Writer and Educationist எழுத்தாளர் கல்வியாளர்

Sunday, January 12, 2020


நான் கண்ட பொங்கல்


எனக்கு ஒன்பது வயது இருக்கும். கிராமத்தில் சின்ன ஜமிந்தார் வீடு எங்களுடையது. என் அப்பாவை சின்ன ஐயரு எனக் குறிப்பிட்டு பேசுவார்கள். என் தாத்தாவின் அண்ணாவை பெரிய ஐயர் என்பார்கள். காதில் சிவப்புக் கல் கடுக்கன் போட்டு கம்பீரமாக இருப்பார். அவர் குடுமியை அவிழ்த்து முடிந்து கொள்ளும் அழகே தனி.  என் அப்பாவுக்கு 10 வயது இருக்கும் போதே தாத்தா காலமாகிவிட்டார்.
பெரிய தாத்தா வீட்டையும், எங்கள் வீட்டையும் நடுவில் ஒரு சுவர் பிரித்திருந்தது. பழங்காலத் தூண்கள் நின்றபடி ஹஜாரம் இருக்கும். அதாவது பெரிய ஹால். ஒரு தூணில் தான் என் கிராமத்து படிப்பு.இப்போதும் கிராமத்துக்குப் போனால் அந்த தூணை தடவிப் பார்ப்பதில் மனதில் சந்தோஷமாக இருக்கும். மண்ணெண்ணெய் விளக்கில் நான் படித்ததை நினைப்பேன். அந்த ஹஜாரத்தில் ஒரு பக்கம் காங்குகள், அதில் நெல் நிரம்பி இருக்கும். பொங்கல் சமயத்தில் வெல்ல உருண்டைகள் தரையில் பரப்பி வைக்கப்பட்டு வாசனை மூக்கைத் துளைக்கும். சுமார் நூறு உருண்டைகள். மிகுதியாக உள்ளதை விற்கும் பொறுப்பு அம்மாவுடையது. விலை பேச வியாபாரிகள் வருவார்கள். அம்மாவுக்கு சரியான தமிழ் பேச வராது. கன்னடம் படித்த பெங்களூர்காரர். பேரம் பேசி விற்றுவிடுவார், தன் வீட்டுக்கு வருடத்துக்கு வேண்டிய உருண்டைகளை வைத்துக் கொண்டு.              
            ஹஜாரத்துக்கு கீழ் சிறிய ஹால் உண்டு. அங்கே கரும்புகள் தோகைகளுடன் சுவரில் சாய்ந்து கொண்டிருக்கும். நினைக்கும் போதெல்லாம் ஒரு அரிவாளை எடுத்து, வீட்டுக்கு வரும் நிலத்துக்காரரை கொண்டு கரும்பை துண்டுகளாக வெட்டிக் கொள்வேன். முற்றத்தில் ஒரு தூணில் சாய்ந்து, நானும் என் நண்பர்களும் பேசிக்கொண்டே தின்போம். அடிக்கரும்பு தின்ன போட்டி நடக்கும்.சிலசமயம் சண்டை கூட வந்துவிடும். நான் போட்டி போடமாட்டேன். என் வீட்டுக் கரும்பை நான் எப்போது வேணுமானாலும் சாப்பிடலாமே! அப்பாவை பார்க்க வருகிறவர்கள், தலையைச் சொரிந்தால் அவர்களுக்கு ஒரு பெரிய கரும்பைக் கொடுத்துவிடுவார்.
              பின்னாளில் அப்பா ஒரு கரும்பு பிழியும் எந்திரத்தை வாங்கினார். கரும்பு வெட்டும் சீசனில், அதை வாடகைக்குத் தருவார். அவர்கள் வெல்ல உருண்டைகளாக தரும் வெல்லமே ஒரு ரூம் நிறைந்துவிடும். அதை விற்பது அம்மாவின் வேலை. நெல் வாங்க கூட வியாபாரி ஒருவர் வருவார். வந்த பணம் தங்கமாக மாறிவிடும்! அதை பின்னாளில் அறிந்தேன். புது நெல் மிஷினில் அரைக்கப்பட்டு, அந்த அரிசி ஒரு ரூமில் ஒரு அடி உயரத்துக்கு பரப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் நானும், தம்பியும்,குதித்து விளையாடுவோம். மிஷின் சூட்டில் அரிசி வெது வெதுப்பாக இருப்பதே ஒரு சுகம்! ஒரு மூட்டை அரிசியை பெங்களுருக்கு என் பாட்டி வீட்டுக்கு அப்பா டிவிஎஸ்ஸில் அனுப்பிவிடுவார். வீட்டில் கிச்சலி சம்பா சாதம்தான். நிலத்துக்காரர்களுக்கும் தினமும் சாப்பாட்டுக் கடை நடந்தவாறு இருக்கும்.
               பெரிய தாத்தா வீட்டில் பொங்கல் பானை வைத்து கும்பிடுவார்கள்.  மாட்டுப் பொங்கல் அன்று, எங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வளாகத்தில் ஊரில் உள்ள மாடுகள் இருபத்தைந்தாவது குவிந்துவிடும். மாட்டுச் சொந்தக்காரர்கள் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, பின் வாசல் வழியாக ஓடவிடுவார்கள்.
                 வாசற்படியில் ஒரு சாணியில் வாழைப் பழத்தை நட்டு வைத்து, மாடுகளை ஓடவிடுவதற்கு முன் ஒரு போட்டி வைப்பார்கள். ஊரில் இருக்கும் இளவட்டங்கள் அந்த வாழைப் பழத்தை வாயால் கவ்வி எடுக்க வேண்டும். ஐந்து ஐந்து மாடுகள் பாய்ந்து வரும்போது கவ்வ வேண்டும். மாடு முட்டித் தள்ளிவிடும், அல்லது மிதித்துவிடும். வாயில் சாணி ஒட்டி  பலர் தோற்பார்கள். ஜெயித்தால் பத்து ரூபாய் என் அப்பா தருவார். இரண்டு மூன்று பேருக்கு அப்பா பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறேன்.. அந்தப் பத்து ரூபாய் இன்றைய ஐநூறு ரூபாய்க்கு சமம்.
       இப்போது மனைவி சொன்னாள். “அரிசி ஆகிவிட்டது. முருகன் கடைக்குப் போய் ஐந்து கிலோ பொன்னி அரிசியும், புது அரிசி அரை கிலோவும், ஒரு வெல்ல உருண்டயும் வாங்கி வாங்க!”
            நிலத்தை எல்லாம் விற்றுவிட்டு, சென்னைக்கு குடிவந்து விட்டதால், பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் இருக்கமுடியுமா என்ன? சென்னை லைஃப், அது சில ப்ளஸ்கள் கொண்டதுதானே! No regrets!!!




No comments:

Post a Comment