Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Friday, November 2, 2018

தீபாவளி நினைவுகள்

சிறு வயதில் தீபாவளிக்கு ஒரு மாதமுன்பே டமால், டுமீல் என்று பட்டாசு சத்தம் கேட்கும். காக்கா பொன்னில் கந்தகத்தை மிளகளவு செய்துகொண்டு, ஒரு இரும்புக் குழாய் பள்ளத்தில் வைத்து, ஓங்கி அடித்தால் டமால் என்று வெடிக்கும். சொந்த வெடிசரக்கு அது. ஒரு பாய் கடையில் 1950லேயே ரூ50 க்கு அப்பா பட்டாசு வாங்கிக் கொடுப்பார். ஓர் அறையின் பாதியை அடைத்துக்கொள்ளும். தானம் நடக்கும்.


நாங்களும் எதிர் வீட்டு வக்கீல் பையனும் போட்டி போட்டு வெடிப்போம். கால நேரமில்லை. இதில் சில நண்பர்கள் உன் வீட்டுக் குப்பை அதிகம் அவன் வீட்டுக் குப்பை குறைவு என்று இரண்டு பேரிடமும் சொல்லி வெறுப்பேற்றுவார்கள். அப்பா எங்களுடன் ஆட்டம் பாம் தான் வெடிப்பார். அம்மா தீபாவளியன்று ஊசி பட்டாசு சரம் ஒன்றை பயந்துகொண்டே வெடிப்பார். அவர் கொளுத்துமுன்பே வாயால் டமால் என்றால் ஊதுவத்தியைக் கீழே போட்டுவிட சிரிப்போம். அம்மாவின் சரம் வெடித்து முடிக்கும். அந்தக் குதூகலம் அலாதியானதுதான்.


போன வருஷம் தீபாவளிக்கு ஆறு கம்பி மத்தாப்பு பெட்டிகளை வாங்கி, நாலு பெட்டி பணிப்பெண்ணுக்கு தானம். அவள் வீட்டில் ஸ்கூல் படிக்கும் பையன்கள் உள்ளனர். மீதி இரண்டு பெட்டிகளில் ஆறு குச்சிகள் உள்ளன. அதில் இரண்டு இப்போது நான் கொளுத்த, என் மனைவி இரண்டு, மகள் இரண்டு கொளுத்த தீபாவளி முடிந்துவிடும்.


காசு கரி ஆகாமல் புதிய உடைகளாகிவிட்டன. நான் மூணு டீ ஷர்ட், இரண்டு ஷார்ட்ஸ், மகள் ஆறுமாதமுன்பே சுந்தரிசில்கில் சுரிதார் துணி வாங்கி தைத்து ஒவ்வொன்றாக, மனைவி எதுவும் வாங்குவதில்லை. அவளுக்கு ஓசி புடவைகள் வருடத்திற்கு பத்தாவது சேர்ந்துவிடும். அண்ணன் தம்பிகள் வீட்டு விஷேசத்தில். எனக்கு வேஷ்டி அங்கவஸ்திரம் அவர்கள் கொடுக்க, அதை நான் தானம்தான் செய்கிறேன். அதுதான் மரியாதையாம். ம்ஹூம்..பெண்ணாய் பிறக்கவேண்டூம்.

சிறுவயதில் மூன்று மணிக்கே எழுந்து, அம்மா ஆரத்தி எடுக்க, அப்பா தலைக்கு எண்ணெய்விட, சூடாய் குளித்த சுகம் இப்போது இல்லை. புத்தாடைகள் உடுத்தி முதல் வெடிக்கு பறப்போம். இப்போதும் எண்ணெய் குளியல் உண்டு. நாமே குளிக்கவேண்டும். இரண்டு கம்பி மத்தாப்பு. கொளுத்தினால் தீப ஒளி தெரியும்.

இந்த வருடம் பகவத் கீதையில் சில அத்தியாயங்கள் செல்போனில் ஒலிக்க டவுன்லோடு செய்திருக்கிறேன். கண்மூடி கிருஷ்ணனை நினைக்கப்போகிறேன். சமீபத்திய உடுப்பி விசிட்டில் விஸ்வரூப தரிசன கிருஷ்ணன் கண்ணிலேயே இருக்கிறான். அவனை நினைப்பதுவே பேரின்பம்

கிருஷ்ணார்ப்பணமஸ்து

No comments:

Post a Comment