Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Monday, November 19, 2018

இது திருமலைதானா.......


இது திருமலைதானா…
நான் பல பத்து தடவை திருப்பதி-திருமலை போயிருக்கிறேன்.  1956 லேயே அப்பா செய்த கல்யாண உற்சவம் இன்னும் கண்ணிலேயே உள்ளது. இரண்டு பேர்தான் அன்று உற்சவம் செய்தார்கள். 

முடிந்ததும் அப்பா கையில் ஒரு வெள்ளி செங்கோலைக் கொடுத்து, முன்னால் மேளதாளம் சகிதத்துடன் ஸ்வாமி புறப்பாடு. மூன்று முறை பிராகாரம் சுற்றல். எங்கள் குடும்பம், அந்த இன்னொருவருடைய குடும்பம் முன்னே செல்ல நடந்தது. மதியம் மூன்று  மணியளவில் நாங்கள் தங்கியிருந்த காட்டேஜுக்கு பெரிய ஐந்து கூடைகளில் மிகப் பெரிய லட்டுகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை என்று தூக்கி வந்து இறக்கினார்கள்.

எங்கள் குடும்பத்தில் ஐந்துபேர், உதவிக்கு வந்த நிலத்து ஆள்கள் மூன்று பேர்தான். அத்தனையும் நங்கள் சாப்பிடமுடியுமா? வயிறு சிறிதுதானே!
லட்டுகளையும், வடைகளையும் ஊருக்கு எடுத்து செல்லமுடியும். ஆனால் மற்றவற்றை அத்தனையையும் முடியாது.

எங்கள் ஆட்கள் இருபது பேரை அழைத்து வந்தார்கள். எல்லாருக்கும் வயிறு முட்ட சாதங்கள் பரிமாற்னோம், பதார்த்தங்கள் கொடுத்தோம்.
அதற்குப் பின்னர் கூட பலதவை கல்யாண உற்சவம் அப்பா செய்தார். எல்லாம் குறைந்து, குறைந்து, செய்யும் பக்தர்கள் அதிகமாக அதிகமாக, சும்மா ஆனலைனில் இப்போது பார்த்தால் பல மாதங்கள் ஹவுஸ்ஃபுல் என்கிறது வெப்சைட்.

வேங்கடவனைகாருகில் பல நிமிடம் தரிசித்தது போய், இன்று பிடித்து தள்ளுவதில் பத்து விநாடிகள்தான், அதுவும் தூரத்திலிருந்து.

என் கடவுள் அத்தனை பிரபலமாகிவிட்டார்- பக்தர்களை லட்சக்கணக்கில் பெற்றுக்கொண்டு. தூரப் போய்விட்டார். வருத்தம்தான். என்ன செய்வது.

நான் எம்.ஏ ஆங்கிலத் தேர்வு எழுதியதும், விடுதி ஓனர் சொன்னார்.

“ஈ ரோஜு கொண்டகு போயெ பஸ் ஸ்டிரைக்கண்டி.”

“ஐயோ நான் சாமியை பார்க்கணுமே.’

அவர் சொன்னார். ஜீப்பில் போங்கள் என்று.
ஜீப்காரன் இருபது ரூபாய் கேட்டான் அந்த 1974ல். நான் கொடுத்தேன். சென்றேன்.

க்யூ வரிசைக் கதவு கோயிலில் மூடியிருந்தது. அங்கே ஒருவர் சொன்னார். பிரதான வாசல் மூலமாகவே செல்லுங்கள். ஜனக் கூட்டமில்லை. என்று.

ஒரு விஐபி போல நான் நுழைந்தேன். துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே போனால் இருபது பேர் கூட இல்லை. ஜரகண்டி இல்லை.

“ஐயா வேங்கடவா.. உன்னைத்தான் ஆற அமர பார்க்கிறேனா” என்று கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். பட்டர் கையால் தீர்த்தம் வாங்கினேன்.
வெளியே வந்தபோது, இது திருமலைதானா என்று வியந்தேன்.. 

அப்போதுதான்  கடவுளிடம் நான் எம்.ஏ பாஸ் செய்தால் மொட்டை போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டேன்.

அந்தப் படிப்பு 1978ல் மேல்நிலைக் கல்வி வந்தபோது என்னை முதுநிலை ஆங்கில ஆசிரியனாக்கியது.. என் வாழ்வு முன்னேறியது. பதவிகள் தானாய் வந்தன.

அதானால்தான் திருப்பதி வேங்கடவன் மேல் எனக்கு தனி பிரியம்.

இப்போது பத்து விநாடி தரிசனம்தான்  என்றாலும் கண்களில் நீர் கோத்துக்கொண்டுவிடுகிறது.


No comments:

Post a Comment