(மல்லிகை மகள் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை)
"தாத்தா, என்ன எப்போது பார்த்தாலும் ஜன்னலையே
பார்த்துக்கொண்டிருக்கே!" என்றவாறு அருகில் வந்தாள் என் பேத்தி.
" பறவை பார்க்கிறேன், கண்ணு! அது ஒருவகையான தியானம் எனக்கு" என்றேன் நான்.
" தியானம்னா கண்ணை மூடிக்கணும்.
நீ கண்ணைத் திறந்து இல்ல பார்க்கறே!"
எட்டு வயதுப் பேத்திக்கு எப்படி
புரியவைப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அவளே ஜன்னலைப் பார்த்துக் கத்தினாள். " தாத்தா, அதோ பார் வெள்ளைப் பறவை!"
" அப்படியானால் என் ஸ்கோர் 40 ப்ளஸ் 5, 45 "
" வெரி இன்டிரஸ்டிங்! நானும் உன்
கூட எண்ணுகிறேன்" என்று என் படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள்.
" ‘போர்‘ அடிச்சா நீ என்ன பண்ணுவே?"
என்று கேட்டேன்.
" விளையாட போயிடுவேன். அம்மா போனில்
கேம் விளையாடுவேன். இல்லன்னா டிவிதான் ரொம்ப நேரம் பார்ப்பேன்"
சிறுவயதினர் மட்டுமல்ல,
பெரியவர்கள் கூட இப்படித்தான்
நடந்து கொள்கிறார்கள். நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் வீட்டிலும் வெளியிலும்
நடக்கின்றன. இந்த அவசர யுகத்தில் அவற்றை உற்று நோக்கும் திறனை நாம் இழந்துவிட்டிருக்கிறோம்.
தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து, அல்லது செல்போனை நோண்டிக்கொண்டு நிறையப் பேர் நேரத்தை வீணடித்துக்
கொண்டிருக்கிறோம். அதனால் மனமும் உடலும் கூட ஒரு சோர்வான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.
அதை உணர்ந்தும் அந்த சோர்வை அகற்றுவதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல், ‘ ’எனக்கு நேரம் போகவில்லை‘ என்று அதே தொலைக்காட்சிப் பெட்டி-செல்போன் முன்தான் சரணடைகிறோம்.
இன்று தனிப்பட்ட வீடுகளில் வசிக்கும் கலாச்சாரம்
போய் அடுக்குமாடி வீடுகளுக்கு மாறிக்கொண்டிருக்கிறோம். தனி வீடுகளில் இருக்கும் சுதந்திரம் அடுக்குமாடி
வீடுகளில் இல்லைதான். மொட்டை மாடியை அடுக்குமாடிக்காரர்கள் தனிப்பட்ட முறையில் சொந்தம்
கொண்டாட முடியாது. ஆனால் தனிவீட்டு மொட்டை மாடியை துணி உலர்த்துவதற்கும், வடாம் காயப்போடுவதற்கும்தான்
பயன்படுத்துகிறார்கள்.
அங்கே ஆகாயம் என்று ஒன்று இருப்பதை
மறந்துவிட்டு, வெயிலுக்கு பயந்து இறங்கிவிடுகிறார்கள். இளங்காலை அல்லது சாயங்கால வேளைகளில் ஆகாயத்தை
ரசிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?
எத்தனை விதமான வடிவங்களில் மேகங்கள்
உலா அங்கே!
எத்தனை விதமான பறவைகள் அங்கே பறந்து
போவதை நின்று நிதானமாக ரசித்து இருக்கிறோமா?
அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களைப்
பற்றி சொல்லவே வேண்டாம். வீடு, அலுவலகம்(அல்லது பள்ளி), தொலைக்காட்சிப் பெட்டி,ஸ்மார்ட் போன் என்று எல்லா வயதினரும் அடங்கிவிடுகிறோம்.
எந்த வீட்டில் வசித்தாலும் ஜன்னல்
என்று ஒன்று இருக்கிறதே!
ஜன்னல்!
ஆகா! நம் வீட்டிலேயே அழகான இடம்
அதுதான் என்பேன். அதன் வழியாக பறவை பார்த்தல் ஒரு சந்தோஷமான அனுபவம்! " போர் அடிக்கிறது
வாழ்க்கை" என்பதை விரட்டியடிக்க நான் கண்டுபிடித்திருக்கும் மந்திரம் இந்த பறவை
பார்த்தல் .ஓய்வு பெற்றவர்கள் பொழுது போகவில்லை என்று சொல்லாமல் இதைக் கடைப்பிடிக்கலாம்.
பணிக்குப் போகிறவர்கள் ஓய்வு நாளில் பறவை பார்க்கலாம்.
