Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Wednesday, January 23, 2019

#காணாமற்_போகும்_மொழிகள்


#காணாமற்_போகும்_மொழிகள்
மாலை நேரத்தில் எங்கள் காலனியில் பல குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். வயது 5-10 இருக்கும். அவர்களிடம் ஆங்கிலக் கூச்சல்கள்தான் கேட்கின்றன. நான் பெங்களூர் போனால் என் மொழியில் பேத்திகள் உரையாடுவதில்லை. ஆங்கிலம்தான். நான் கன்னடத்திலும், என் மனைவி மராத்தியிலும் பேசினால் புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதில் வருகிறது. ஒரு கால் ஊனமானவனை ரேசில் கலந்துகொள் என்று சொல்கிறவன் போல் இல்லாமல் நானும் அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், பக்கத்தில் உட்கார்ந்து பல கதைகள், நிகழ்ச்சிகள் பற்றி உற்சாகமாய் பேசுகிறார்கள்.

ஜூனியர் காலேஜ் படிக்கும் பேத்தி தன் ஆங்கில விடைத்தாளைக் காண்பித்தாள். அதில் அவள் ஆசிரியை உன் கையெழுத்து நன்றாயிருக்கிறது என்று எழுதியிருந்தார். அவள் பேப்பரைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம். என் மூத்த பெண் என்னைப் போலவே சில ஸ்ட்ரோக்குகள் எழுதுவாள். பேத்திக்கும் அது வந்திருக்கிறது. இது ஜீன் சம்பந்தப்பட்டதா என தெரியவில்லை.

அம்மா கன்னடத்தில் தன் பெற்றோருக்கும், தம்பிகளுக்கும் கார்டில் எழுதுவாள். குண்டு குண்டாய் அழகாய் இருக்கும். அதைப் படிக்க நான் கன்னடம் படித்தேன். என் மாமா ஒருத்தரின் கன்னடம் படிக்கவே முடியாத கிறுக்கலில் இருக்கும். என் மனைவி கையெழுத்து நன்றாய் இருக்காது. ஆனால் என் மாமியார் தமிழ்க் கையெழுத்து அழகாயிருக்கும்.

அந்தக் காலத்தில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு நான் கடிதம் எழுதுவேன். பதில் அளிப்பவர்களாக இருந்தார்கள். நா.பா அவர்கள் கையெழுத்தைப் போல் அழகான ஒன்றைப் பார்த்தது கிடையாது. சாவி அவர்கள் கிறுக்கலாய் எழுதுவார். பரணில் அவர்கள் கடிதங்களை ஞாபகார்த்தமாய் வைத்திருக்கிறேன்.

டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் போய் இன்டெர்னர்ட் பப் வந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்னால் அதுவும் குறைந்தது. இது வாட்ஸப், FB MESSAGE யுகம். சேட்டிங்கில் விஷயம் முடிந்துவிடுகிறது. . எல்லாம் ஆங்கிலத்தில். தமிழ் இனி மெல்லச் சாகும் என்றதில் பாதி உயிர் போய்விட்டது. மீதம் எத்தனை நாளோ.

பழைய தமிழ் சினிமாவில் இலக்கியத் தரமான வார்த்தைகள் கூட இடம் பெறும். அது குறைந்து அடிடா, வெட்டுடா என்று ஒரே கொலவெறியாய் இருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ….

எனக்கு ஓர் ஆதங்கம். 93 வயது வரை வாழ்ந்த அம்மா தமிழ் கற்காமல், என் எழுத்துக்களைப் படித்தேயில்லை. பேத்திகளும் அந்த லிஸ்டில் சேர்ந்துவிட்டார்கள். ஒரு கால கட்டத்தில் என் எழுத்துக்களுக்கு உரிமை கோரக் கூட தெரியாதவர்களாய் இருப்பார்கள்.

