நான் நான்கு கேரக்டர்கள் பேசுவதாக எழுதியிருந்தேன். அதில் ஒரு கேரக்டர் வேண்டாம், மூன்றாக மாற்றி மீண்டும் எழூதி வாருங்கள் என்றார். அப்படியே செய்தேன். அது முதல் என் ஆங்கிலம் பற்றிய தொடர் அவள் விகடனில் வெளிவந்தது. கைப்பிரதிதான். அதனால் சிவஞானம் என்னை முதலில் ஒரு கேமிரா மொபலை வாங்கிக்கொள்ளச் சொன்னார். கம்ப்யூட்டரில் டைப் அடிக்கத் தெரியாது என்றதும், கற்றுக்கொள்ளச் சொன்னார்.
என்
வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தும் மகள்தான் அதிகம் பயன்படுத்தினாள். தமிழ் ஃபான்ட் இல்லை. சிவஞானம் ஒரு ஃபான்டை தரவிரக்கம் செய்துகொள்ளச் சொன்னார். இருந்தாலும் 33 இதழ்கள் கையால் எழுதிதான் கொடுத்தேன்..
சிவஞானம்
அருமையான எடிடர். அற்புதமான மனிதர். நான் எழுதியவற்றில் கையே வைக்கவில்லை. அவருடைய உதவி ஆசிரியர் தயாமலர் என்னிடம் சில பகுதிகளின் சந்தேகங்களை போனில் கேட்பார். போனிலேயே மாற்றிச் சொல்வேன். அவர் குறிப்பெடுத்து அவ்வாறே வெளிவரும்.
அதன்
பிறகு நான் 2013 ல் லேப்டாப் வாங்கிக்கொண்டேன்.
இப்போது
கிண்டிலில் KDP யில் நிறைய பேர் எழுதி மின்னூல் வெளியிடுகிறார்கள். சிலரின் தமிழ் தமாஷாக இருக்கிறது. இருந்தாலும் புத்தகமாகப் பார்த்துவிடுகிறார்கள். ஒருவேளை பத்திரிகைக்கு அனுப்பி தோற்றவர்களாக இருக்கக்கூடும்.
ஒருமுறை
நான் தீபம் ஆபீசில் நாபாவை சந்தித்தேன்.
“சாய்ராம், இந்த வரியைப் படிங்க” என்று யாரோ எழுதிய கதைப் பிரதியைக் காண்பித்தார். நான் சரியாக இருக்கிறது என்றேன்.
அவர்
“ இரண்டு மணி அடித்து ஓய்ந்தது என்று எழுதியிருக்கார். 11, 12 மணி அடித்தால்தான் ஓய்ந்தது என எழுதலாம். இரண்டே மணி அடித்தால்?” என்று அவர் விளக்கியதும் நான் அவரை வியந்தேன்.
எடிடர்கள்
ன்பவர்கள் நல்ல தமிழ் படித்திருக்கவேண்டும். இப்போது சில பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்கள் கூட அப்படி இல்லை.
No comments:
Post a Comment