Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Tuesday, August 28, 2018

பாரதி மகத்துவம்


பாரதி மகத்துவம்

(1983 மே மாத கணையாழி இதழில் பாரதி நூற்றாண்டின்போது நான் எழுதிய கவிதை)

கோரஸ்இன்னும்
          சில கணங்களில்
          ஒரு துயரம் நடக்கிறது…..

குரல் 1: ஒரு
          மாவீரனுக்காக
          எருமை மீதேறி
          எளியோரை வீழ்த்துவோன்
          யானையில் வருகிறான்!

குரல் 2: சோதிமிக்க மணிக்கவிஞன்;
          பிள்ளைத்தமிழ் பாடியோர் நடுவில்
          வாலிபத் தமிழ் பாடி
          வீரமேற்றிய வித்தகக்கவி!

கோரஸ்: இன்னும்
          சில கணங்களில்
          ஒரு துயரம் நடக்கிறது…..

குரல் 1: ஒரு பொற்காலம்
          அவன் காலத்தில் தொடங்கிற்று!
          போயின ஓலைச்சுவடிகள்;
          அழிந்தன இராமபாணப் புழுக்கள்!

குரல் 2: எச்சில்பட்டு வளர்ந்த தமிழ்
          அச்சில் வந்தது அவன் நாளில்!
          நிலைமண்டிலப் பாக்கள்
          நிலைகுலைந்து போயின!
          புதிய மொழி ஒன்று
          புரிபடத் தொடங்கிற்று!
         
கோரஸ்: இன்னும்
          சில கணங்களில்
          ஒரு துயரம் நடக்கிறது…..

குரல் 3: அதோ!
          தேரோடுவது போல
          தேர்வீதியில் நடப்பவன் யார்?

குரல் 1:  அவனே பாரதி!
           அதிசய சரக்கு!
           அற்புத நாக்கு!
           ஆழ்ந்த நோக்கு!
  
கோரஸ்: இன்னும்
          சில கணங்களில்
          ஒரு துயரம் நடக்கிறது…..
  
குரல் 2:  அதோ பார்
               ஒரு யானை!
               தினசரி பழகிய
               மனசறி யானை!

குரல் 3:   மீசைக்கண்ணன் சந்நிதியில்
               ஆசையாய் என்ன துதித்தானோ?
                கண்ணன் மனநிலையைக்
               கண்டுவந்துவிட்ட்டானோ!

குரல் 1:  ‘காலருகே வாடா
                சற்றே மிதிக்கின்றேன்!’
                என்று அன்று
                காலனை அழைத்துவிட்டான்!
                யானை காலிலே வருகிறான் காலன்!
  
குரல் 2:  புரிந்துகொள் பாரதி
                தெரிந்துசெல் பாரதி!
                சகுனிச் சூழ்ச்சிபோல்
                காலன் வாகனம் மாற்றிவிட்டான்!
  
கோரஸ்:   இன்னும்
          சில கணங்களில்
                 ஒரு துயர்…….

குரல் 1:  தினசரி பழகிய
                மனசறி யானைதான்
   
குரல் 2:  மனமாறிப் போனதுவோ
                மா கவிஞன் வீழ்ந்தான்!
   
கோரஸ்: இன்னும்
               சில நாளில்
               அவன் மரணம் நிகழ்கிறது…
   
குரல் 1: தீயே!!
               விரலை உன்னுள் வைத்து
               அந்த நாளில்
               நந்தலாலாவைத் தீண்டினான்!
               உடலையே உனக்குத்
               தந்து எந்த லாலாவைக் கண்டானோ!
               பாதிப் பயணத்தில் அவனை
               சோதியாக்கிவிட்டாயே!
   
குரல்  2:  மரண தேவதையே
               உனக்குப் புரியாது…
               அவன் பிறப்பு
               கவிதைக்கொரு சிறப்பு!
               அவன் மரணச் சாம்பலில்
               புதுத்தமிழ் ஜனிக்கும்
               பாரதி ஆலமரத்தில்
               வேர் பிடிக்க
               நூறாயிரம் கவி விழுதுகள்
               நூற்பு வேள்வி நடத்தும்!

குரல் 1:  செல்லாம்மாளின்
               குங்கும திலகம்
               அழிந்தபோது
   
குரல் 2: தமிழன்னையின்
              வீரதிலகம்
              பறிபோயிற்று’’’’’’
   
கோரஸ்: தாசர்கள் புகழ்பாட
              நேசர்கள் விழா எடுக்க
              நூற்றாண்டுப் புழுதி
              நேற்றோடு போயிற்று!
              இனியும் ஒரு
              தனி மனிதன்
              உனை நினைப்பதன்றோ
              நனிசிறந்த அஞ்சலி!!
***********

No comments:

Post a Comment