பாரதி மகத்துவம்
(1983
மே மாத கணையாழி இதழில் பாரதி நூற்றாண்டின்போது நான் எழுதிய கவிதை)
கோரஸ்: இன்னும்
சில கணங்களில்
ஒரு துயரம் நடக்கிறது…..
குரல்
1: ஒரு
மாவீரனுக்காக
எருமை மீதேறி
எளியோரை வீழ்த்துவோன்
யானையில் வருகிறான்!
குரல்
2: சோதிமிக்க மணிக்கவிஞன்;
பிள்ளைத்தமிழ் பாடியோர் நடுவில்
வாலிபத் தமிழ் பாடி
வீரமேற்றிய வித்தகக்கவி!
கோரஸ்: இன்னும்
சில கணங்களில்
ஒரு துயரம் நடக்கிறது…..
குரல் 1: ஒரு பொற்காலம்
அவன் காலத்தில் தொடங்கிற்று!
போயின ஓலைச்சுவடிகள்;
அழிந்தன இராமபாணப் புழுக்கள்!
குரல் 2: எச்சில்பட்டு வளர்ந்த தமிழ்
அச்சில் வந்தது அவன் நாளில்!
நிலைமண்டிலப் பாக்கள்
நிலைகுலைந்து போயின!
புதிய மொழி ஒன்று
புரிபடத் தொடங்கிற்று!
கோரஸ்: இன்னும்
சில கணங்களில்
ஒரு துயரம் நடக்கிறது…..
குரல் 3: அதோ!
தேரோடுவது போல
தேர்வீதியில் நடப்பவன் யார்?
குரல் 1:
அவனே பாரதி!
அதிசய சரக்கு!
அற்புத நாக்கு!
ஆழ்ந்த நோக்கு!
கோரஸ்: இன்னும்
சில கணங்களில்
ஒரு துயரம் நடக்கிறது…..
குரல் 2: அதோ பார்
ஒரு யானை!
தினசரி பழகிய
மனசறி யானை!
குரல் 3: மீசைக்கண்ணன் சந்நிதியில்
ஆசையாய் என்ன துதித்தானோ?
கண்ணன் மனநிலையைக்
கண்டுவந்துவிட்ட்டானோ!
குரல் 1: ‘காலருகே வாடா
சற்றே மிதிக்கின்றேன்!’
என்று அன்று
காலனை அழைத்துவிட்டான்!
யானை காலிலே வருகிறான் காலன்!
குரல் 2: புரிந்துகொள் பாரதி
தெரிந்துசெல் பாரதி!
சகுனிச் சூழ்ச்சிபோல்
காலன் வாகனம் மாற்றிவிட்டான்!
கோரஸ்: இன்னும்
சில கணங்களில்
ஒரு துயர்…….
குரல் 1: தினசரி
பழகிய
மனசறி யானைதான்
குரல் 2: மனமாறிப்
போனதுவோ
மா கவிஞன் வீழ்ந்தான்!
கோரஸ்: இன்னும்
சில நாளில்
அவன் மரணம் நிகழ்கிறது…
குரல் 1: தீயே!!
விரலை உன்னுள் வைத்து
அந்த நாளில்
நந்தலாலாவைத் தீண்டினான்!
உடலையே உனக்குத்
தந்து எந்த லாலாவைக் கண்டானோ!
பாதிப் பயணத்தில் அவனை
சோதியாக்கிவிட்டாயே!
குரல் 2: மரண தேவதையே
உனக்குப் புரியாது…
அவன் பிறப்பு
கவிதைக்கொரு சிறப்பு!
அவன் மரணச் சாம்பலில்
புதுத்தமிழ் ஜனிக்கும்
பாரதி ஆலமரத்தில்
வேர் பிடிக்க
நூறாயிரம் கவி விழுதுகள்
நூற்பு வேள்வி நடத்தும்!
குரல் 1: செல்லாம்மாளின்
குங்கும திலகம்
அழிந்தபோது
குரல் 2: தமிழன்னையின்
வீரதிலகம்
பறிபோயிற்று’’’’’’
கோரஸ்: தாசர்கள் புகழ்பாட
நேசர்கள் விழா எடுக்க
நூற்றாண்டுப் புழுதி
நேற்றோடு போயிற்று!
இனியும் ஒரு
தனி மனிதன்
உனை நினைப்பதன்றோ
நனிசிறந்த அஞ்சலி!!
***********
No comments:
Post a Comment