நமக்கு பொருத்தமான நேரத்தை தேர்வு
செய்து கொண்டு பறவை பார்த்தலைச் செய்யலாம்.
கட்டில் தலைமாட்டில் ஒரு தலையணையை
சாய்த்து வைத்துக் கொண்டு, அதில் சாய்ந்தவாறு ஜன்னலில் பறவைகளை எண்ணவேண்டும்.
மனதையும் உடலையும் ரிலாக்ஸாக வைத்துக்
கொண்டு ஜன்னலைப் பாருங்கள்.
வலப்புறமும், இடப்புறமும், மேலும், கீழும் என பறவைகள் அவ்வப்போது
பறப்பதை உற்றுப் பாருங்கள்.
ஒன்று, இரண்டு என எண்ண ஆரம்பியுங்கள்.
அப்படி எண்ணுவதை இடது கையால் காற்றில் எண்களை எழுதுங்கள்.
ஏன் இடது கை தெரியுமா?
அதுதான் நமது வலப்பக்க மூளையை
கன்ட்ரோல் செய்கிறது. வலது கையால் அப்படி செய்தால் அது இடது பக்கத்தைப் பார்த்துக்
கொள்கிறது. நிறையப் பேர் வலது கைக்காரர்கள் என்பதால், இடது பக்க மூளைதான் ஆக்டிவாக
இருக்கிறது.
கையால் பைகளைத் தூக்கும் போது
கூட வலது, இடது என மாற்றி பாரம் சுமத்தல் நல்லது.
அதன்படி&&
இடது கையால் காற்றில் எத்தனை பறவை
என்று எழுதுங்கள். பிறகு அதே போல் வலது கையால் காற்றில் எழுதுங்கள்.
சில சமயம் இரண்டு, மூன்று பறவை பறக்கும். சிலபோது
கும்பலாக, கூட்டமாகச் செல்லும். அப்போது நமது ஸ்கோர் அதிகமாகி மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
நாமே இதில் சில விதிகளைச் சேர்த்துக்
கொள்ளலாம். வெள்ளைப் பறவை பறந்தால் 5 ஸ்கோர். ஆகாய விமானம் பார்த்தால் 10 ஸ்கோர்.
50, 100 என்று எண்ணிக்கை வரும் போது
டென்டுல்கர் பேட்டை உயர்த்துவதைப் போல ஜன்னலுக்கு கையை உயர்த்தி நன்றி தெரிவிக்கலாம்.
காலை 7 மணி 9 மணி வரை பார்த்தால் நிறைய ஸ்கோர்
கிடைக்கும். இடையில் நம் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். அதே போல் மாலையில் 5 மணி முதல் பறவைகளை அதிகமாக பார்க்கலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு
கற்றுக் கொடுத்தால் நமக்கு பதிலாக அருமையாக பறவை பார்ப்பார்கள். அவர்களிடம் ஸ்கோர்
வாங்கிக் கொள்ளலாம். குழந்தைகள் வெள்ளைப் பறவை பார்த்துவிட்டு மகிழ்ச்சிக் கூச்சல்
போடுவதை ரசிக்கலாம். ஆகாய விமானத்தை ஜன்னலில் பார்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அத்தனை
சந்தோஷம் அவர்களுக்கு.
என் பேத்திக்கு இது பழகிப் போய்
ஒரு முறை விடுமுறைக்கு சென்னை வந்துவிட்டு பெங்களூர் சென்ற போது, ரயில் ஜன்னலில் பறவைகளைப் பார்த்துவிட்டு
ரயிலில் இருந்தே எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள், 1065 என்று. குழந்தைகளுக்கு உற்று
நோக்கும் திறன் கூட வளர்கிறது. அவள் அம்மா அனுவுக்கு அன்றைய பயணம் தொந்திரவு இல்லாமல்
இருந்ததாம்.
இந்த ஸ்கோர் எண்ணுவதை + என்றும்,
--_ என்றும் கூட வகுத்துக்
கொள்ளலாம்.
வலது புறமிருந்து இடது புறம் _
இடது புறமிருந்து வலது புறம்
+
நம்மிடம் இருந்து விலகிப் போனால்
_
நம்மை நோக்கி வந்தால் +
நமது ஸ்கோர் அன்றைய தினம் பிளஸ்ஸா,
மைனஸா என்று கூட பார்த்துக்
கொள்ளலாம்.
நேரம் போகவில்லை என்பவர்கள் டிவி,
ஸ்மார்ட் போன் முன்பாக
உட்காருவதை விட இந்த பறவை பார்த்தலை ஒரு புது மாதிரியான தியான யோகாவாக ட்ரை பண்ணிப்
பாருங்களேன்!
சுவாரசியமாக இருக்கும்......
No comments:
Post a Comment