Tuesday, January 22, 2019

அச்சில் எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்


அச்சில் எழுத்தைப் பார்க்கும் சந்தோஷம்
நான் பள்ளிப் பருவத்திலேயே எழுதி எழுதி விகடன், குமுதம் பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். தபால் தலை இணைத்து அனுப்பவேண்டும். எல்லாம் திரும்பி வந்துவிடும். அயர்ச்சியாக இருக்கும். அது 1967 வரை தொடர்ந்தது. முதல் கதை வேலூர் முரசில் வந்தது. ரூ25 சம்மானம். போஸ்ட்மேனுக்கு அதில் ஐந்து ரூபாய் கொடுத்தேன். வீட்டில் சாக்லெட் கொண்டாட்டம். அதன் பிறகு தினமணி கதிரில் அதே வருடம் என் சிறுகதையும், நாபாவின் தீபம் பத்திரிகையில் முதல் பரிசுக் கட்டுரையும் வெளியாயின. அச்சில் பார்க்கிற சந்தோஷம் அப்படி எழுதியவர்கள் அனுபவித்திருப்பார்கள். பல பத்திரிகைகளில் என் கதை கட்டுரைகள் வெளி வந்தன. ஆனால் என் ஆதர்ச விகடன் மட்டும் எனக்குப் போக்கு காட்டியது.

நான் 2004 ல் ஓய்வு பெற்றபோது என் ஆங்கிலம் பற்றிய அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்கி ஆபீசுக்குப் போய் அதன் ஆசிரியர் சீதாரவியைப் பார்த்தேன். அவர் என் முதல் நான்கு அத்தியாயங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, முடியாது என திருப்பிக் கொடுத்துவிட்டார். அவருடைய எடுத்தெறிந்து பேசும் குணம் எனக்கு வியப்பை உண்டாக்கியது. ஒரு சிரித்த முகம் இல்லை. என்ன கஷ்டமோ அவருக்கு.. நான் அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் நாபாவிடமும், சாவி அவர்களிடமும் பழகியிருக்கிறேன். சாவி அவர்களை நான் தினமணி கதிர் ஆபீசில் சந்தித்து என் கதையை அவரிடம் கொடுத்தேன். “ஏற்கனவே அந்தப் பத்திரிகையில் என் மூன்று கதைகள் வந்திருந்தன.. கதையைப் பார்த்துவிட்டு உதவி ஆசிரியரிடம் கொடுத்துவிட்டார். இரண்டு வாரங்களில் நான் கொடுத்த தலைப்பு மாற்றப்பட்டுஎலெக்ட்ரிக் டிரெயின் ஹீரோஎன வந்தது. என்னிடம்

2006ல் விகடனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெண்மணி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, அவள் விகடன் ஆசிரியர் உங்களிடம் பேசுவார் என்றார். மாலையில் அதன் படியே ஆசிரியர் என்னிடம் எப்படிப்பட்ட தொடர் வேண்டும், நீங்கள் எப்படி எழுதப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் சொன்னதும் அவர் இரண்டு அத்தியாயங்களை எழுதி வாருங்கள் என்றார். அவர் சொன்னபடி முழு மூச்சாக இரண்டு நாளில் எழுதி, கிரீம்ஸ் சாலையில் இருந்த விகடன் ஆபீசுக்குப் போனேன். ஆபீஸ் பல கம்ப்யூட்டர்கள் சகிதம் ஹைடெக்காக இருந்தது.
அவள் அலுவலகத்தில் ஆசிரியர் .கா. சிவஞானத்தைச் சந்தித்தேன். அத்தியாயங்களைக் கொடுத்தேன். அவர் முகத்தைப் பார்த்தேன் மலர்ச்சி காணப்பட்டது. நான் நான்கு கேரக்டர்கள் பேசுவதாக எழுதியிருந்தேன். அதில் ஒரு கேரக்டர் வேண்டாம், மூன்றாக மாற்றி மீண்டும் எழூதி வாருங்கள் என்றார். அப்படியே செய்தேன். அது முதல் என் ஆங்கிலம் பற்றிய தொடர் அவள் விகடனில் வெளிவந்தது. கைப்பிரதிதான். அதனால் சிவஞானம் என்னை முதலில் ஒரு கேமிரா மொபலை வாங்கிக்கொள்ளச் சொன்னார். கம்ப்யூட்டரில் டைப் அடிக்கத் தெரியாது என்றதும், கற்றுக்கொள்ளச் சொன்னார்.

என் வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தும் மகள்தான் அதிகம் பயன்படுத்தினாள். தமிழ் ஃபான்ட் இல்லை. சிவஞானம் ஒரு ஃபான்டை தரவிரக்கம் செய்துகொள்ளச் சொன்னார். இருந்தாலும் 33 இதழ்கள் கையால் எழுதிதான் கொடுத்தேன்..

சிவஞானம் அருமையான எடிடர். அற்புதமான மனிதர். நான் எழுதியவற்றில் கையே வைக்கவில்லை. அவருடைய உதவி ஆசிரியர் தயாமலர் என்னிடம் சில பகுதிகளின் சந்தேகங்களை போனில் கேட்பார். போனிலேயே மாற்றிச் சொல்வேன். அவர் குறிப்பெடுத்து அவ்வாறே வெளிவரும்.
அதன் பிறகு நான் 2013 ல் லேப்டாப் வாங்கிக்கொண்டேன்.
இப்போது கிண்டிலில் KDP யில் நிறைய பேர் எழுதி மின்னூல் வெளியிடுகிறார்கள். சிலரின் தமிழ் தமாஷாக இருக்கிறது. இருந்தாலும் புத்தகமாகப் பார்த்துவிடுகிறார்கள். ஒருவேளை பத்திரிகைக்கு அனுப்பி தோற்றவர்களாக இருக்கக்கூடும்.

ஒருமுறை நான் தீபம் ஆபீசில் நாபாவை சந்தித்தேன்.
சாய்ராம், இந்த வரியைப் படிங்கஎன்று யாரோ எழுதிய கதைப் பிரதியைக் காண்பித்தார். நான் சரியாக இருக்கிறது என்றேன்.
அவர் இரண்டு மணி அடித்து ஓய்ந்தது என்று எழுதியிருக்கார். 11, 12 மணி அடித்தால்தான் ஓய்ந்தது என எழுதலாம். இரண்டே மணி அடித்தால்?” என்று அவர் விளக்கியதும் நான் அவரை வியந்தேன்.
எடிடர்கள் ன்பவர்கள் நல்ல தமிழ் படித்திருக்கவேண்டும். இப்போது சில பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்கள் கூட அப்படி இல்லை.


Tuesday, January 8, 2019

மண்ணில் விழாது வானம்

                                                           2. நான் ஆசிரியரானேன்


அந்த மார்கழிக் காலையின் குளுமையில் கிராமத்து வீட்டு வெரந்தாவின் திண்ணை மேல் கால் குவித்து நண்பனின் வரவுக்காகக் காத்திருந்தேன். மண் வாசனை மூக்கில், அதனுடன் சாணியில் நிற்கவைத்த பூசனிப்பூவின் அதற்கே உரித்தான மணம். நான் மூச்சிழுத்து வெளிவிட்டேன். என் வயது 10. பள்ளியில் ஐந்தாம் வகுப்பு. விடுமுறையில் பொழுது போகவில்லை. நண்பன் சீனு திண்ணைக்கு வந்து, தான் ஓட்டி வந்த டயர் சக்கரத்தை சாய்த்து நிற்க வைத்தான்.

“வாடா .. சக்கரம் ஓட்டலாம்” என்றான்,

“என் சக்கரம் டயர் கிழிஞ்சிடுச்சுடா..அப்பா இன்னொரு டயர் குடுக்குறேனு சொல்லியிருக்கார். இன்னிக்கு திண்ணை மேலயே விளையாடலாம்.”

“டீச்சர் விளையாட்டு ஆடலாமா?” என்றான் சீனு.
வகுப்புக்கு நேற்று வந்த பெண் டீச்சர் புதுசு. “அவங்க நின்ன விதம் இப்படி” என்று நடித்துக் காட்டினேன்.

