Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Tuesday, January 8, 2019

மண்ணில் விழாது வானம்

                                                           2. நான் ஆசிரியரானேன்


அந்த மார்கழிக் காலையின் குளுமையில் கிராமத்து வீட்டு வெரந்தாவின் திண்ணை மேல் கால் குவித்து நண்பனின் வரவுக்காகக் காத்திருந்தேன். மண் வாசனை மூக்கில், அதனுடன் சாணியில் நிற்கவைத்த பூசனிப்பூவின் அதற்கே உரித்தான மணம். நான் மூச்சிழுத்து வெளிவிட்டேன். என் வயது 10. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு. விடுமுறையில் பொழுது போகவில்லை. நண்பன் சீனு திண்ணைக்கு வந்து, தான் ஓட்டி வந்த டயர் சக்கரத்தை சாய்த்து நிற்க வைத்தான்.

“வாடா .. சக்கரம் ஓட்டலாம்” என்றான்,

“என் சக்கரம் டயர் கிழிஞ்சிடுச்சுடா..அப்பா இன்னொரு டயர் குடுக்குறேனு சொல்லியிருக்கார். இன்னிக்கு திண்ணை மேலயே விளையாடலாம்.”

“டீச்சர் விளையாட்டு ஆடலாமா?” என்றான் சீனு.
வகுப்புக்கு நேற்று வந்த பெண் டீச்சர் புதுசு. “அவங்க நின்ன விதம் இப்படி” என்று நடித்துக் காட்டினேன்.

சீனு அந்த டீச்சர் போலவே பேசிக் காட்டினான்.
இருவரும் சிரித்தோம்

நான் வீட்டினுள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தேன். “நான்தான் டீச்சர். நீ என் கிட்ட படிக்கிறவன். விளையாடலாமா?”
விளையாடினோம்.

இப்போது நினைக்கிறேன். இந்த விளையாட்டை ஆடாத இளம் வயதுக்காரர்கள் இல்லை எனலாம். என் மகள்கள், உங்கள் குழந்தைகள், என் பேத்திகள் என்று அந்த சிறுவயதில்
ஜீனில் எல்லாரிடமும் அந்த விளையாட்டு இருக்கிறது.

இப்படித்தான் எனக்குள் ஆசிரியர் ஆவதற்கான விதை ஊன்றப்படிருக்கிறது. இதை நான் அப்போது அந்த வயதில் அறிந்திருக்கவில்லை.
கல்லூரியில் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படிப்பில் பத்து மதிப்பெண்ணில் முதல் வகுப்பு தேர்ச்சியைக் கோட்டைவிட்டேன். இப்போது போல 1966 ல் கம்பார்ட்மெண்ட் சிஸ்டத்தில் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எழுதுவது போன்ற சலுகை கிடையாது. இம்ப்ரூவ்மெண்ட் சிஸ்டமும் கிடையாது. என்னுடைய எம்.எஸ்ஸி படிக்கும் கனவு பலிக்கவில்லை. என் ஆசிரியராகும் கனவும் போச்சு.

என் நண்பர்கள் எல்லோரும் உடனடியாக அன்று வா வா என்று அழைத்த பள்ளி ஆசிரியர் வேலையில் அன்ட்ரெயிண்டு ஆசிரியர்களாக அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். நான் யோசித்து அப்படி சேரும் சமயத்தில் எங்கள் ஊர் அருகில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை.
 வேலூரில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் (CEO)முன் போய் நின்றேன்.
அவர்: பாருப்பா.. திருப்பத்தூர் வட்டாரத்தில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் சயன்ஸ் டீச்சர் போஸ்ட் ஃபுல். உனக்கு ஜோலார்பேட்டையில்தான் ஒரு போஸ்ட் இருக்கு.

நான்: பரவாயில்லை சார். அதிலியே கொடுங்க.

அவர்: அது ஒரு மாதிரியான பள்ளி. நிறைய பேர் அந்தப் பள்ளி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நீ கொடுங்கனு சொல்றே. அந்த ஊர்  தி.க ஆளுங்க இருக்கிற இடம். நீயோ பிராமின். பார்த்து நடந்துக்கோ

நான்: சரி, சார்.

இப்படித்தான் நான் அன்ட்ரெயின்டு ஆசிரியரானேன்.

பள்ளியில் நான் சேர்ந்தபோது எனக்கு பத்தாம் வகுப்பு  எஃப் செக்‌ஷன் கொடுத்தார்கள். நான் சயன்ஸ் போதிக்கவேண்டும். எனக்கு வயது 20. அந்த வகுப்பில் ஃபெயிலானவர்கள் அதிகம். அப்போதெல்லாம் 11 வதுதான் SSLC. 18 வயது மணவர்கள். என்னைவிட திடகாத்திரமாக இருந்தார்கள். நான் பாடம் நடத்த ஆரம்பித்ததும் இரண்டு மாணவர்கள் என் பெர்மிஷன் இல்லாமலேயே வெளியே போனார்கள். நான் வெகு சின்சியராக  கரும்பலகையில் ஐந்து நிமிடம் ஒரு கருவியின் படம் வரைந்து திரும்பினால் பாதி வகுப்பு காலி!
ஓ! ஜோலார்ப்பேட்டை பள்ளி இப்படிப்பட்டதா என்று புரிந்தது. ஆனால் உள்ளே இருந்தவர்களுக்குப் பாடம் நடத்தினேன்.





No comments:

Post a Comment