சீனு அந்த டீச்சர் போலவே பேசிக் காட்டினான்.
இருவரும் சிரித்தோம்

நான் வீட்டினுள் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தேன். “நான்தான் டீச்சர். நீ என் கிட்ட படிக்கிறவன். விளையாடலாமா?”
விளையாடினோம்.

இப்போது நினைக்கிறேன். இந்த விளையாட்டை ஆடாத இளம் வயதுக்காரர்கள் இல்லை எனலாம். என் மகள்கள், உங்கள் குழந்தைகள், என் பேத்திகள் என்று அந்த சிறுவயதில்
ஜீனில் எல்லாரிடமும் அந்த விளையாட்டு இருக்கிறது.

இப்படித்தான் எனக்குள் ஆசிரியர் ஆவதற்கான விதை ஊன்றப்படிருக்கிறது. இதை நான் அப்போது அந்த வயதில் அறிந்திருக்கவில்லை.
கல்லூரியில் பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படிப்பில் பத்து மதிப்பெண்ணில் முதல் வகுப்பு தேர்ச்சியைக் கோட்டைவிட்டேன். இப்போது போல 1966 ல் கம்பார்ட்மெண்ட் சிஸ்டத்தில் ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எழுதுவது போன்ற சலுகை கிடையாது. இம்ப்ரூவ்மெண்ட் சிஸ்டமும் கிடையாது. என்னுடைய எம்.எஸ்ஸி படிக்கும் கனவு பலிக்கவில்லை. என் ஆசிரியராகும் கனவும் போச்சு.

என் நண்பர்கள் எல்லோரும் உடனடியாக அன்று வா வா என்று அழைத்த பள்ளி ஆசிரியர் வேலையில் அன்ட்ரெயிண்டு ஆசிரியர்களாக அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். நான் யோசித்து அப்படி சேரும் சமயத்தில் எங்கள் ஊர் அருகில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை.
 வேலூரில் இருந்த முதன்மை கல்வி அலுவலர் (CEO)முன் போய் நின்றேன்.
அவர்: பாருப்பா.. திருப்பத்தூர் வட்டாரத்தில் எல்லா அரசுப் பள்ளிகளிலும் சயன்ஸ் டீச்சர் போஸ்ட் ஃபுல். உனக்கு ஜோலார்பேட்டையில்தான் ஒரு போஸ்ட் இருக்கு.

நான்: பரவாயில்லை சார். அதிலியே கொடுங்க.

அவர்: அது ஒரு மாதிரியான பள்ளி. நிறைய பேர் அந்தப் பள்ளி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நீ கொடுங்கனு சொல்றே. அந்த ஊர்  தி.க ஆளுங்க இருக்கிற இடம். நீயோ பிராமின். பார்த்து நடந்துக்கோ

நான்: சரி, சார்.

இப்படித்தான் நான் அன்ட்ரெயின்டு ஆசிரியரானேன்.

பள்ளியில் நான் சேர்ந்தபோது எனக்கு பத்தாம் வகுப்பு  எஃப் செக்‌ஷன் கொடுத்தார்கள். நான் சயன்ஸ் போதிக்கவேண்டும். எனக்கு வயது 20. அந்த வகுப்பில் ஃபெயிலானவர்கள் அதிகம். அப்போதெல்லாம் 11 வதுதான் SSLC. 18 வயது மணவர்கள். என்னைவிட திடகாத்திரமாக இருந்தார்கள். நான் பாடம் நடத்த ஆரம்பித்ததும் இரண்டு மாணவர்கள் என் பெர்மிஷன் இல்லாமலேயே வெளியே போனார்கள். நான் வெகு சின்சியராக  கரும்பலகையில் ஐந்து நிமிடம் ஒரு கருவியின் படம் வரைந்து திரும்பினால் பாதி வகுப்பு காலி!
ஓ! ஜோலார்ப்பேட்டை பள்ளி இப்படிப்பட்டதா என்று புரிந்தது. ஆனால் உள்ளே இருந்தவர்களுக்குப் பாடம் நடத்தினேன்.